Saturday, March 16, 2013

பரதேசி திரைவிமர்சனம் :கவனிக்கப்படாத ஒரு துயரவெளி


'ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக அமர்ந்து நாக்கின் ருசிக்காக நாம் உறிஞ்சும் ஒரு தேநீர் என்பது வெறும் நீராலும் தேயிலையாலும் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. அதில் ஓடுவது வலுக்கட்டாயமாக உறியப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தம் சகோதரர்களே.'

பாலாவின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் இது. 1939ஆம் ஆண்டில் சாலூர் கிராமத்திலிருந்து பச்சை மலைக்கு ஆசை வார்த்தைகள் காட்டி தேயிலை வேலைக்காக அழைத்துச் செல்லப்படும் தமிழர்களின் கதை இது. புலம்பெயர்ந்த ஓர் இனத்தின் வரலாற்று படமாக இதை அடையாளப்படுத்தலாம். இன்று இந்தியாவைத் தவிர்ந்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களே. கூலி வேலைக்காக நாடு விட்டு நாடு வந்து உழைப்புச் சுரண்டப்பட்டு உறிஞ்சி சக்கையாக வெளியே வீசப்பட்டவர்களின் அவலக் குரலைப் பாலா எவ்வித அதிகார நெடியும் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளார். 19ஆம் ஆண்டின் தொடக்கம்தான் தமிழர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்ட காலக்கட்டம். அவர்கள் எப்படிக் கொத்தடிமைகளாக்கப்பட்டு பின்னர் சிறுக சிறுக முதலாளிய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை வரலாற்று பிழையில்லாமல் பாலா தமிழ் சினிமாவிற்குக் கொடுத்துள்ளார். 

புலம்பெயர்வு சமூகம்

இப்படம் சாலூர் கிராமத்தில் தொடங்கி பச்சைமலையில் முடிகிறது.1939ஆம் ஆண்டின் பின்னணி என்பதே அதிக உழைப்பிற்குரியது. நிஜமான கிராம சூழலையும், பேச்சு வழக்கையும் கவனமாகக் கையாண்டுள்ளார்கள். வழக்கமான பாலா படத்தில் வரும் எந்தவித திரட்சியான மிரட்டலான கதாநாயகப் பிம்பங்கள் மிகைப்படுத்தப்பட்ட முயற்சிகள் இல்லாமல் சர்வதேச புலம்பெயர் சமூகத்தின் வலியை வரலாற்றை பதிவு செய்துள்ளார். (இந்தப் பாராட்டுக்குரிய படம் இது).