Tuesday, September 22, 2015

சிறுகதை: கொலையாளிக்கும் கொலைக்கும் கொல்லப்படுபவனுக்கும்



“என்னால ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியாது…உன்னைக் கடத்த சொன்னாங்க…கொலை செய்ய சொன்னாங்க…அவ்ளத்தான்”

“கொஞ்ச டைம் கொடுங்க. நான் பேசணும். சாகப் போறவனோட கடைசி ஆசைனு நினைச்சிக்குங்க சார்”

“பேசு…நீ பேசி முடிஞ்சோன உன் கழுத்தை இந்தக் கத்தியால அறுப்பேன்”

“எனக்கு ரெண்டு பிள்ளைங்க. இப்பத்தான் ஒன்னுக்கு 5 வயசு இன்னொன்னுக்கு 2 வயசு. மனைவி இல்ல. ஒரு விபத்துல செத்துட்டாங்க”

“உன் குடும்பக் கதைய ஏன் என்கிட்ட சொல்ற?”

“கேளுங்க சார்…ப்ளிஸ்… என்ன சாகடிக்கப் போற நீங்க யாருன்னும் தெரியல. ஏன் என்னைக் கொலை செய்யப் போறீங்கன்னும் தெரியல. உலகத்துல இப்படிப்பட்ட சாவுத்தான் கேவலமானதுன்னு நினைக்கறன் சார்”

“உனக்கே தெரியுதுல. அப்ப செத்துரு”

“ப்ளிஸ்…முதல்ல நான் பேசறத கேட்டுருங்க… எனக்கும் என் சொந்தக்காரவங்களுக்கும் நிறைய சொத்து பிரச்சனை. என் அக்காவோட பையன நான் படிக்க வைக்கலனு, என் அக்கா கோச்சிக்கிட்டுப் போச்சி. எனக்கு ஒரே மாமா அவரும் வெளிநாட்டுக்குப் போய்ட்டாரு. மத்தப்படி எல்லாமே தூரத்து சொந்தம்தான். இப்ப இவுங்க யாருகிட்டயும் உதவி கேட்கவும் முடியாது…யாரும் உதவிக்கும் வரமாட்டாங்க. என் பிள்ளைங்க அனாதையா நிக்குங்க சார்”

“டேய்ய்ய் உன் வாயில இந்தக் கத்திய சொருவி வயித்துல எடுத்துருவன்…நானும் அனாதைத்தான் தெரியுமா? யாரும் இல்லாத்தைப் பத்தி என்கிட்ட கதை அளக்காத…நான் மடிய மாட்டென்”

“அனாதையா வாழ்றதோடு கொடுமை உங்கள விட வேறு யாருக்கும் தெரியும் சார்? நீங்களே புரிஞ்சிக்கலன்னா எப்படி?”
“தெரியவும் வேணாம் புரியவும் வேணாம்…எனக்கு காசு கொடுத்துருக்காங்க. என் வேலைய செஞ்சிட்டு நான் போய்க்கிட்டே இருப்பேன்”

“சார் சார்…நீங்க கொலை செய்யும்போது உங்களால கொலை செய்யப்படறவனோட கண்ணைக் கடைசியா பார்த்திருக்கீங்களா?”

“இல்ல…ஏன்?”

“சார் ஒரு தடவ பாருங்க சார்…கொலை செய்றதுக்கு முன்னால என் கண்ணை மட்டும் பாருங்க…சார் வாழ்றதோட அருமை சாவின் கடைசி நுனிக்குப் போற வரைக்கும் தெரியாதாம்…நான் அங்கத்தான் சார் இருக்கென். எனக்கு நல்லா தெரியுது சார்”

“டேய்ய்ய்! சும்மா பேசிக்கிட்டு இருக்காத…எனக்கு எந்த ம…..தெரிய வேண்டாம்…எனக்கு மணியாச்சி”

“சார் உங்களுக்கொரு குடும்பம் மனைவி பிள்ளைங்க இருந்திருந்தா இப்படி யோசிப்பீங்களா?”