Tuesday, November 19, 2013

வாசிப்புத் திறன் : சோர்ந்து போகும் தலைமுறை

வாசிப்புத் திறன் என்றதும் அதைப் பள்ளியின் பாடநூல் வாசிப்போடு மட்டும் தொடர்ப்படுத்திப் பார்க்கும் பழக்கத்திற்கு நம் சமூகம் ஆளாகியிருக்கின்றது. அதைக் கடந்து மாணவர்களின் மனநிலை, அனுபவத்திற்கேற்ப அவர்களின் கற்பனையாற்றையும் மொழியாற்றலையும் வளர்க்கும்படியான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் நிலையிலிருந்து இன்றைய தலைமுறை சோர்ந்து போயிருக்கின்றன.

இன்றைய சமூகத்தின் கற்பனையாற்றல் சோர்ந்து போய்விடாமல் இருக்க வாசிப்பை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். பாடநூல் வாசிப்பைக் கடந்து பல்வகை வாசிப்பை முன்னெடுக்க வேண்டும். குழந்தைகள் வாசிப்பு என்றாலே பயப்படுகிறார்கள். சிறுவர்கள் அவர்களின் மனநிலை, வயதுகேற்ப அவர்களின் வாழ்வைச் சொல்லும் கதைகள் அடங்கிய நூல்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆகவேதான் வாசிப்பைவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள்.

Harry potter , bed time stories எனப் பலவகை சிறுவர் நூல்கள் மேற்கத்திய வாசிப்புச் சூழலில் கவனத்திற்குரிய வகையில் செயலாற்றி வருவதைப் போல, மலேசிய சிறுவர்களின் வாழ்வைச் சொல்லும் கற்பனையாற்றல் மிகுந்த நூல்கள் இங்கும் வரவேண்டும்; எழுதப்பட வேண்டும்.

Wednesday, November 6, 2013

'Highland tower ' திரை விமர்சனம் - புதையுண்டுபோன மரணங்கள்

'Highland tower ' திரை விமர்சனம் 


11 டிசம்பர் 1993, சரியாக மதியம் 1மணிக்கு, உலு கிள்ளானிலுள்ள 12 மாடி கொண்ட மூன்று அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றான 'highland tower block 1' இடிந்து தரைமட்டமானது. மலேசிய வரலாற்றில் 48 உயிர்களைப் பறித்த அந்த மறக்க முடியாத சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மலாய்த் திரைப்படம் ' highland tower'. 20 வருடங்களாக மலேசிய மக்களின் நினைவுகளில் உறைந்து புதையுண்டுபோன ஒரு துர்சம்பவத்தை இப்படம் மீண்டும் பற்பல பீதியுடன் மீட்டுக் கொண்டு வருகிறது. ஒரு சினிமா என்பது மக்களின் மனசாட்சி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். காலத்தால் மறக்கப்படும் சில உண்மைகளை மீண்டும் விசாரிப்பதோ அல்லது நினைவுக்குக் கொண்டு வருவதோ ஒரு நல்ல சினிமாவின் செயல்பாடுகளில் ஒன்று.


highland tower இடிந்து மக்கிப் போன ஒரு 12 மாடி கட்டிடத்துடன் இருளடைந்து ஆட்களே இல்லாத நிலையில் மற்ற இரு 12 மாடி கட்டிடங்களும் திகிலுடன் 20 வருடங்களாக அங்கேயே இருக்கின்றன. இடிந்த கட்டிடத்தின் அருகாமையில் இருந்த மற்ற இரு 12 மாடி கட்டிடங்களிலிருந்தும் அந்தத் துர்சம்பவத்திற்குப் பிறகு படிப்படியாக அனைவரும் வெளியேறிவிட்டனர். ஆளே இல்லாத அந்த 200 வீடுகள் கொண்ட 12 மாடி கட்டிடங்கள் 11 டிசம்பரின் கதறலையும் இரத்தப் பழியையும் நினைவுப்படுத்திக் கொண்டும் பற்பல திகில் சம்பவங்களை ஞாபகபப்டுத்திக் கொண்டும் இருக்கின்றன. அதனைக் கதைப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட பேய் படம்தான் highland tower. 



1998களின் இறுதிவரை அந்த இடிந்த கட்டிடடத்தை வைத்துப் பல பேய் கதைகள் பேசப்பட்டு வந்தன. மலேசியா முழுவதும் பல வருடங்களுக்கு அந்தச் சம்பவம் ஓர் ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தன. கோலாலம்பூரில் இருக்கும் என் அக்காள் ஒருமுறை இதை வைத்தே ஒரு கதையைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் பக்கமாகச் செல்லும் வாடகைக் கார்களை  அடையாளம் தெரியாத நபர்கள் நிறுத்த முயன்றிருப்பதாகவும், சிலர் வாகனத்தைத் துரத்திக் கொண்டு சில தூரம்வரை வந்திருப்பதாகவும் வாடகைக் கார் ஓட்டுனர்களால் பல கதைகள் சொல்லப்பட்டன. இது அங்குச் சில காலம்வரை வாடிக்கையாக நிகழ்ந்துள்ளது. 

Monday, November 4, 2013

மூடர் கூடம்: கஞ்சா விற்பனின் அபத்தமான கம்யூனிச உணர்வு


கதைச்சுருக்கம்: மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு இரகசியமாக ஓடத் திட்டமிட்டிருக்கும் ஒரு பணக்காரனின் வீட்டில் திருடுவதற்காக நுழையும் நான்கு அடித்தட்டு இளைஞர்கள், எப்படி இறுதியில் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட்வாதிகளாக மாறி எல்லோரையும் விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதே. வர்க்க ரீதியில் பிரிந்து சிதைந்து கிடக்கும் சமூகத்திடம் ஒரு பொதுவான அற உணர்வையும் நியாத்தையும் நிறுவ முயன்று படம் விழிப் பிதுங்கி நிற்கின்றது. 


கடவுள் என நாம் சொல்லக்கூடிய ஒன்று முழுக்க கம்யூனிசம்தான். இந்த நிலம், இந்தக் காற்று, இந்த ஆகாயம், இந்த நிலத்தில் விளையும் அனைத்துமே எல்லோருக்குமானது. ஆனால் கடவுள் வழிபாட்டை/ கடவுள் நம்பிக்கையை முன்னெடுக்கும் சில நாடுகளில் 'கம்யூனிசம்' தடை செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயமாகும். மூடர் கூடம் படமும் முழுக்க கம்யூனிசத்தைத்தான் கொஞ்சம் காலாவதியான முறையில் பேசுகிறது.