Monday, August 29, 2011

பினாங்கு போர் அருங்காட்சியகம்


இரண்டாம் உலக போர் சமயத்தில், தற்காப்புக்காக பிரிட்டிஷாரால் 1930-இல் கட்டப்பட்ட இரகசியக் கோட்டையைத்தான் 2002ஆம் ஆண்டு அருங்காட்சியமாக பொதுமக்களுக்குத் திறந்துவிட்டார்கள்.

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது

காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து பரவவிடும் தகரங்கள், பாதி நீரை நிரப்பிக்கொண்டு பல நாட்களாக இடைச்சட்டத்திலேயே உட்காந்திருக்கும் குவளை, என அனைத்தையும் வெகுநேரம் பார்த்திருக்க முடியவில்லை. எல்லாமும் காலத்தை உறிஞ்சி தனக்குள் நகரவிடாமல் தடுத்து வைத்துக்கொள்கின்றன.

இன்று இந்த வீட்டைக் காலி செய்தாக வேண்டும். தரையில் நான் படுத்திருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தள்ளி சன்னல். கதவு திறந்தபடியிருக்க வெளியில் வீடுகளிலிருந்து திட்டு திட்டாக வெளிச்சம் ஒழுகியபடியே இருந்தது. வழக்கமாக மூன்று மாதமொருமுறை இப்படி வேறு வீடு தேடி அலைந்துகொண்டிருப்பது இந்தச் சிறுநகரத்தில் என்னைப் போன்ற குடும்பமற்ற மனிதனுக்கு மரபார்ந்த விசயம். அந்த மரபை உடைக்க முடியாமல் இடம்பெயர்ந்து இங்கு வந்து சேரும்போது நகரம் மழைக்காலத்தில் கரைந்திருந்தது.

Thursday, August 18, 2011

கவிதை: மௌனத்திற்குள் நிகழும் கொலை


1
சுவரோடு ஒரு தூசியைப் போல
படிந்து கிடப்பவர்களும்
படுக்கைக்குள் குழி விழுந்து
மூழ்கிப் போனவர்களும்
சன்னல்களின் இடுக்குகளில்
தன் மூச்சுக் காற்றை
ஒளித்து வைத்தவர்களும்
ஒளி இழந்த கண்களுக்குள்
ஆயிரமாயிரம் இரவுகளின்
தனிமையைப் பத்திரப்படுத்தியவர்களும்

Friday, August 12, 2011

அழகர்சாமியின் குதிரை : நாட்டார் தெய்வமும் ஒரு சாமன்யனும்

இந்தியாவின் ஒரு கிராமத்தில்(மல்லையாபுரம்) நடக்கும் கதை இது. வழக்கம்போல திருவிழா நடத்துவதில் சிக்கல். பங்காளி பிரச்சனைகளால் பலமுறை திருவிழா தடைப்பட்டுப் போகிறது. ஆகையால் கிராமத்தில் மழை இல்லை எங்கும் வரட்சி பரவிக் கிடக்கிறது. சாமியாடியின் மூலம் அழகர்சாமி தன் மனக்குமுறல்களை முன்வைப்பதாக அந்தக் கிராமத்தின் கோடாங்கி நாடகமாடி திருவிழாவை நடத்த வேண்டும் என எல்லோரின் மனதிலும் எண்ணத்தை விதைக்கிறான். கிராமங்களில் திருவிழாவும் நாட்டார் தெய்வங்களும் எல்லை காவல் தெய்வங்களும் மிக முக்கிய தொன்ம குறியீடுகளாகும். அவர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவையும் பிரதிபலிக்கும் சில நம்பிக்கைகள் சார்ந்த கட்டுமானங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கின்றன.

Tuesday, August 9, 2011

நேர்காணல்: “முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்” - மஹாத்மன்

நேர்காணல் / நிழல்படம்: கே.பாலமுருகன்

மஹாத்மன் சிறுகதைகள்' எனும் சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான வாசக கவனத்தைப் பெற்றவர் எழுத்தாளர் மஹாத்மன். சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு எழுத்துப்பிரதிகளைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் இவர் ஒரு நிலைத்தன்மையற்ற வாழ்வினைக் கொண்டிருக்கிறார். அதையே அவர் படைப்பின் மைய சக்தியாகவும் உருமாற்றுகிறார். தன்னைப் பல நேரங்களில் 'பரதேசி' என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் இவரின் இடமும் இருப்பும் சூட்சுமமானது. ஆனாலும் எல்லாவகை வாழ்வியல் சிக்கல்களோடும் அவர் தன்னை இலக்கியத்தில் பிணைத்தே வருகிறார். 'வல்லினம்' இதழின் நேர்காணலுக்காகச் சுங்கைப்பட்டாணி வந்த அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். சில இடை கேள்விகள் தொலைபேசிவழி கேட்டுப்பெற்றது. நேர்காணலை எழுதி முடித்தப்பின் வாசித்தபோது ஒரு வெறுமை இருந்தது. அது அவ்வப்போது மஹாத்மன் ஏற்படுத்தும் வெறுமையா என்று புரியவில்லை.
கேள்வி: எப்பொழுது எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவானது? உங்கள் எழுத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

மஹாத்மன்: தைப்பிங் சிறையில் இருக்கும்போது இடைவிடாமல் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாயின. சக கைதிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். சிறுகதை தொகுப்பிற்கு பிறகு கூடுமானால் இவ்வாண்டில் ஒரு கவிதை தொகுப்பும் அடுத்தாண்டு ஒரு நாவலும் வெளியிட உத்தேசம். அந்த எழுத்துப் பணிகளில் முழு மூச்சாய் என்னை ஈடுப்படுத்திக்கொண்டு வருகிறேன்.

கேள்வி: நீங்கள் உங்களை ஏன் தொடர்ந்து ‘பரதேசி’ என அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்?

மஹாத்மன்: ஒரு காலக்கட்டத்தில் முற்றிலுமாய் பரதேசியாய் அலைந்து திரிந்தேன். படைத்தவன் மீதான என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை வெளிப்படுத்துவதற்காகச் செயல்படுத்தியதுதான் பரதேசி திரிதல். படைத்தவனிடமிருந்து பேரற்புதம், பேராச்சரியம், பேரதிசயம் ஒன்றும் நிகழ்த்தப்படாததால் என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை எழுத்தில் வெளிப்படுத்தி வருகிறேன்.

கேள்வி: ஆரம்பக்காலத்தில் தாங்கள் மஹாத்மன் மற்றும் நண்பர்கள் எனும் பெயரில் எழுதி வந்தீர்கள். யார் அந்த நண்பர்கள்? புனை பெயரின் அவசியம் என்னவாக இருந்தது?