Friday, July 1, 2011

Part 1: நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

கேள்வி: உங்களின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை படித்திருக்கிறேன். அப்படியொரு உண்மை சம்பவம் உண்டா? பதுங்கு குழிக்கும் ஈழத்துச் சிறார்களுக்கும் இடையில் பரவிக்கிடக்கும் கசப்பான வலி மிகுந்த தருணங்களைச் சொல்ல முடியுமா?

பதில்: நான் அதிகமதிகம் குழந்தைகளின் மனவெளிகளைக் குறித்தே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எந்தக் குற்றங்களும் இழைக்காதக் குழந்தைகளைப் போர் மிகக் துன்புறுத்துகிறது. அந்த அனுபவங்களை என்னைச் சுற்றிச் சுற்றி தொடர்ச்சியாக உணருகிறேன். நானும் அம்மாவும் தங்கையும் விமானத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் பதுங்கு குழிக்குள் இருப்போம். அப்பொழுது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பெண் ஒருவர் பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்த குழந்தையைக் கொண்டு வந்து எங்களுடன் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருப்பார். அந்தத் தருணத்தில்தான் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற அந்தக் கவிதையை எழுதியிருந்தேன்.