Sunday, January 1, 2012

இந்தியப் பயணம்-5 –ஆதவன் தீட்சண்யாவுடன் மோட்டார் பயணம்


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் என்னைப் பேருந்து ஏற்றிவிடுவதற்காக செல்மா வெகுநேரம் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று மிகவும் அவரசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டிய சூழல். செல்மா குழந்தைகளிடம் அதிகம் பேசவும் முடியவில்லை. அதுவே மிகுந்த வருத்தமாக இருந்தது. ஒரு சகப் பயணியைப் போலவே என்னுடன் செல்மா இந்தியா பயணம் முழுக்கவும் அவ்வப்போது உடன் இருந்தார். சரியாக 10.45க்கு வரவேண்டிய பேருந்து மேலும் தாமதமாக்கியது. எங்களுடன் செல்மா காருக்கு டிரைவராக வந்த தோழர் ஒருவர் அங்கு இருந்ததால் செல்மாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன். தோழர் முன்பு கம்னியுஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறியவர். அவரிடம் வெறும் மௌனம் மட்டுமே இருந்தது. திண்டுக்கல் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்துக்கொண்டேன்.
 
இங்கிருந்து ஓசூருக்குச் செல்வதாகத் திட்டம். அண்ணன் ஆதவன் தீட்சண்யாவைச் சந்தித்தாக வேண்டும் எனப் பிடிவாதமாகவே இருந்தேன். 5ஆம் திகதி அவர் மதுரைக்கு வருவதாக இருந்தது. அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு உரையாற்ற ஆதவன் மதுரைக்கு வரும் அந்த 5ஆம் திகதி என் பயணத்திட்டத்தின்படி நான் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே பயணத்தை ஓசூருக்கு மேற்கொள்ள முடிவு செய்திருந்தேன். ஆதவனைப் பார்க்க எத்துனைத் தூரம் வேண்டுமென்றாலும் பயணிக்க அப்போதைய மனம் தயாராக இருந்தது.