Thursday, October 6, 2011

திரை விமர்சனம்: வாகை சூட வா (கண்டெடுத்தான் காடும் கண்டெடுக்க முடியாத கலையுணர்வும்)


கண்டெடுத்தான் காடு எனும் ஒரு குக்கிராமத்தின் கதை இது. ஒரு பூர்வகுடி சாயலில் வாழும் மக்கள். செங்கல் அறுத்து அதை ஒரு சிறு முதலாளியிடம் விற்று வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். செங்கல் சூரையில் பெரியவர்கள் முதல் பிள்ளைகள்வரை வெயிலில் காய்ந்தவாறு வேலை செய்கிறார்கள். அவர்கள் கடைசிவரை நம்பி வாழ்வதே அந்த மண்ணையும் மண் கொடுக்கும் செங்கலையும்தான். படம் 1966 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. புழுதி பறக்கும் கிராமத்தின் மூலையில் இலையுதிர்ந்து நிற்கிறது ஒரு மரம். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்கிற இலட்சியத்துடன் வாழும் விமல், ஒரு தனியார் அமைப்பின் மூலம் கண்டெடுத்தான் காட்டிற்கு வாத்தியாராக வந்து சேர்கிறார்.