Wednesday, December 31, 2014

எனது 2014ஆம் ஆண்டு : ஒரு மீள்பார்வை

எப்பொழுதும் போல அல்லாமல் இந்த 2014ஆம் ஆண்டு எனக்கு மிக முக்கியமான நினைவுகளை விட்டுச் சென்றுள்ளது. சிலரைப் புதிதாகப் பெற்றேன்; சிலரை இழந்தேன். சில இனிமையான அனுபவங்கள்; சில கசப்பான அனுபவங்கள். 

தேவைப்படும்போது பாராட்டிக்கொண்டும் தேவைப்படாதபோது தூற்றிக்கொண்டும் திரியும் உலகத்திடம் நன்றியுணர்ச்சியோடு இல்லாமல் போனதை நினைத்து மகிழ்ச்சியே கொள்கிறேன். இப்பொழுது ஒரு புத்துணர்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி விரைகிறேன். எந்த அழுத்தமும் இல்லை, எந்த நெருக்குதலும் இல்லை. எனக்காக நான் சிந்திக்கிறேன், சொந்த கால் மண்ணில் ஆழ வேரூன்றி நிற்பதன் மூலம் தரும் கதகதப்பிற்கு நிகராக வேறென்ன சுதந்திரம் இருக்கிறது என்பதைப் போன்று தோன்றுகிறது.

எப்பொழுதுமே ஒவ்வொரு வருடமும் பல மன வருத்தங்களையும் சண்டைகளையும் சந்தித்து சந்தித்து மனம் அடைந்த பக்குவம் எனக்குக் கிடைத்த கொடை என்றே சொல்ல வேண்டும். மனிதர்களைப் புரிந்துகொள்ளும் தருணம் மகத்தானது. குறிப்பாக அடுத்தவன் முதுகில் தெரியும் வடுக்களைக் கண்டு அங்கலாய்க்கும் உலகம் கொடூரமானதுதான். எனக்கு உலகின் பொதுபுத்தி பற்றி கவலையில்லை. என் எழுத்தின் ஊடாக அந்தப் பொதுபுத்தியைக் கொஞ்சம் கீறிப்பார்க்கவே முயல்கிறேன்.
நான் ஒழுக்கமாக வாழ்ந்தேன்; வாழ்கிறேன் என்ற எந்தப் போலித்தனமும் அறிவிப்பும் என்னிடம் இல்லை. நான் நானாக எனது குறைகளுடன் என் பலவீனங்களுடன் எனது இயல்புடன், சிலருக்குப் பிடித்ததைப் போலவும் பலருக்குப் பிடிக்காததைப் போலவும் வாழவே செய்கிறேன். உங்களுக்கு நடக்க, சிரிக்க, செயல்பட இந்த உலகில் இடம் இருப்பதைப் போல எனக்கும் உண்டு.

எல்லோரும் புகழும்படி வாழ வேண்டும் அல்லது எல்லோரும் இகழும்படி வாழ வேண்டும் என்கிற எந்தக் கொள்கையும் இல்லாமல் வாழ்ந்தோம், செம்மையாக வாழ்ந்தோம் என்றிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். நம் வாழ்வு கலைக்கும், மனித சிந்தனைக்கும், சமூகத்திற்கும் ஏதாவது ஒரு துரும்பை அசைத்த வகையிலான ஒரு மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என உணர்கிறேன்.

 ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் கடந்த பாதையை நினைவுக்கூரும்போது மனம் சட்டென ஒரு கணமான மூட்டையைக் கீழே இறக்கி வைப்பது போன்றே தோன்றுகிறது.

இந்த மீள்பார்வையை, கடந்து வந்த பாதையைச் சடங்கிற்காக ஒருமுறை திரும்பிப் பார்ப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 
  1. அப்பாவின் மரணம்

என்னை அதிகம் பாதித்த சம்பவம் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்பாவின் திடீர் மரணம் ஆகும். 3 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடியிருந்துவிட்டு இறந்துவிட்டார். அப்பா இறக்கும்வரை சுமார் 2 மணி நேரம் உடன் இருந்தேன். மருத்துவர் என் அப்பா இறந்துவிட்டார் எனச் சொன்னதும் உள்ளே சென்று பார்த்தேன். கண்களில் நீர் ஒழுகியிருந்தது. எத்தனையோ மணி நேரம் சுய நினைவில்லாமல் இருந்தவர் கடைசியாக மரணிக்கும் முன் ஒரு கணம் நினைவு வந்து வலியால் போராடியிருக்கக்கூடும். விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் அழுதிருக்கிறார். அந்த மரணத்தைவிட அவர் கடைசியாக விட்ட கண்ணீர் மனத்தை உலுக்கியது. அப்பா எல்லாமுமான மனிதர். அந்த இழப்பிற்கு நிகரான வேறு எந்த இழப்பையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவரே போய்விட்ட பிறகு வேறு யார் என்னை நீங்கிப் போனால் என்ன என்பதைப் போல இருந்தது.

2. செந்தமிழ் பயிற்றி உருவாக்கம்

கடந்த வருடம் கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடக்குழுவின் பொருளாளராக நியமிக்கப்பட்ட தருணம் எனக்கு உவப்பாக இருந்தது. தமிழ் மொழி சார்ந்து தீவிரமாக இயங்கும் பல இளைஞர்களுடன் ஒன்றிணைந்தேன். ஒரு குடும்பமாக அனைவரும் நெருக்கமாயினர். ஐயா திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்கள் எங்கள் அனைவரைரின் உழைப்பையும் கோரும் வகையில் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான ‘செந்தமிழ் பயிற்றி’ எனும் யூ.பி.எஸ்.ஆர் வழிகாட்டி நூல் ஒன்றினை உருவாக்குவதற்கு வாய்ப்பளித்தார். ஏறக்குறைய இரண்டு மாதங்களில் பலமுறை சந்தித்து அந்த நூல் தொடர்பான படைப்புகளைத் தயாரித்தோம். இனிமையான நினைவுகளுடன் கூடிய உழைப்பு அது.

3. சிறுவர் நாவல்

மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் எனது மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் (தமிழ் தொடர்நாவல் என்பதன் மூலம் முதல் முறை என்கிற கவனத்தைப் பெறுகிறது) இவ்வருடத்தின் மிகப்பெரிய முயற்சியாகக் கருதுகிறேன். பல மாணவர்கள் படித்துவிட்டுத் தொடர்ச்சியாக அழைத்து வாழ்த்தையும் ஆர்வத்தையும் தெரிவித்துக் கொண்டனர். சிலர் அடுத்த பாகம் இரண்டு நாவலுக்காக்க் காத்திருக்கிறோம் எனக் கூறினர். இந்தச் சிறுவர் நாவலை விற்க எனக்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விற்பனையாளர் இல்லாமல் இந்தச் சிறுவர் மர்ம நாவலைச் சொந்த முயற்சியிலேயே நாடேங்கிலும் விற்பனை செய்தேன். அதற்கு உறுத்துணையாக இருந்தவர்கள் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்மொழிப் பாடக்குழு உறுப்பினர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களுக்கு என் அன்பு. மேலும் இந்தச் சிறுவர் நாவல் வெளியீட்டுக்கு வந்த 300க்கும் மேற்பட்டோருக்கும் என் அன்பும் நன்றியும். மண்டமபே நிறைந்து உட்கார இடமில்லாமல் நின்றிருந்தவர்களும் உண்டு. என் மனமும் நிறைந்தே இருந்தது.