Monday, July 8, 2013

சிறுகதை: புத்தகப்பை

பெக்கான் பாரு முற்சந்தி. அடிக்கடி விபத்து நடந்து பழகிப் போய்விட்ட பகுதி. எப்பொழுதாவது யாராவது நகரத்தில் விபத்து எனச் சொன்னால் உடனே ‘பெக்கான் பாரு முச்சந்தியா?’ என்றுதான் கேட்கத் தோன்றும். எல்லாம் நகரங்களிலும் அப்படிப்பட்ட விபத்திற்குப் பேர்போன ஒரு பகுதி இருக்கும்.

எப்பொழுது வெளியே கிளம்பினாலும் ‘டேய் அந்தப் பெக்கான் பாரு முச்சந்தி பக்கம் பாத்து போ’ என்றுதான் எல்லாம் வீட்டிலும் சொல்வார்கள். நம் வீட்டிலோ அல்லது நண்பர்களிலோ யாராவது அங்கு விபத்துள்ளாகி இறந்திருக்கக்கூடும். அல்லது இடையில் தென்படுவோர் யாரிடம் கேட்டாலும் அந்த முற்சந்தியில் நிகழ்ந்த ஒரு கோரவிபத்துக் குறித்து ஆச்சரியங்களை வைத்திருப்பார்கள்.

கன்சில் சிறிய காரும், எக்ஸ்சோரா பெரிய காரும் அன்று அங்கு பெக்கான் பாரு முற்சந்தியில் மோதிக் கொண்டன. தூரத்திலிருந்து பார்க்கும்போது அதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. வழக்கமான ஒரு காலையை எந்தச் சுரணையுமின்றி கடந்தாக வேண்டும். ஏதோ ஒரு சிலர் மட்டும் காரை ஓரமாக வைத்துவிட்டு விசாரிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தனர். காலை என்பது திட்டவட்டமானது. அதில் ஒரு நிமிடத்தைக்கூட இழக்க யாரும் தயாராக இருப்பதில்லை.