Tuesday, January 11, 2011

சிறுகதை விமர்சனம்: சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசிய பத்திரிக்கைகளில் இதழ்களில் பிரசுரமாகும் கதைகளில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குப் பரிசுக் கொடுப்பதோடு, அந்தச் சிறுகதைகளை நூலாகத் தொகுத்தும் வெளியிட்டு வருகின்றது. இந்த ஆண்டு மலேசிய தினசரி பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் வந்த கதைகளிலிருந்து 20 கதைகள் சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கதைகளில் மார்க்ரெட் செல்லதுரை எழுதிய ‘சில நேரங்களில் சில ஏவாள்கள்’ கதை 2009-க்கான சிறந்த கதையாக எழுத்தாளர் பிரபஞ்சனால் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

மார்கரெட் செல்லதுரையின் சில சிறுகதைகளைப் பத்திரிகையில் வாசித்த அனுபவம் உண்டு. இவருடைய இந்தச் சிறுகதை அவருடைய கடந்தகால கதைகளைவிட கொஞ்சம் தரமானதாகவே கருத வாய்ப்புண்டு. இந்தச் சிறுகதை இங்கு விமர்சிக்கப்படுவதற்குக் காரணம் 2009-க்கான சிறந்த சிறுகதையை ஒரு பொதுவான வாசிப்பிற்கும் அதன் மூலம் பெறப்படும் பலவகையான வாசிப்பு அனுபவத்தையும் முன்வைக்க வேண்டும் என்கிற நோக்கமே ஆகும்.

அடர்ந்து தூறும் ஒரு மழைப்பொழுதில் பேரங்காடியினோரமாக ஒதுங்கி நிற்கும் ஏவாளிடமிருந்து சிறுகதை தொடங்குகிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில் அவள் தனக்கு மிகப் பழக்கமான ஒருவனை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்துவிடுகிறாள். கதையில் அவன் ‘சாத்தானாக’ கருதப்படுகிறான். வீட்டிற்கு வந்ததும் கதையினூடே அவன் ஏவாளின் உடலையும் அழகையும் இரசித்தப்படியே இருக்கிறான்.

1. கலை தொடர்பற்ற தாவுதலும் பிரச்சாரத்தன்மையும்

இதற்கிடையில் கதை மிகவும் வலுவாக நடைமுறை யதார்த்தத்திலிருந்து ஒரு பிரச்சார பிரதிக்குள் நுழைகிறது. சாத்தான் உங்கள் உலகம் எப்படி இருக்கிறது என ஏவாளிடம் வினவ, உடனே ஏவாள் உலகில் நிகழும் கொடுமைகள் பற்றி பிரசங்கம் செய்யத் துவங்குகிறாள். இன்றுதான் அவள் புதியதாக உலகக் கொடுமைகளைத் தரிசித்தவள் போல மிகவும் போலியாகப் பதற்றமும் வெறுப்பும் அடைகிறாள். வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரு நண்பர்கள் என்கிற தோரணையில் நம்மை இழுத்துக் கொண்டு போகும் கதை திடீரென தொடர்பற்ற நிலையில் பெரும் குறியீடுகளுக்குள் தாவுகிறது. அவன் சாத்தானாகவும் அவள் உலகில் தோன்றிய முதல் பெண்ணாகவும் மாறிவிடுகிறார்கள். இயற்கை பேரிடர், புயல் வெள்ளம் என அரைப்பக்கத்திற்குச் செய்திகள் போல விவாதம் நீள்கிறது.