Friday, February 8, 2013

கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து


விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு சினிமாவை நோக்கி கலைத்தனமிக்க மதிப்பீடுகளை வைத்திருந்தால், ஒருவேளை கலை மக்களின் மனத்தைப் பாதிக்கும் என்றும், சமூகத்தைக் கூர்போடும் வேலையையும் செய்யும் எனப் பயப்படுவதில் அர்த்தமுண்டு. நமிதா உதட்டைக் கடிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஆண்கள் அதிகமான கற்பழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என நம்பும் அரசு கமல் என்கிற தனிமனிதனின் அரசியல் பிழைகள் சமூகத்தையும் இஸ்லாமிய சகோதரர்களின் பகையையும் சேகரித்துவிடும் எனப் பயப்படுவதற்குப் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றால் நம்புவதற்கில்லை.

அப்படித் தடை என்று வந்துவிட்டால் தமிழ் சினிமாவின் எத்தனையோ காட்சிகளையும் வசனங்களையும் தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? இரட்டை அர்த்தமிக்க ஆபாச வசனங்களே சினிமாவில் கூடாது என்ற தணிக்கைவிதி இருக்கிறது. அப்படியானால் முதலில் நகைச்சுவை நடிகர் சந்தானத்தையே தமிழ் சினிமாவிலிருந்து தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? அதற்கும் பின்னோக்கி போனால் எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் இரட்டை அர்த்தமிக்க வசனங்களிலேயே பேசி வாழ்ந்தவர்கள் அல்லவா?