Friday, March 30, 2012

சிறுகதை: மேம்பாலம்


துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தோளில் மாட்டியிருந்த பையை மேசையின் மீது வைத்துவிட்டு குவளையைக் கையில் எடுத்த கனம், தடார் தடார் என அதிர்வு. 

“கேக்குதா? லோரி..”

மயக்கமே வருவது போல ஆகிவிட்டது. மாமா குவளையில் நீரை நிரப்பி ஒரு மிடறில் தொண்டையை நனைத்தார். அடுத்ததாக இன்னொரு லோரி எப்பொழுது வேண்டுமென்றாலும் கடந்து போகலாம். வீடு ஓர் அதிர்வுக்காகத் தவம் கிடந்தது. அது மிகக் கொடூரமான அதிர்வு. கூரையும் சுவரும் இடிந்து சரிந்துவிடுவது போன்ற ஒரு கனநேர பயம். நெடுஞ்சாலை சிறுக சிறுக விரிந்து பாதி நிலத்தை விழுங்கிவிட்டாயிற்று. மூசாங் கம்பம் தொடங்கும் இடத்தில் உடும்புக்கார தாத்தா வீடு கட்டும்போது இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார். காடு பிளக்கப்பட்டு இங்கொரு நெடுஞ்சாலை வந்து வீடுகளுக்கு மேல்வரை நீளும் என முந்தைய சந்ததிகளுக்குத் தெரிந்திருக்காது.