Wednesday, April 27, 2011

இந்திய சினிமா : குட்டி - கனவுகள் சிதையும் நகரம்


சுங்கைப்பட்டாணி முன்பொரு காலத்தில் சிட்டுக்குருவிகளின் நகரமாக இருந்தது. இரவில் எங்கிருந்தோ வந்து சேரும் சிட்டுக்குருவிகள் மின்சார கம்பிகளில் அமர்ந்துகொண்டு நகரம் முழுக்க இரச்சலை ஏற்படுத்தியிருக்கும். தொடக்கத்தில் அதிசயமாக இருந்த இந்த வருகை பிறகு நகரப் பரப்பரப்பின் ஓர் அங்கமாகி போனது. அம்மாவுடன் ஜெயபாலன் வாத்தியார் வீட்டுக்குப் போய்விட்டு வரும் வழியில் பழைய யூ.டி.சி பேருந்தில் அமர்ந்துகொண்டு சன்னல் வழியாக அடர்ந்து காணப்படும் சிட்டுக்குருவிகளின் உலகத்தைத் தரிசித்திருக்கிறேன். சதா சிட்டுக்குருவின் எச்சம் அங்கு நடமாடும் மக்களின் மீது விழுந்தபடியேதான் இருந்தது. அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பின்னர் அனைவரும் கற்றுக்கொண்டார்கள். நகரத்தின் அந்தப் பகுதியைக் கடக்கும் எல்லோர் தலைக்கு மேலும் ஒரு நாளிதழ் விரிக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டிருக்கும்.

Sunday, April 24, 2011

கவிதை: மேசையின் மீதிருந்த வாக்கியம்

பருகிவிட்டு அரைநீருடன்
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.

நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.

Wednesday, April 13, 2011

கவிதைகள்: அப்புவின் நீங்காத உலகம்-2

1. வித்தைக்குப் பிறகும்

வித்தைக்குத் தயாராகும்
சிறுமிக்குப் பிறர் வியக்கக்கூடிய
அதிசயம் அல்லது கோமாளித்தனம் தேவைப்பட்டது.

நாக்கைச் சுழித்து
கருவிழி இரண்டையும்
இடம் மாற்றி அசைத்து அசைத்து
முன்பல்வரிசையை உதடுக்கு வெளியில் வைத்து
சத்தமாகச் சிரிப்பதன் மூலம்
ஒரு வித்தையைக் காட்டிவிட்ட மகிழ்ச்சி
சிறுமிக்கு.

Tuesday, April 5, 2011

சமீபத்திய கவிதைகள்: அப்புவின் நீங்காத உலகம்

கவிதை 1
கொலையுணர்வு

கைக்கு எட்டாத கரும்பலகை
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.

ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின்
பாதி உடல் அழிக்கப்படுகிறது.

எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.

உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு

Saturday, April 2, 2011

பினாங்கு நகரின் மாலையில்-3 (கௌதம் மேனனின் ‘நடுநிசி நாய்களும்’ ஜெயகாந்தனும்)


நான், தேவராஜன், பச்சைப்பாலன், மூர்த்தி அவர்களும் உரையாடிக்கொண்டே அருமாகையிலுள்ள உணவகத்திற்குச் சென்றோம். எல்லோரும் உணவருந்தும்போது கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த “நடுநிசி நாய்கள்” படம் குறித்த உரையாடல் தொடங்கியது. சமீபத்தில் முகநூலில் அப்படம் குறித்து சிறிய விமர்சனம் செய்திருந்ததைப் படித்துவிட்டு எழுத்தாளர் பச்சைபாலன் தனியாகச் சென்று அப்படத்தைப் பார்த்து வந்தார். கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் படத்தை எந்தச் சலனமும் பதற்றமும் இல்லாமல் பார்க்கக்கூடிய ஒரு பார்வையாளன் இங்கு இல்லை என்பதுதான் பலவீனமே தவிர படமல்ல எனச் சொன்னேன். 15 ஆண்டுகளுக்கு முன் ஜெயகாந்தன் எழுதி தமிழில் அபாரமான சமூக ஒழுக்க நியதிகளுக்கு எதிரான பாய்ச்சலை ஏற்படுத்திய குறுநாவலான ரிஷி மூலத்தை இந்தப் படம் அடிக்கோடிட்டு ஞாபகப்படுத்துகிறது.