Sunday, July 10, 2011

Part 3: நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

 கேள்வி: சமீபத்தில் நான் பார்த்த ஒரு இலங்கை சினிமாவில், இலங்கை குடும்ப ஆண்களை இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதால் இலங்கையில் வசிக்கும் கீழ்த்தட்டு சமூகத்தின் குடும்ப அமைப்பு உடைந்து போவதைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது. போர்ச்சூழலில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவவீரர்கள் இலங்கை அரசின் தூண்டுதலால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போர் நிலை தமிழர்களைத் தவிர்த்து இலங்கையின் சிங்கள மக்களை எப்படிப் பாதிக்கிறது? இராணுவ வீரர்களின் மன அமைப்பு எப்படிப்பட்டது?

பதில் : இராணுவத்திற்கு ஆட்சேர்க்க மிகவும் வறுமைப்பட்ட பின்தங்கிய சூழலில் இருந்து ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். அதனால் பல சிங்களப் பெண்கள் கணவன்மார்களை பிரிந்து தவிக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்து தவிக்கிறார்கள். சகோதரர்கள் ஒத்தாசையின்றி தவிக்கிறார்கள். முப்பதாயிரத்திற்கு மேல் இப்பொழுது இராணுவத்தினருக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான இராணுவத்தினரின் குடும்பங்கள் அந்தச் சம்பளத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்குள் இப்படிப்பிரிவுகளும் சிதைவுகளும் உடைவுகளும் உள்ளன.

தங்கள் ஊதியத்தை அனுப்பி தொலைபேசியில் பேசி உருகிக் கொண்டிருக்கும் இராணுவத்தினர் பலரை நான் தினமும் இங்குள்ள வங்கிகளில் பார்க்கிறேன். தவிர நாங்கள் பயணிக்கும் பேருந்துகளில் சீருடையணியாத இராணுவத்தினர் தெற்கில் உள்ள வீடுகளுக்கு விடுமுறையில் செல்வதையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் போகும் பொழுது உள்ள மகிழ்ச்சியும் வரும் பொழுதுள்ள சோகமும்கூட தினம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அவர்களை இலங்கை அரசு தனது அதிகார வெறித்தனமான யுத்தத்திற்காகப் பலியாக்குகிறது என்றும் அது அவர்களில் தவறில்லை என்றும்கூட நமது சூழலில் சிலர் வாதிடுகிறார்கள். விடுதலைப் புலிகள்கூட குடும்பங்களைப் பிரியும் இராணுவத்தினரின் மனநிலை பற்றியும் யுத்தகள இராணுவத்திரின் மனநிலை பற்றியும் சில குறும்படங்கள் எடுத்திருந்தார்கள். இயக்குனர் பிரசன்ன விதானகேன கூட தனது படங்களில் இந்த விடயத்தை சித்திரித்திருக்கிறார்.