Monday, March 31, 2014

சிறுகதை: பேபி குட்டி



கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன் யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர். அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார்.

மாணிக்கம் பக்கத்து வீட்டு ஆள். அப்பாவின் நெருங்கிய உலகமே அவர்தான். அவருக்குச் சொல்லும்படியாக நண்பர்கள் இல்லை. ஒரு வீடு தள்ளிக்கூட யார் இருக்கிறார்கள் என அப்பாவிற்குத் தெரியாது. மாணிக்கம் அப்பாவைப் பிடித்து ஓர் இடத்தில் உட்கார வைக்கும்போது அவர் வேட்டி கழன்றுவதைப் போல இருந்தது.

“யப்பா...தலைய வடக்காலே வைக்கனும்...தூக்குங்க,” என நெற்றி நிறைய திருநீர் பூசி முகத்தை மறைத்திருந்தவர் கூறினார். அவர்தான் பெரியசாமி.

இரண்டு வயது குழந்தையின் மரணம் யாரையும் சமாதானப்படுத்தக்கூடியதில்லை. வருவோர் போவோர் அனைவரும் புலம்பியபடியே இருந்தனர். ஆகக் கடைசி வார்த்தையாக ஒரு புலம்பலையே விட்டுப் போய்க்கொண்டிருந்தனர். வீட்டில் அவன் கடைசி பையன். பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெளியில் சட்டென முடிந்துவிட்ட வாழ்க்கை. இத்துனை அவரசமான முடிவு.

Tuesday, March 25, 2014

எழுத்தாளர் ஜெயமோகனுடன் மூன்று நாள் இலக்கிய முகாம்- பினாங்கு கொடி மலை

கூலிம் நவீன இலக்கிய சிந்தனைக்களம் ஏற்பாட்டில் கடந்த 16ஆம் திகதி முதல் ஜெயமோகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகையளித்து 25ஆம் திகதிவரை பல இலக்கிய நிலக்ழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். 16ஆம் திகதி புத்தகச் சிறகுகள் ஏற்பாட்டில் நடந்த கவிதை மாலையில் 'காலம்தோறும் கவிதைகள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதன் பிறகு 18ஆம் திகதி விரிவுரையாளர் குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில் பினாங்கு ஆசிரியர் பயிற்றகத்தில் பயிற்சி ஆசிரியர்களிடம் உரையாற்றினார். அம்மாணவர்கள் ஜெயமோகனின் /வெண்முரசு' நாவலின் ஒரு காட்சியை நாடகமாக நடித்திருந்தார்கள். மேலும் அவருடைய சிறுகதைகள் நாவல்களை வாசித்திருந்ததும் மகிழ்ச்சியளித்தது.

அடுத்ததாக 19ஆம்திகதி ஜெயமோகன் அவர்கள் சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் வளாகத்தில் 'இலக்கிய வகைகளையும் அது வழங்கக்கூடிய பேரனுபவம் தொடர்பாகவும்' உரையாற்றினார். விரிவுரையாளர் திரு.தமிழ் மாறன் அவர்களின் ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

வியாழக்கிழமை 20ஆம் திகதி அன்று ஜெயமோகன் அவர்கள் பிரமானந்த சரஸ்வது அவர்களின் ஆசிரமத்தில் உரையாற்றினார். கூலிம் வட்டாரத்தைச் சேர்ந்த பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று ஜெயமோகன் அவர்கள் கூலிம் நவீன இலக்கிய சிந்தனைக்களத்தைச் சேர்ந்த நண்பர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மணிஜெகதீசன், குமாரசாமி, பாண்டியன், கே.பாலமுருகன், தினகரன், தமிழ்மாறன், கோ.புண்ணியவான் எனப் பலர் அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

மறுநாள் 22ஆம் திகதி முதல் ஜெயமோகன் அவர்களுடன் மூன்று நாள் இலக்கிய முகாம் பினாங்கு கொடி மலையில் நடைபெற்றது. சனிக்கிழமை தொடங்கி திங்கள்வரை அந்த முகாம் பற்பல தலைப்புகளில் முன்னெடுக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த ம.நவீன் மலேசிய நாவல்களையும், கோ.புண்ணியவான் மலேசியச் சிறுகதைகளையும், சு.யுவராஜன் மலேசியக் கவிதைகளையும் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அந்த மூன்று நாள் இலக்கிய முகாமையும் எழுத்தாளர் ஜெயமோகன் மிகச் சிறப்பாக வழிநடத்தினர். அவருடன் நண்பர்கள் ராஜமாணிக்கம் மற்றும் கிருஷ்ணன் அவர்களும் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தனர்.

- எழுத்து & புகைப்படங்கள்: கே.பாலமுருகன்




Tuesday, March 4, 2014

மலேசியத் திரைவிமர்சனம்: மெல்லத் திறந்தது கதவு

இப்படத்தின் வியாபாரம் மலேசிய சூழலில் கொஞ்சம் வித்தியாசமானவை. கார்த்திக் ஷாமலன் என்கிற மலேசிய இளைஞரால் இயக்கப்பட்டு டீவிடியின் மூலம் இப்படம் வெளியாகியுள்ளது. நண்பர்கள், முகநூல் மூலம் இப்படம் தொடர்பான பகிர்வுகள், விமர்சனங்கள் பரவியப்படியே உள்ளன. இன்று பதாகைகளோ அல்லது பத்திரிகைகளோ அவையனைத்தையும்விட முகநூல், தகவல்களைச் சேர்ப்பதிலும் மக்களை இணைப்பதிலும் முதன்மை வகித்து வருகின்றது. கார்த்திக் ஷாமலனால் முகநூலில் இப்படம் குறித்து பெரிய அலையை உருவாக்க முடிந்துள்ளது. அடுத்து வரும் இளம்தலைமுறை படைப்பாளர்கள் பத்திரிகைகளில் காலில் விழாமலும் விளம்பர நிறுவனங்களுடன் சமரசம் செய்துகொள்ளாமலும் மக்களை அடைய இதுபோன்ற முயற்சிகள் அவசியம் என்றே கருத முடிகிறது.

கதை

படித்த மேல்தட்டு பெண்ணொருவரின் (ஸ்வஸ்னா) வாழ்வில் நிகழும் ஒரு துர்சம்பவத்தைச் சுற்றிய கதை இது. புகைப்பழக்கமுள்ள ஒரு துணிச்சலான பெண்ணாகக் காட்டப்படும் அவர் ஒரு நாள் வேலை முடிந்து வரும் வழியில் லோரோங் சந்தில் இன்னொரு பெண் ஒரு ஆசாமியால் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதை நேரில் பார்த்துவிடுகிறார். அங்கிருந்து அவர் மிகப்பெரிய பாதிப்பிற்க்குள்ளாகுவதாக மீதிப்படம் நகர்கிறது. அதாவது இப்படத்தை இரண்டு விதமாகப் பிரித்துணர முடிகிறது. ஒன்று கற்பழிப்பு சம்பவத்திற்கு முன்பான அவருடைய வாழ்க்கை அடுத்ததாக அந்தக் கற்பழிப்புச் சம்பவத்திற்குப் பிறகான அப்பெண்ணின் வாழ்க்கை. ஒரு கற்பழிப்புச் சம்பவம் கதையின் மையமாக இருந்து கதையின் இருவழி பாதையைத் தீர்மானிக்க உதவுகிறது.