Tuesday, November 8, 2011

கவிதை: ஒரு சொல்லைக் கொன்றவுடன் அடக்கம் செய்யவும்

ஒரு சொல் ஊனமானதுடன்
தன் மீதான அனைத்து குரல்களையும் கொன்றுவிடுகிறது.
ஒரு சொல்லை எப்படி ஊனமாக்கலாம்?
பெரும் வாக்கியத்துக்குள் அர்த்தமற்று நுழைக்கலாம்
தனி வாக்கியத்தில் பிழையான பொருளுடன் உள்நுழைக்கலாம்
குறிலை நெடிலாக்கி நெடிலைக் குறிலாக்கி துணைக்காலைப் பிடுங்கியெடுத்து
சொல்லுக்குள்ளிருக்கும் எழுத்தை எப்படிவேண்டுமென்றாலும் மாற்றிச் சிதைக்கலாம்.
ஊனமான ஒரு சொல்லைப் பிறகெப்படிக் கொல்வது?

பிழையற உச்சரித்து அதனை மாற்றி நிறுவுவதன் மூலம்
ஒரு சொல் தன் உயிரை இழக்கிறது.
பிழையுடன் உச்சரிக்கப்பட முதலில் அச்சொல்
ஊனமாக வேண்டும்.
காலையோ கொம்பையோ சுழியையோ விலங்கையோ
உடைத்துப் பிய்த்தெடுக்க உங்கள் கரங்கள் தயாராவது நல்லது.
செத்த சொற்களை எப்படி அடக்கம் செய்வதென யோசிக்கிறீர்கள்.
இறந்துபோன சொல்லை வாக்கியத்திற்குள்ளே விடுவதால்
நாற்றம் அடிக்கலாம் அல்லது ஊறிப் போய் விஷமாக மாறிவிடலாம்.
நீலமேறிய சொல்லை வாக்கியத்திலிருந்து மெதுவாகி உருவி
வெளியேற்றுவதன் வழி எல்லாமும் சரியாகிவிடும்.
இப்பொழுது இதைத் தீர்மானித்துக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில்
இவையாவும் பிழையாக உச்சரிக்கப்பட்டு நம் உடல் சேதமாக்கப்பட்டு
சட்டென ஒரு பெரிய கரம் நம்மை அகற்றும்போதுதான் தெரிகிறது
நாம் வாழ்வதும் ஒரு நீண்ட வாக்கியத்திற்குள் என்றும்
இன்னும் சிறிது நேரத்தில் நாம் ஊனமாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்றும்.

கே.பாலமுருகன்

1 comment:

நந்தினி மருதம் said...

கவிதை சிறப்பாக இருக்கிறது.
தனித்தனமையுடன்.
உங்கள் தனித்தன்மையுடன் நீங்கள்
கவிதை வானில் சிறப்பீர்கள்
---------------------------
நந்தினி மருதம், நியூயாரக், 2012-07-05