Thursday, January 20, 2011

ஆட்டக்காரர்கள் குறைந்துவிட்ட தைப்பூசம்

தைப்பூசத்திற்குச் செல்வதை விட்டு 4 வருடம் ஆகியிருந்தது. இன்று மீண்டும் சென்றிருந்தேன். 4 வருடத்திற்கு முன் தைப்பூசத்தின் மூன்றாவது நாளின் இரவில் எந்தக் காரணமுமில்லாமல் ஆட்கள் நிரம்பி வழிந்த சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, அப்பொழுது அங்குக் காவடிகளோ அல்லது இரதமோ எதுவும் இல்லை. எல்லோரும் வெறுமனே எதற்காகவோ நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர முடிந்தது.

உடனே அருகில் இருந்த நண்பனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன் பிறகு தைப்பூசம் என்றால் நகரம் அடையும் பரப்பரப்பான ஒரு விழா என மட்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுவேன். எங்கோ மூலைக்குள் தப்பு சத்தமும் காவடி குலுங்கி ஆடும் சத்தமும் கேட்கத் துவங்கும். இரண்டாம் படிவம் படித்தக் காலக்கட்டத்தில் தைப்பூசம் எனக்காகவே நடத்தப்படுகிறதென ஒரு கொண்டாட்ட உணர்வு மேலோங்கி கிடந்தது. காலையில் சுங்கைப்பட்டாணி தலைவெட்டி கோயிலில் துவங்கும் ஆட்டம் இரவு 12மணியைக் கடந்தும் சற்றும் பலவீனப்படாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.