Wednesday, November 26, 2014

Camp x- ray – ஓர் அல்கைடா தீவிரவாதியின் அறை


Peter sattaler இயக்கி இவ்வருடம் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான படம் ஆகும். அநேகமாக அடுத்த ஆண்டில் பல விருதுகளைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் படமாகும். தன்னுடைய சிறுநகரத்தைவிட்டு இராணுவத்தில் சேரும் ப்லோண்டி எனும் ஓர் இளம் பெண்ணுக்கும் Guantanamo சிறையில் 8 வருடமாக அடைப்பட்டிருக்கும் அல்கைடா தீவிரவாதி என நம்பப்படும் அலி என்பவருக்கும் இடையில் உருவாகும் ஒரு மெல்லிய நட்புதான் படத்தின் கதை. குவாண்டனமோ 1990களில் நிறுவப்பட்ட உலகின் மிகவும் கொடூரமான மனித வதைகள் நடந்த சிறைச்சாலையாகும்.

11 செப்டம்பர் சம்பவத்திற்குப் பிறகு  பல இஸ்லாமியர்கள் அல்கைடாவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லி  அங்கு அடைக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர்தான் ஜெர்மனிய விரிவுரையாளர் அலி. ஆனால், திவீரவாதி என்றே அங்கு 8 வருடங்களைத் தனிமையில் கழிக்கிறார். அன்பான உரையாடல்கள் இல்லாத, கவனிப்புகள் இல்லாத பெண் வாடையே இல்லாத ஒரு பயங்கர நரகமாக மாறியிருக்கிறது அவரின் அறை. ஆனால், படத்தின் முதன்மை கதைப்பாத்திரமான ப்லோண்டி எனும் இளம் பெண் அவர்களின் வருகை, அலி என்பவனின் வாழ்க்கைக்குள் ஒரு கிளர்ச்சியை உருவாக்குகிறது. அது நெடுங்கால இறுக்கத்தின் உடைவாக மாறி அலி மீண்டும் ஒரு மனிதனாக மாறும் தருணம். படத்தில் மனித வதைகள் காட்டப்படவில்லை. அப்படியென்றால் குவாண்டனமோ மிகவும் அமைதியில்தான் இருந்தது போன்ற ஒரு தவறான எண்ணம் எழுகிறது.

கதையில் வரும் அலி, தான் குற்றவாளி அல்ல என்றே அந்த எட்டு வருடங்களும் கத்தி கதறி சொல்லி உச்சமான மன எழுச்சிக்குப் பலமுறை ஆளாகி தன்னை வருத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமாக வருகின்றான். கடைசிவரை அவன் உண்மையில் அல்கைடா தீவிரவாதியா அல்லது இல்லையா என்பது படத்தில் முதன்மையாக விவாதிக்கப்ப்டவில்லை. சில நேரங்களில் தன் மீதான குற்றத்தைச் சாடும் வகையில் அமெரிக்கா இராணுவத்தைப் பழிக்கின்றான். சில சமயங்களில் தான் குற்றவாளி அல்ல என முனகுகின்றான்.

ப்லோண்டி அங்கு வந்த நாட்களில் முதலில் அவளை அவமானப்படுத்துகிறான். தன் மலத்தை அள்ளி அவள் மீது வீசுகிறான். அவனுடைய அந்தச் செயல் முதலில் அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால், பிறகு மெல்ல அவனை அவனது 8 வருடத் தனிமைக்குள் வைத்துப் புரிந்து கொள்கிறாள். அலி அவளிடம் சதா தனக்கு ஹாரி போட்டர் நாவல் வேண்டும் எனக் கேட்கிறான். குவாண்டனாமோவில் அந்த நாவல் முன்பு இருந்ததாக வாதிடுகிறான். ஆனால், அவளுக்கு அந்த நாவல் தட்டுப்படவில்லை. அதுவே அலிக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

Tuesday, November 25, 2014

டிசம்பர் விடுமுறை என்பது சிறுவர்கள் முளைக்கும் மாதம்


நேற்று ஒரு திருமண விருந்தில் எனக்கு எதிராக அமர்ந்திருந்த பள்ளிச் சிறுமி ஒருவளிடம் சிரித்து வைத்தேன். பதிலுக்கு அவளும் சிரித்ததும் பேசத் துவங்கினேன். பேச்சின் இறுதியில் பொது அறிவுக்காக, பள்ளி நாள் பிடித்திருக்கிறதா அல்லது பள்ளி விடுமுறை பிடித்திருக்கிறதா எனக் கேட்டேன். கொஞ்சமும் தயங்காமல் கண்கள் விரிய உதடு சிரிக்கப் பள்ளி விடுமுறைத்தான் எனச் சொன்னாள்.

சட்டென்று எனக்குள்ளும் இருந்த சிறுவன் மனம் மலர் சிரித்தான். அவள் திரும்ப என்னிடம் அதே கேள்வியைக் கேட்டாள். வேடிக்கையாக இருந்தது. நானும் சிரித்துக் கொண்டே நிச்சயம் விடுமுறைத்தான் என்றேன். கைக்கழுவிவிட்டுப் போகும்போது கையசைத்து மீண்டும் சிரித்தாள்.

டிசம்பர் மாதம் முழுவதும் திடீரென நம் நாட்டில் சிறுவர்கள் அதிகமாகிவிட்டதைப் போல தோன்றுவதை யாராலும் தவிர்க்க முடியாது. அத்தனை நாள் அமைதியாக இருந்த தெருக்கள் இனி குழந்தைகளின் சத்தத்தாலும் சிறுவர்களின் விளையாட்டுகளாலும் நிரம்பி வழியும். எப்பொழுதும் நம் வசிப்பிடங்களில் நிலவும் அமைதி இனி ஒருமாதத்திற்குச் சீர்குழைந்து போகும். சிறுவர்களின் அழுகையாலும் சிரிப்பாலும் புகார்களாலும் வசிப்பிடங்கள் திணறும்.

முன்பெல்லாம் விடுமுறை என்றால் நானும் அம்மாவும் பேருந்தில் ஏறி கோலாலம்பூரிலுள்ள பாட்டி வீட்டிற்குச் சென்று விடுவோம். அப்பொழுதெல்லாம் கோலாலம்பூர் பயணம் என்பது மிக நீண்ட பேருந்து பயணமாகும். வாய்நீர் ஒழுக தூங்கி வழிந்து போய் சேர்வதற்குள் அரைத்தூக்கம் கொடுத்த மயக்கத்தில் இருப்பேன். பாட்டி வாரி அணைத்து மடியில் வைத்துக்கொள்ளும் தருணத்திலிருந்து எனது டிசம்பர் விடுமுறை தொடங்கும்.

ஏனோ டிசம்பர் விடுமுறையில் நமது வீடுகள் துள்ளி எழுந்து எங்கேயோ ஓடிப்போவதற்குத் தயாராகிவிட்டதைப் போல செழிப்புடன் காட்சியளிக்கும். அத்தனை நாள் மௌனத்திற்குள் புதைந்திருந்த சிறுவர்கள் டிசம்பரில் கொஞ்சமாய் விழித்தெழுகிறார்கள். 7 மணிக்கு மேல் வீட்டுப்பாடங்களையே செய்து களைத்தவர்கள் இப்பொழுது தெருவில் ஓடியாடி மகிழ்வார்கள்.

சாதாரண நாட்களில் நகரம் குழந்தைகளை இழந்து வெறுமையில் பரப்பரப்புடன் இருக்கும். ஆனால், டிசம்பரில் எங்குப் பார்த்தாலும் சிறுவர்களாகத் தென்படுவார்கள். இது ஒரு மாயை அல்ல. நீங்கள் வேண்டுமென்றால் அதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ஒரு வருடம் அவர்களின் மீது ஒட்டிக்கிடந்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் ஒரு கணம் உதறித்தள்ளிவிட்டு கூட்டைவிட்டுப் பறந்த குருவிகளாக நகரம், வீடுகள், வசிப்பிடத் தெருக்கள், பேரங்காடிகள் எனப் பரவித் திரிகிறார்கள்.

இன்று போன ஒரு வசிப்பிடத்தில் சிறுவர்கள் ‘ஜூத்தா ரியா’ விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு சிறுவன் லங்காவி தீவைத் தான் வாங்கிவிட்டதாகும், இன்னொரு சிறுவன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைத் தான் இப்பொழுதுதான் வாங்கினேன் என்றும் மிகவும் சீரியசாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். என்னை நம்ப வைப்பதற்காக வாங்கிய ஆதாரங்களையும் எடுத்துக் காட்டினார்கள். இந்த விளையாட்டில் மட்டும்தான் நம் மாணவர்கள் தொடர்ப் பணக்காரர்களாக வலம் வருகிறார்கள். மதியங்களின் சோர்வையும் வெறுமையையும் கடத்தக்கூடிய ஒரே விளையாட்டு இதுதான். எவ்வளவு நேரம் விளையாடினாலும் முடியவே முடியாது. இப்படிப் பல விளையாட்டுகள் டிசம்பரில் கலைக்கட்டும்.

Monday, November 24, 2014

சிறுகதை: சில்க் சிமிதா


சிறுகதை: சில்க் சிமிதா

நாலுக்கு எட்டு அடி அறை. வெய்யில் அதிகம் சுடாமல் இருக்க கருப்புக் கண்ணாடி. ஒரு நாற்காலி. பிறகு காசு இயந்திரம். கார்ட் செருகி. ஒரு தன்முணைப்பு வாசகம். ஒரு சில்க் சிமிதா புகைப்படம்.

1

சில்க்குனா ரொம்ப பிடிக்குமா?”
வேற யாரையும் தமிழ் சினிமாலே பெருசா பாராட்ட முடில
கவர்ச்சித்தான் காரணமா?”
இல்லை. தெரில. அதுக்கும் மேல ஓர் ஈர்ப்பு
செத்துட்டனால பரிதாபமோ?”
சே சே. தமிழ் சினிமால ஹீரோயின் சாவறது வழக்கம். ஹீரோ சாவற வயசு வந்தாலும் ஹீரோதானே
ஹீ ஹீ ஹீ...சரியா சொன்ன. இரஜினி தாத்தா?”
ஹா ஹா ஹா...16 வயசுலே இன்னொரு ஐஸ்வர்யா ராய் கேக்குதாம்
டேய்ய்ய். இரஜினி இரசிகர்கள் கொந்தளிப்பாங்க
ஹா ஹா. இன்னும் நம்ப ஊர்ல பாலாபிஷேகம் பண்ணும் பழக்கம்லா வர்ல ப்ரோ

2
சுப்ப்ப்ப்ப்ப்
ஆங்ங்ங்ங்...சொல்லு மச்சான்...டேய்ய்ய் எப்படியாச்சம் ஒரு 10 000 வரைக்கும் கிடைச்சாலும் வட்டி சரியா கட்டிருவேன் மச்சான். தேடிப் பாரேன்...டேய்ய்ய்...எங்க மாமா...”
சுப்ப்ப்ப்ப்ப்ப்

Thursday, November 20, 2014

சிறுகதை: சண்டை மீன்

     முருகனுக்கு வேலையே அந்தப் பாலத்தில்தான். பள்ளி முடிந்து வீடு வந்ததும் புத்தகைப்பையை ஒரு மூளையில் வைத்துவிட்டு தூண்டிலை எடுத்துக்கொண்டு அந்தப் பாலத்திற்கு ஓடிவிடுவான்.

பரப்பரப்பு இல்லாத ஓய்ந்த சாலைக்குக் குறுக்காக ஓடும் ஆறு. மேட்டுக்கம்ப ஆறு என்றுத்தான் வழக்கமாகச் சொல்வார்கள். நாகா லீலீட் பெரிய ஆறு அடித்துக் கொண்டு வரும் அனைத்துக் குப்பைகளும் இங்குத்தான் வந்து சேரும். பிறகு ஒரு வாரத்திற்குக் கம்பத்திலுள்ள அனைவரின் உடலிலும் வீட்டிலும் சாப்பாட்டிலும் அதே வாடைத்தான்.

அந்த ஜாலான் லாமா ஆற்றிற்கு மேல் இருந்த பாலம் கயூ பாலாக் கட்டையால் செய்யப்பட்டது. பல வருடங்களுக்குத் தாங்குகிறது. எப்பொழுதாவது செம்பனை தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு போகும் லாரியைத் தவிர அவ்வப்போது சில வாகனங்கள் வந்து போகும்.

அன்று பள்ளி முடிந்து முருகன் தூண்டிலைத் தூக்கிக் கொண்டு தனது சைக்கிளில் அந்தப் பாலத்திற்கு வந்தான். தூரத்துக் குருவிகள் அலறல் தவிர சத்தமே இல்லை. பாதி செம்பனை அழிக்கப்பட்ட காடு அது. எதற்காகவோ அந்தக் காட்டின் பெரும்பகுதியை அழித்துவிட்டார்கள். ஒரு சிறு சத்தமும்கூட வெறித்துப் போயிருக்கும் அந்தக் காட்டின் பகுதியில் எதிரொலிக்கப்படும். பாலத்தின் நடுவில் அமர்ந்து தூண்டிலை ஆற்றில் வீசினான். தூண்டின் கொக்கி ஒரு கணம் மூழ்கி மீண்டும் தடுமாறி குப்பென்று வெளியே வந்தது.

‘நாளைக்காவது அந்தச் சண்ட மீனைப் பிடிச்சிருவியா?’ என அவன் நண்பன் சுகுமாறன் கேட்டதே அவன் ஞாபகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

கடந்த 2 வாரமாக அவனிடம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சண்டை மீன் எங்கிருந்து வருகிறது என அவனுக்குத் தெரிந்ததே இல்லை. அநேகமாக நாகா லீலீட் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம். ஒரு நாளும் அவனிடம் சிக்கியது இல்லை. அபூர்வமாகவே சண்டை மீன்கள் இப்படிச் சிறிய ஆறுகளுக்கு வரும். அவ்வளவு சாதூர்யமாக யாருக்கும் சிக்காது.

ஆறு அமைதியில் இருக்கும் தருணத்தில் சட்டென சீறிப் பாய்ந்து அது மீண்டும் ஆற்றிற்குள் நுழையும்போது முருகனுக்கு வாய்ப்பிளக்கும். கருப்பும் செம்மண் வர்ணமும் கலந்த ஒரு பளப்பளப்பு. வெய்யில் பட்டு மின்னும் உடல். பறவையின் இறக்கையை அதன் வாலில் வைத்துத் தைத்தது போன்று ஒரு தோற்றம். 

Friday, November 14, 2014

பாலியல் கல்வியும் சமூகமும்

'பள்ளிப்பருவத்து மாணவர்கள் பாலூறவில் எந்த ஆர்வமும் காட்டம்மாட்டார்கள் என்ற சமூகத்தின் பிரமையைத் தன் சினிமாவின் வழி கலைத்தவர் பாலு மகேந்திரா' - ராஜன் குறை.

நம் இந்திய சமூகம் பாலியல் கல்வியின் தேவையை இறுதிவரை புரிந்துகொள்ளமல் மிகவும் இறுக்கமாகப் பிள்ளைகளை வளர்க்கும் சமூகம் என்றால் அது மிகையில்லை. அதனால்தான் இந்தச் சமூகத்தில் கள்ளத்தனமான உறவுகள் குடும்பங்களைப் பெருமளவில் சிதைத்து வருகின்றன. அதிகமான மணமுறிவுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியக் குடும்ப அமைப்புகளை ஒருமுறை ஆழமாக ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரிய வரும். குடும்பம் சார்ந்த பல விசயங்களைத் தெளிவாகக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய/கற்பிக்க வேண்டிய தேவை இன்று இருக்கின்றது.

ஒரு சிறுமியைத் தன் குடும்பப்படத்தை வரையக் கூறினால், அச்சிறுமி நிச்சயம் அப்பாவை உயரமாகவும் அம்மாவைக் குட்டையாகவும் வரைந்து காட்டும். நான் செய்து பார்த்திருக்கிறேன். ஏன் இருவரையும் சமமாக வரைய முடிவதில்லை? குடும்ப அமைப்பு அவர்களின் மீது விதிக்கும் மனநிலை அது. குழந்தைகளுக்கு முன்னே சண்டை போட்டு அப்பா தன் வீரத்தை/ஆணாதிக்கத்தை அந்தக் குழந்தைக்குள் கட்டமைக்கிறார். அக்குழந்தை பெரிதாகும்வரை ஆண்கள் நம்மை விட பலமானவர்கள் என்ற ஒரு புரிதலுக்குள் சிக்கிக்கொள்கிறது.

Wednesday, November 12, 2014

இது சுங்கைப்பட்டாணியின் கதைகள் : பன்றி பாலம்

இதற்கு முன் சுங்கை பட்டாணியில் அதாவது 2013 ஆம் ஆண்டு வரை வசித்தவர்களுக்கு நிச்சயம் பன்றி பாலம் எனச் சொன்னதும் தைப்பூசக் கோவிலுக்குப் பின்னால் இருந்த ஒற்றை பாலம் ஞாபகத்திற்கு வரும். இப்பொழுது அந்தப் பாலம் அங்கு இல்லை. இடித்துப் பெரிதாக்கி பெரிய சாலையை உருவாக்கிவிட்டார்கள். அப்பாதைப் பத்தானி ஜெயா/பெர்ஜாயா வசிப்பிடப் பகுதியையும் சுங்கை பட்டாணி நகரத்தையும் இணைக்கும்வகையில் கொஞ்சம் பரப்பரப்பாகவும் ஆகிவிட்டது.

பாலம் என்றால் எதோ போக்குவரத்துக்கு இக்கறையிலிருந்து அக்கறைக்குத் தாவ உதவும் ஒன்றாக மட்டும் இருந்துவிடுவதில்லை. பாலம் நம் வாழ்நாளில் நம் வாழ்க்கைக்குள் ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறது. பல நினைவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறது. ஒரு காலக்கட்டத்தை எப்பொழுதுமே நினைவுப்படுத்தக்கூடியவை.

என் அம்மா கடந்த 1990களில் அந்தப் பாலத்தில்தான் தனது மினி சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குச் செல்வார். சீனர் வீட்டில் அம்மா வீட்டு வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. வெள்ளிக்கிழமை நானும் அம்மாவுடன் சென்று ஒத்தாசையாக இருப்பேன். அப்பொழுதெல்லாம் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் அம்மா என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்தப் பாலத்தைக் கடந்துதான் பொருள்கள் வாங்க சுங்கை பட்டாணிக்குச் செல்வார்.

ஈரம் சொட்டும் கைலியுடன் அம்மா சைக்கிளை மிதிக்க, என்னைச் சமாதானம் செய்யக் கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருளைக் கையில் கடவுளை ஏந்திக் கொண்டு வருவதைப் போல பயப்பக்தியுடன் பிடித்துக் கொண்டு நான் அமர்ந்திருக்க, இருவரும் அந்தப் பன்றி பாலத்தைக் கடப்போம். ஏதோ படகில் உல்லாசமாக ஆற்றைக் கடப்பதைப் போன்று பிரமையாக இருக்கும்.

பன்றி பாலம் உருவான கதை

சுங்கை பட்டாணி பொது பேருந்து நிருத்தம் பக்கமாக வந்தீர்கள் என்றால் ஒரு கறுப்பு ஆறு குறுக்காக ஓடுவதைப் பார்க்கலாம். குப்பைகள் மிதந்து செல்லும். ஒருவர்கூட அந்த ஆற்றை ஆயாசமாகப் பார்த்து இரசிக்கும் எந்தக் காட்சியையும் பார்க்க முடியாது. நம்முடைய அனைத்து அலட்சியங்களையும் ஒன்று சேர்த்தால் அது நிச்சயம் அந்தக் கறுப்பு ஆறாக இருக்கும்.

அந்த ஆற்றிற்கு மேலே குறுக்காக இரயில் தண்டவாளம் உண்டு. கரும்புகையுடன் இரயில் அவ்விடத்தைக் கடக்கும் காட்சியை அந்தக் கருப்பாறோடு சேர்த்துப் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும் மலேசியாவிலேயே காற்றுத்தூய்மைக்கேட்டில் சுங்கைப்பட்டாணி பட்டணம் இரண்டோ மூன்றாவது இடத்தையோ பெற்றிருக்கும் தகவல். அந்தக் கருப்பாறின் ஒரு பகுதியைக் கடக்கத்தான் 1900களின் ஆரம்பத்தில் அந்தப் பன்றி பாலம் கட்டப்பட்டது என ஒரு செய்தி உண்டு.