Tuesday, July 14, 2015

காக்கா முட்டை- அ.ராமசாமி அவர்களின் விமர்சனப் போக்குடன் ஒரு கண்ணோட்டம்

//இரக்கமற்ற நிலையில் குறுகிய இடங்களில் மூத்திர நெடியும்,அடைத்து வைக்கப்பட்ட பொருள்களும், சதா வெயில் தீண்டும் வெற்றுக் கூரைகளும் என ஆற்றோரங்களிலும் குப்பங்களிலும் தன் குடிசை வீட்டில் கிடைக்கும் சிறிய இடத்தில் வாழ்ந்து கழிக்கும் அடிமட்ட வேலைகள் செய்து, நகரத்தின் விளிம்பில் கண்டுக்கொள்ளப்படாமல் தவிக்கும் விளிம்புநிலை மனிதர்கள் உலகமயமாக்கலின் முன் எப்படிப் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பதை  ‘காக்கா முட்டை’ சொல்லிச் செல்கிறது.// அம்ருதா இதழில் பிரசுரமான எனது திரைவிமர்சனத்தின் நீக்கப்பட்ட  பகுதி.

திரைப்படங்களை அதன் அரசியல் போக்குடன் அது தொட்டுப் பேசும் சமூக சூழலுடன், படமாக்குவதிலுள்ள தமிழ்ச்சினிமாவின் உள்ளார்ந்த நிலைபாடுகளுடன் இணைத்தே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தமிழ் சினிமாவை அது பேசும் நிஜத்துடன் முழுவதுமாகப் பொறுத்திப் பார்க்க முனையும்போது ஒரு சராசரி பொதுபார்வையாளனுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஒரு முழுமைக்கான நெருக்கம் அப்படத்தில் எதிர்பார்க்கும் அளவில் இருக்காது. ஆனால், அப்படத்தின் நேர்மை என்ன என்பதைத் தீர்மானிக்கும்போது, இயக்குனர், தயாரிப்பாளர், பொது அரசியல் என்பதனை ஒட்டி விமர்சிக்க இயல்கிறது.

ஒரு சினிமா உருவாவதன் பின்னணியிலுள்ள நிகழ்வு, புனைவு இவையிரண்டையும் ஆய்வாளர் அ.ராமசாமி  'ஒளிநிழல் உலகம்' எனும் தன் சினிமா கட்டுரை நூலில் இதனை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நான் அதனை விமர்சனப்பூர்வமான பார்வையுடன் அணுகி பார்க்கிறேன். எல்லாம் சினிமாக்கள்ளும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி புனைவொன்றை உருவாக்குகிறது. அப்புனைவு அப்படத்தின் நிகழ்வுடன் ஒட்டியும் அல்லது ஒட்டாமலும் போக வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக 'சென்னை அன்புடன் வரவேற்கிறது' எனும் படத்தின் நிகழ்வு என்னவென்றால் சென்னை நகர் சூழலில் கிராமங்களிலிருந்து வந்து வேலை செய்யும் மேன்ஷன்வாசிகளின் அலைக்கழிக்கப்படும் வாழ்க்கை. அந்த நிகழ்வை/கருத்தை மையமாகக் கொண்டு அத்தகைய சில நண்பர்களின் மேன்ஷன் வாழ்க்கை புனைவாகக் கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், இப்படத்தின் வெற்றி என்னவென்றால் இயக்குனர் ஏற்படுத்திய புனைவு அவருடைய சினிமா கருத்துடன்/நிகழ்வுடன் எந்த நெருடலும் இல்லாமல் இயந்து நிற்கிறது. உண்மைக்கு மிக நெருக்கத்தில் புனைவைக் கொண்டு வைக்கிறார். மையத்தைவிட்டு விலகாமல் அவ்வாழ்க்கையுடன் நம் பொதுபுத்தியும் அலைக்கழிக்கப்படுகின்றது.