Tuesday, May 17, 2011

வானம்-திரைவிமர்சனம் - பின்காலனிய சமூகமும் நடுத்தர வர்க்க மாயையும்

கிரிஸ் இயக்கத்தில் தெலுங்கில் அதிகமான வரவேற்பைப் பெற்ற படத்தைத் தமிழில் “வானம்” என்கிற தலைப்பில் மறு ஆக்கம் செய்து கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இன்றைய சூழலில் தமிழில் வரக்கூடிய எத்தகைய சினிமாவாக இருந்தாலும் கதாநாயகன் கொண்டாட்டமும் கதாநாயகன் மையமும் படத்தில் இருக்கக்கூடிய கதையின் மீதான அத்தனை சாத்தியங்களையும் தகர்க்கக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன. ஆனால் வானம் படத்தில் கதாநாயகத்துவம் கதைக்கு முன்பு தோல்வி அடைந்திருக்கிறது. இதுவே படத்தின் மீதான துல்லியமான கவனம். தமிழ் சினிமாவின் பெரும் சாபமே எந்த வகையான கதையாக இருந்தாலும் அது கதாநாயக பிம்பத்திடம் சரணடைந்து சுருங்கிப் போவதுதான். இயக்குனரின் பங்களிப்பையும் ஒரு படத்தின் மையத்தையும் அப்படியே விழுங்கி ஆக்கிரமிக்கக்கூடிய கொடுய நோய் கதாநாயகத்துவம்.

எம்.ஜி.ஆரில் தொடங்கும் கதாநாகயத்துவத்தின் வீரியமான அரசியல் இன்றைய விஷால் வரை பெரும் பிம்பமாக வளர்ந்திருக்கிறது. இதனை மீறும் நுட்பமான கதை அமைப்பு வானம் திரைப்படத்தில் உருவாக்கப்ப்ட்டிருக்கிறது. ஏற்கனவே இது போன்ற கதை தொழிட்நுட்பத்தில் தீவிரமான கவனத்தைச் செலுத்திய உலக சினிமாக்களைப் பார்த்து நுகர்ந்த அனுபவம் இருப்பதால் வானம் படத்தின் கதைச் சொல்லல்முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமிழுக்கு இது புதிய முயற்சி.

கதை அமைப்பு

ஐந்து வகையான கதை, படம் முழுக்க வெவ்வேறான திசையில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் எந்த வகையிலுமே தொடர்பற்று தனித்தனி இலையில் ஓடிக்கொண்டிருப்பதுதான் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஐந்து முக்கியமான கதையோட்டம் படத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வைத்து சொல்லப்பட்டதே கிடையாது.