Tuesday, October 21, 2014

விவாகரத்து (திரைப்படம்): குடும்ப அமைப்பின் ஒற்றை குரல்

vivaagarathu 1‘வெண்ணிற இரவுகள்’ படத்திற்கு முன்பு மலேசியத் தமிழ் சினிமாவின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்ததில்லை. அதற்கு மூன்று முக்கியமான காரணங்களை என்னால் கூற முடியும். ஒன்று, மலேசியத்தன்மை குறைந்து தமிழ்நாட்டு சாயல் அதிகமாகப் படிந்திருக்கும் நிலையில் அது மலேசிய சினிமா என்கிற அடையாளத்தை இழக்க நேர்ந்துவிடும். இரண்டாவது, போதுமான இயக்கப் பயிற்சியும் சினிமாவிற்கான நுட்பமான தேடலுமின்றி தேக்கநிலையில் கதை படமாக்கப்பட்டிருக்கும். மூன்று, பேய்க்கதையை விட்டால் வேறு வகையில் படம் செய்ய முடியாது என்ற பொதுநிலையாகும். இவை மூன்றையும் கொஞ்சம் உடைத்தது செந்தில் குமரன் முனியாண்டியின் ‘ஜெராந்துட் நினைவுகள்’, சஞ்சய் அவர்களின் ‘ஜகாட்’, பிரகாஷ் ராஜாராம் அவர்களின் ‘வெண்ணிற இரவுகள்’ மற்றும் ஷான் அவர்களின் ‘Sweet Dreams’ போன்ற படைப்புகள் ஆகும். இவர்களின் படைப்புகள், மலேசியத் தமிழ் சினிமா குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்து வருவதை அடையாளம் காட்டியது என்றே சொல்லலாம். ‘செம்மண் சாலை’ (2006) திரைப்படம், பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. ஆனால் அப்படம் தோட்டப்புற வாழ்க்கையையும் அந்த மனிதர்களையும் ஒரு நேசனல் ஜாகிராபி மனோநிலையிலேயே மிகவும் அந்நியத்துடன் காட்டிச் சென்றது.

இனி வரும் காலங்களில், மலேசியத் தமிழ்ப்படங்களின் விமர்சனத்தை நான் இரண்டாகப் பிரித்து முன்னெடுக்கவே விரும்புகிறேன். வெண்ணிற இரவுகளுக்கு முன், வெண்ணிற இரவுகளுக்குப் பின் என்ற அளவில் இனி மலேசியத் தமிழ்ப்படங்களைப் பிரித்தறியும் அளவிற்குப் பிரகாஷ் ராஜாராம் மெனக்கெட்டு ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

கடைசி முத்தமும் கடைசி கண்ணீரும்

நான் வேலைக்குச் சென்று வாங்கிய முதல் மாத சம்பளத்தில் அப்பாவிற்கு 50 ரிங்கிட் கொடுத்திருந்தேன். அதை அவர் 8 வருடங்கள் செலவு செய்யாமல் பத்திரமாகவே வைத்திருந்தார் என்பதே அவர் மரணத்திற்குப் பிறகே தெரிந்தது.

என்னுடைய அப்பா திரு.கேசவன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி முதல் இரண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். அவர் உடல் சுயமாக மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. சுய நினைவே இல்லாமல் மூன்றாம் நாள் காலையில் மரணமுற்றார். மருத்துவர் என் அப்பா இறந்துவிட்டார் எனச் சொல்லி அனைத்து இயந்திரங்களையும் அகற்றிய பிறகு உள்ளே சென்று பார்த்தேன். கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகியிருந்தது.

சுய நினைவாக இல்லாவிட்டாலும் உயிரைவிடும் போது கடைசியாக அப்பா அழுதிருக்கிறார். உயிர் மீதும் வாழ்தலின் மீது மிகவும் விருப்பம் கொண்டவர். அவர் மட்டுமல்ல நாம் எல்லோரும் வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம். அழுத அவர் கண்களை அதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. மரணத்தைவிட வாழ வேண்டும் என நினைக்கும் மனிதனின் ஆசைக்கு முன் நிற்க கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கின்றது.