Sunday, May 27, 2012

திரை விவாதம்: கவனிக்கத்தக்க தமிழ் சினிமா: ஆண்மையும் அதிகாரமும்

தமிழ் சூழலுக்குள் மலிவான வியாபாரத்திற்குள்ளான பல விசயங்களில் சினிமாவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் சினிமா சார்ந்து ஒரு பெரும் முதலீட்டு களமாகச் தமிழ்நாடு ஆகிவிட்டதன் மூலம் அங்கு உருவான வெகுஜன இரசனை என்பது ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு வளரவே இல்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் உருவான தயாரிப்பாளர்கள் ஒரு சங்கமாகவும் அல்லது ஒரு குடும்பப் பெரும் நிறுவனமாகவும் வளர்ந்து வெகுஜன இரசனையை விலைக்கொடுத்து வாங்கிக் கோலோட்சி நடத்தி வருகின்றனர். அவர்களால் தொடர்ந்து தருவிக்கப்படும் படம் என்பது பொதுமக்களின் இரசனையை மலிவான தளத்திலேயே வைத்து வியாபாரம் நடத்தி இலாபம் சம்பாரிக்க உதவ வேண்டும் என்பதே. அத்துடன் சினிமாவுக்கான தேடலும் பங்களிப்பும் முடிந்துவிடுகின்றன. கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல வாழ்க்கை ஒரு பண்ட மாற்று தொழில்நுட்பமாக ஆகிவிட்ட பிறகு சினிமா உட்பட அனைத்துக் கலைகளுமே இலாபத்துக்காக மட்டுமே விற்கப்படத் தொடங்கிவிட்டன.

இதையெல்லாம் மீறி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நல்ல சினிமாக்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து கொண்டுத்தான் இருக்கின்றன. அவை சிலசமயங்களில் கவனிக்கப்படாமலும் வணிக ரீதியில் தோல்வியுற்றும் போய்விடுவதால், அதனைப் பற்றி மீண்டும் உரையாட வேண்டியிருக்கிறது. நல்ல சினிமா முயற்சிக்கு நாம் தரும் அடையாளம் அது. இங்கு நான் குறிப்பிடும் சினிமாகள் தர வரிசை அடிப்படையில் அல்ல.

1. யுத்தம் செய் – மிஷ்கின்

கடந்த வருடம் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த மிக முக்கியமான மர்மப்படம். கலை அமைதியுடன் மர்மத்தை ஒரு கருப்பொருளாக வளர்த்துக் காட்டக்கூடிய சாத்தியங்களை இரசிக்கும் வகையில் தந்த படம். சேரன் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பாக இருந்தது. வழக்கமாக மிக நல்லவராக மட்டும் வந்துவிட்டுப் போகும் சேரனின் மாறுப்பட்ட நடிப்பாற்றலை இப்படத்தில் பார்க்க முடிந்தது.

இப்படத்தின் ஒளிப்பதிவு தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தது. காமிரா கதைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மர்மத்தைப் பெரிதுப்படுத்தி அதனை நோக்கி நம்மை ஈர்க்கக்கூடிய வகையில்
மிகவும் தந்திரமாகவும் தொழில்நுட்பமாகவும் இயக்கப்பட்டிருந்ததே பாராட்ட வேண்டிய விசயம். ஆள் அரவமற்ற ஒரு பொதுவெளியை வெகுநேரம் காட்டிவிட்டு பிறகு தான் ஒளித்து வைத்திருக்கும் மர்மத்தை நோக்கி நகர்ந்து திகைப்பை ஏற்படுத்தும் காமிரா உத்தி மர்மப் படங்களுக்கே உரிய மாற்றுமுயற்சி ஆகும். காட்சியின் தொடக்கத்திலேயே மர்மத்தைக் காட்டிவிட்டு பிறகு அது குறித்த கதைப்பாத்திரத்தின் ஆச்சர்யத்தையும் திகைப்பையும் காட்டுவது வழக்கமான உத்தியாகும். ஆனால் இப்படத்தில் முதலில் மனிதர்களின் திகைப்பைக் காட்டிவிட்டு பிறகு மர்மத்தை நோக்கி நகரும் உத்தி சட்டென நம்மை இம்சித்துவிடுகிறது.

பெண்களை தங்களின் காம இச்சைக்குப் பயன்படுத்தும் பணக்கார முதியவர்களின் மன உளவியலான மிகப் பயங்கரமான ஒரு சமூகப் பிரச்சனையைத் தட்டையாக மட்டுமே இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது வருத்தமளிக்கும் விசயமாகும். சுரண்டப்படும் பெண்களுக்கு எதிரான கலகக் குரலாகப் படம் நிறைவடைந்துவிடுகிறது. ஆனால் பெண்கள் தொடர்ந்து சிதைக்கப்படுவதற்குப் பின்னணியில் இயங்கும் மன உளவியல், அதிகாரப் பிரச்சனைகள் என அனைத்தையும் ஒரு மேற்கோளாக மட்டுமே படத்தில் கவனப்படுத்தப்பட்டிருக்கின்றன. பெண்கள் கற்பழிக்கப்படுவதை விரும்பிப் பார்த்து அதன் மூலம் தளர்ந்துவிட்ட தன் இச்சையைத் தணித்துக்கொள்ளும் அந்த முதியவர்களைச் ‘செத்த கழுகுகள்’ என அடையாளப்படுத்துவதோடு படம் பழிவாங்களுக்கான நியாயத்தைக் கட்டமைப்பது குறித்து அதீதமான கவனத்தைச் செலுத்தத் துவங்கிவிடுகிறது.

யார் இந்தச் செத்தக் கழுகுகள்? அவர்களின் மனம் அப்படிச் செயல்படுவதற்கான தேவை என்ன? காமம் சார்ந்த உறுப்பு தளர்ந்துவிட்டதன் மூலம் அவர்களின் மனம் தன்னுடைய சமன்நிலையை இழந்துவிடுகிறது. சுதேசிமித்திரனின் நாவலான ‘ஆஸ்பித்திரி’யில் வரும் அப்பாவைப் பற்றிய பதிவில் குப்புறப் படுக்கும் சூழலுக்கும் மல்லாந்து படுக்கும் சூழலுக்கும் இடையில் தக்கவைக்கப்பட்டிருக்கும் ஆண்மை, இழக்கப்படும் ஆண்மை என்ற இரு விசயங்களைச் சொல்லியிருப்பதை இப்படத்தின் மையப்பிரச்சனையையோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடிகிறது.

கை இல்லாதவன் தன் கால்களுக்கு மொத்த பலத்தையும் கொடுத்து அதனைக் கைக்கும் சேர்த்து இயங்க வைக்க வாழ்நாள் முழுவதும் போராடி பயிற்சியளித்து பக்குவப்படுத்துவான். நாளாடைவில் அவன் கால்கள் அபாரமான ஆற்றலைப் பெற்று இயங்கத் துவங்கும். எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் காலால் வரைவதைக்கூட பார்த்திருக்கிறோம். எத்தனையோ கலைஞர்கள் கைகளால் ஆடுவதைப் பார்த்திருக்கிறோம். ஒரு உறுப்பின் இழப்பை இன்னொரு உறுப்பைப் புதுப்பிப்பதன் மூலம் தீவிரமாக்குவதன் மூலம் சரிக்கட்டுவதுதான் மனித இயல்பு என உளவியல் கூறுகிறது.

செத்தக் கழுகுகள் எனக் குறிப்பிடப்படும் அவர்களின் செயல்பாடும் இது போன்ற உளவியலையே சார்ந்தது எனப் படம் விவாதிக்காமல் அவர்களை வெறும் சமூகக் குற்றவாளிகளாக மட்டுமே காட்டியிருப்பது மட்டும்தான் படத்தின் பலவீனமாக நான் கருதுகிறேன்.

2. சத்தம் போடாதே

இது இரண்டு வருடத்திற்கு முன் வெளிவந்த மற்றொரு முக்கியமான படம். ஆழமாக விமர்சிக்கப்படாமல் கடந்து போய்விட்ட மாற்று சினிமாவுக்கான கனத்தைக் கொண்டிருந்த படம். ஆண்மையைக் கொண்டாடும் ஆண்மையை வழிப்படும் ஒரு சமூகம் எப்படி உடல் ரீதியிலான பலவீனம் உடையவர்களை மனநோயாளியாக மாற்றி அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கிறது என்ற முக்கியமான பிரச்சனையைக் கையாண்ட படம். இந்தப் பிரக்ஞையுடன் அப்படம் இயக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் ‘ஆண்மை’ என்ற மிகத் தொன்மையான ஒரு அதிகாரத்தைப் பற்றி இப்படம் இரண்டு தரப்பில் வைத்து அணுகியிருக்கிறது.

ஒன்று, ஆண்மை இல்லாதவன் தன்னுடைய அனைத்துப் பலவீனங்களையும் பெண் மீது சுமத்தி அவளை ஒடுக்குவது. கதையில் வரும் மனைவி கதைப்பாத்திரம் அப்படிப்பட்ட பிரச்சனையை எதிர்நோக்குகிறாள். குழந்தை பெற்றுக்கொள்ள வழியில்லாவிட்டாலும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள முன் வரும் அவளுக்கு ஆண்மை இல்லாத கணவனால் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தனக்கு ஆண்மை இல்லாத சூழலை அவன் தன் இருப்பைச் சீர்குலைக்கும், அர்த்தமில்லாததாக மாற்றும் என நம்புகிறான், மனைவியைத் துன்புறுத்தி அவளை இம்சிப்பதன் மூலம் தன்னுடைய மன உளைச்சலுக்கு ஒரு வடிக்காலை உருவாக்கிக் கொள்கிறான். இது அதிகாரமிக்க ஆணாதிக்க சமூகத்தின் மிகக் கொடூரமான ஒரு நோயாகும்.

இரண்டாவதாக, மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவது குறித்து சிந்திக்கும் இன்னொரு ஆணின் அதிகாரம். கதையில் வரும் கதைநாயகன் தான் ஆண்மை மிக்கவன் எனும் ஒரு காரணத்திற்காகப் படம் முழுக்கச் சமூகமும் மனைவியும் போற்றும் நல்லவனாக வந்து போகின்றான். ஆக, ஆண்மை உள்ளவன் மட்டுமே நல்லவனாக வாழத் தகுதியுடையவன் போல படத்தில் காட்டப்பட்டிருக்கும். இதுவும்கூட ஒரு பிரச்சனைத்தான். நான் ஆண்மை எனக் குறிப்பிடுவது தைரியம் அல்ல. ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கக்கூடிய ஆண்மை பற்றிய விசாரணை இது.

ஒரு பக்கம் ஆண்மை ஒருவனை மனநோயாளியாக மாற்றுகிறது என்ற யதார்த்தத்தைச் சொல்லும் படம் மற்றொரு பக்கம் ஆண்மையை வலுவாகச் சமூகத்திற்குள் கட்டமைக்கிறது. அதுவே ஓர் அதிகாரமாகவும் பற்பல பாவனைகளுடன் செயல்படுகிறது. எப்படியிருப்பினும் முக்கியமான ஒரு பிரச்சனையைக் கதைக்கருவாகக் கொண்டு விவாதிக்க வைத்தப் படம் இது.

கே. பாலமுருகன்
thanks: Vallinam may issue

No comments: