Saturday, January 26, 2013

Mama- ஆங்கிலப் படம்



மனநோய் கொண்டவர்களை எப்படி எதிர்க்கொள்வது என்பதே இச்சமூகம் இன்றளவும் கற்றுக்கொள்ளாத ஒரு விசயமாகும். உடலால் துவண்டவர்களைப் பராமரிப்பதிலேயே அதிகபட்சம் வெறுப்படையும் நம் மனோநிலை, மனம் சிதைந்தவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆகையால்தான் அவர்கள், சாலையில் பித்துப் பிடித்துக் கவனிப்பாரின்றி திரிகிறார்கள். உடலுக்கு ஏற்படும் பிரச்சனையைப் போன்று ஒத்திருப்பதுதான் மனத்திற்குள் ஏற்படும் சிக்கலும்.

அப்படி மனநோய்க்கு ஆளான ஒரு பெண்ணின் கதைத்தான் ‘mama’. தேவாலையத்தால் மனநோய்க்கு ஆளான அவளுடைய குழந்தை பறிக்கப்பட்டு தனியாக வைத்து வளர்க்கபடுகிறது. தன் குழந்தையின் மீது அபிரித அன்பு கொண்ட அந்தத் தாய் குழந்தையை அங்கிருந்து தூக்கிக் கொண்டு மலை உச்சியிலிருந்து குதித்து விடுகிறாள். குழந்தை மட்டும் ஒரு கற்கிளையில் சிக்கி அங்கேயே இறந்துவிடுகிறது. அவளும் தண்ணீரில் மூழ்கி இறக்கிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அதே பள்ளத்தாக்கின் அருகாமையில் காருடன் மூவர் வந்து வீழ்கிறார்கள். மனைவியைக் கொன்றுவிட்டு இரு பெண் பிள்ளைகளுடனும் அங்குத் தப்பி வரும் தந்தை ஒரு பாழடைந்த வீட்டில் நுழைகிறார். அங்கு வைத்துத் தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதாகத் திட்டம். ஆனால், தன் மூத்தப் பெண் பிள்ளையைக் கொல்ல முயலும் அச்சமயத்தில்தான் அவ்வீட்டில் ஆவியாக வாழும் ‘mama’ தோன்றி அவனைக் கொன்றுவிடுகிறார்.


அதன் பிறகு, காணாமல்போன அந்த இரு பெண் குழந்தைகளும் அந்தப் பாழடைந்த வீட்டிலேயே ‘mama’ –வால் வளர்க்கப்படுகிறார்கள். எப்படி அபெண் குழந்தைகள் அங்கிருந்து மீட்கப்படுகிறார்கள் என்பதுதான் மீதி கதை. திகில் படமாக இருப்பினும் 5 வருடம் மனிதர்களின் வாடையே இல்லாமல் வளரும் குழந்தைகள் எப்படிப் பூச்சியைப் போல வளர்ந்து இந்தச் சமூகத்தை எதிர்க்கொள்கிறார்கள் என்ற உளவியலையும் சேர்த்துப் படைத்திருப்பது கவனிக்கத்தக்க விசயம். பல இடங்களில் இருக்கையிலிருந்து எழ நேர்ந்தது. அப்படியொரு காட்சியமைப்பு. ஒரு படத்தில் இரு முறைக்கு மேல் தூக்கிவாரிப்போடுவது என்பது இருதயத்திற்கு நல்லதல்ல. ஆனால், இப்படத்தில் குறைந்தது 8 இடங்களில் அப்படி நேரிடும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களே பார்க்க முடிந்த படம். ஆனால், இருதயம் பிரச்சனை உள்ளவர்கள் தயவு செய்து பார்க்காமல் இருப்பதே நலம்.

கே.பாலமுருகன்

No comments: