Tuesday, November 25, 2014

டிசம்பர் விடுமுறை என்பது சிறுவர்கள் முளைக்கும் மாதம்


நேற்று ஒரு திருமண விருந்தில் எனக்கு எதிராக அமர்ந்திருந்த பள்ளிச் சிறுமி ஒருவளிடம் சிரித்து வைத்தேன். பதிலுக்கு அவளும் சிரித்ததும் பேசத் துவங்கினேன். பேச்சின் இறுதியில் பொது அறிவுக்காக, பள்ளி நாள் பிடித்திருக்கிறதா அல்லது பள்ளி விடுமுறை பிடித்திருக்கிறதா எனக் கேட்டேன். கொஞ்சமும் தயங்காமல் கண்கள் விரிய உதடு சிரிக்கப் பள்ளி விடுமுறைத்தான் எனச் சொன்னாள்.

சட்டென்று எனக்குள்ளும் இருந்த சிறுவன் மனம் மலர் சிரித்தான். அவள் திரும்ப என்னிடம் அதே கேள்வியைக் கேட்டாள். வேடிக்கையாக இருந்தது. நானும் சிரித்துக் கொண்டே நிச்சயம் விடுமுறைத்தான் என்றேன். கைக்கழுவிவிட்டுப் போகும்போது கையசைத்து மீண்டும் சிரித்தாள்.

டிசம்பர் மாதம் முழுவதும் திடீரென நம் நாட்டில் சிறுவர்கள் அதிகமாகிவிட்டதைப் போல தோன்றுவதை யாராலும் தவிர்க்க முடியாது. அத்தனை நாள் அமைதியாக இருந்த தெருக்கள் இனி குழந்தைகளின் சத்தத்தாலும் சிறுவர்களின் விளையாட்டுகளாலும் நிரம்பி வழியும். எப்பொழுதும் நம் வசிப்பிடங்களில் நிலவும் அமைதி இனி ஒருமாதத்திற்குச் சீர்குழைந்து போகும். சிறுவர்களின் அழுகையாலும் சிரிப்பாலும் புகார்களாலும் வசிப்பிடங்கள் திணறும்.

முன்பெல்லாம் விடுமுறை என்றால் நானும் அம்மாவும் பேருந்தில் ஏறி கோலாலம்பூரிலுள்ள பாட்டி வீட்டிற்குச் சென்று விடுவோம். அப்பொழுதெல்லாம் கோலாலம்பூர் பயணம் என்பது மிக நீண்ட பேருந்து பயணமாகும். வாய்நீர் ஒழுக தூங்கி வழிந்து போய் சேர்வதற்குள் அரைத்தூக்கம் கொடுத்த மயக்கத்தில் இருப்பேன். பாட்டி வாரி அணைத்து மடியில் வைத்துக்கொள்ளும் தருணத்திலிருந்து எனது டிசம்பர் விடுமுறை தொடங்கும்.

ஏனோ டிசம்பர் விடுமுறையில் நமது வீடுகள் துள்ளி எழுந்து எங்கேயோ ஓடிப்போவதற்குத் தயாராகிவிட்டதைப் போல செழிப்புடன் காட்சியளிக்கும். அத்தனை நாள் மௌனத்திற்குள் புதைந்திருந்த சிறுவர்கள் டிசம்பரில் கொஞ்சமாய் விழித்தெழுகிறார்கள். 7 மணிக்கு மேல் வீட்டுப்பாடங்களையே செய்து களைத்தவர்கள் இப்பொழுது தெருவில் ஓடியாடி மகிழ்வார்கள்.

சாதாரண நாட்களில் நகரம் குழந்தைகளை இழந்து வெறுமையில் பரப்பரப்புடன் இருக்கும். ஆனால், டிசம்பரில் எங்குப் பார்த்தாலும் சிறுவர்களாகத் தென்படுவார்கள். இது ஒரு மாயை அல்ல. நீங்கள் வேண்டுமென்றால் அதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ஒரு வருடம் அவர்களின் மீது ஒட்டிக்கிடந்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் ஒரு கணம் உதறித்தள்ளிவிட்டு கூட்டைவிட்டுப் பறந்த குருவிகளாக நகரம், வீடுகள், வசிப்பிடத் தெருக்கள், பேரங்காடிகள் எனப் பரவித் திரிகிறார்கள்.

இன்று போன ஒரு வசிப்பிடத்தில் சிறுவர்கள் ‘ஜூத்தா ரியா’ விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு சிறுவன் லங்காவி தீவைத் தான் வாங்கிவிட்டதாகும், இன்னொரு சிறுவன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைத் தான் இப்பொழுதுதான் வாங்கினேன் என்றும் மிகவும் சீரியசாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். என்னை நம்ப வைப்பதற்காக வாங்கிய ஆதாரங்களையும் எடுத்துக் காட்டினார்கள். இந்த விளையாட்டில் மட்டும்தான் நம் மாணவர்கள் தொடர்ப் பணக்காரர்களாக வலம் வருகிறார்கள். மதியங்களின் சோர்வையும் வெறுமையையும் கடத்தக்கூடிய ஒரே விளையாட்டு இதுதான். எவ்வளவு நேரம் விளையாடினாலும் முடியவே முடியாது. இப்படிப் பல விளையாட்டுகள் டிசம்பரில் கலைக்கட்டும்.