Wednesday, November 24, 2010

சந்திப்புக் கூட்டம்: கெடா மாநில தமிழ் ஆசிரியர்களும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும்

நேற்று சிங்கப்பூரிலுள்ள உமருபுலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும் கெடா மாநிலத்தின் தமிழாசிரியர் குழுவும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. 3 மணி நேரச் சந்திப்பில் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆண்டியப்பன் உரையாற்றினார். பிறகு கெடா மாநில கல்வி இலாகாவின் மொழித்துறை துணை இயக்குனர் திரு.தமிழ்செல்வன் உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு படைப்பாளனுக்குப் பின்னனியிலும் ஓர் ஆசிரியர் கட்டாயம் இருப்பார் எனவும் அவருடைய பாதிப்பு ஏதாவது ஒருவகையில் அவனை ஆட்கொண்டிருக்கும் எனவும் ஆசிரியரின் முக்கியத்துவத்தைக் கூறினார்.

தொடர்ந்து, கூலிம் பண்டார்பாரு மாவட்டத்தில் ஆசிரியரராகப் பணியாற்றும் திருமதி.உதயகுமாரி அவர்கள் கெடா மாநிலத்தின் தமிழாசிரியர்களின் இலக்கியப் பணி எனும் தலைப்பில் கட்டுரையைப் படைத்தார். அதற்குப் பிறகு எனக்கும் பேசுவதற்கு வாய்ப்பளித்துவிட்டார்கள். அது ஒரு விபத்து போல சில உண்மைகளைப் பேசுவதற்குக் காரணமாகிவிட்டது. அந்தச் சந்திப்புக்கூட்டத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கம் சார்பாக 3 பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். கெடா மாநில ஆசிரியர்கள் 40க்கும் மேற்பட்டோர். இதைச் சந்திப்புக்கூட்டம் எனச் சொல்வதற்குக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்ததால் தவறுதலாக அதை மேடையில் அப்படியே சொல்லிவிட்டேன்.

கெடா மாநிலத்திலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் சிங்கப்பூரில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களையும் உரையாடச் செய்வதன் மூலம் ஒரு பயனுள்ள களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். அதைச் செய்யத் தவறியதற்கு 25 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு எழுத்தாளர் சங்கம் கொடுக்கும் காரணங்கள் என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. இந்த முக்கியமான நிகழ்வுக்காகச் சிரமம்பாராமல் வருவதற்குக் கட்டாயம் அங்குள்ள எழுத்தாளர்கள் தயாராகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். குறிப்பாக நான் அறிந்த வரையில் இப்பொழுது மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் ஷானவாஷ், ஜெயந்தி சங்கர், மூத்த எழுத்தாளர் கண்ணபிரான் போன்றவர்களுக்கு இந்த நிகழ்வு குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை என்பதை நேரடியாகக் கேட்டறிந்தேன். அதை இங்குக் குறிப்பிடவும் கடமைப்பட்டுள்ளேன்.

ஆகையால் அடுத்தமுறை இம்மாதிரியான சந்திப்பின்போது கூடுதலான சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் திரட்டுவதற்கான சக்தியாகச் சங்கம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். தொடர்ந்து 3 வருடத்திற்கும் மேலாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்களுடன் நட்புடன் பழகுவதன் மூலம் அங்குள்ள சில கட்டுப்பாடுகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். யாரிடம் நேர்மையை எதிர்பார்க்க வேண்டும் என்கிற சமயோசிதம் இருக்கப்பெறுவது ஒரு படைப்பாளனுக்கு மிக அவசியம்.

அதனைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு எதைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற திட்டம் முறையாகச் செய்யப்படாததைப் போல தோன்றியது. ஆகையால் என்னுடைய உரையில் சிங்கப்பூரில் வாசிப்பு சார்ந்து நடத்தப்படும் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ எனும் நிகழ்வைப் பற்றியும் அங்குள்ள நூலகத்தின் சிறப்பு பற்றியும் கூறினேன். வாசிப்பின் மூலம் தன் நாட்டு மக்களை மேம்படுத்த வேண்டும் என்கிற அக்கறையை இங்குள்ள 22 நூலகங்களும் வெளிப்படுத்துகின்றன. கவனிக்கத்தக்க ஒரு முயற்சி ஆகும். ஆயிரம் குழுமங்கள் நூலகம் சார்ந்து உருவாகிவிட்டதாகக் கருத்துரைக்கப்பட்டாலும், நூலகம் என்பது பொதுவான ஓர் இடம். அதனை முழுமையாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு முழுமையான சுதந்திரமும் உண்டு.

இனி இது போன்ற சந்திப்புகளை நடத்த நேர்ந்தால், மேற்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் தவிர்க்கப்படும் என்கிற நம்பிக்கையை அங்கு வந்த தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நல்லது.

கே.பாலமுருகன்
மலேசியா