Saturday, December 6, 2014

சிறுநகர் கதைகள் : கவிதை 6, பகலின் வேடிக்கை

பகலின் ஒரு சோர்வான வேளையில்
சூடான தேநீருடன்
நகரத்தை வேடிக்கை பார்த்தப்படி
அமர்ந்திருந்து கொண்டு
வாழ்க்கையை அசைப்போட
எனது அனைத்துப் பலவீனங்களையும் அறிந்த
என் துன்பமான நேரத்தில் மட்டும்
என்னுடன் இருக்கப் பழகிய
ஒரு நண்பன் வேண்டும்.

என்னிடம் பேசவிட்டாலும்
பரவாயில்லை
எனது புகார்கள் குறித்து
அவனிடம் ஆட்சேபனை இருக்காது.


குறுக்கிடுவதைவிட
என்னைப் பேசவிடும்
பொறுமை
அவனிடம் இருக்கும்.

நான் கேட்பதற்கு முன்பே
அன்போடு அடுத்த தேநீருக்கு
ஆர்டர் கொடுக்கும்
உரிமை அவனிடம் இருக்கும்.

எனது எல்லாம்
புலம்பலுக்குப் பிறகும்
அவனது கடைசி உடல்மொழியாக
என் தோளைத் தட்டிக்கொடுக்கும்
மௌனம் இருக்கும்.

பகல் இருள்கிறது
தேநீர் வந்தாகிவிட்டது
வேடிக்கைக்கு மனம் தயாராகிவிட்டது
நண்பா உன் இடம்
காலியாகவே இருக்கிறதே?

- கே.பாலமுருகன்

No comments: