Sunday, October 24, 2010

லண்டன் சேனனுடன் வல்லினம் கலந்துரையாடல்

நேற்று இரவு 8.00 மணி போல லண்டனிலிருந்து வருகையளித்திருந்த எழுத்தாளர் சேனன் அவர்களுடன் வல்லினம் நண்பர்கள் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியிருந்தோம். பிரிக்பீல்ட் உணவகத்தில் சுமார் 3 மணி நேரம் சேனனுடன் உரையாட முடிந்தது.

சேனன் அப்பொழுதுதான் இலங்கைக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியிருந்ததால் அங்கு அவருக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். சேனன் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலைப் பதிவு செய்யும் வகையில் ‘எதிர்’ எனும் இணையத்தளத்தில் எழுதி வருகிறார். மேலும் சேனன் சிரித்த முகத்துடன் நட்புடன் பழகக்கூடியவராக இருந்தார். நான், நவீன், யுவராஜன், சிவா பெரியண்ணன், தோழி, மணிமொழி, யோகி, சந்துரு என அனைவரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டோம். இலக்கியம் குறித்து தீவிரமாகக் கலந்துரையாட முடியாவிட்டாலும் சேனன் அவரது இலக்கிய பார்வையையும் அரசியல் பார்வையையும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். நவீன் ஏற்கனவே லண்டன், பாரிஸ் போன்ற இடங்களுக்குச் சென்று ஷோபா சக்தி, சுகன், சேனன் போன்றவர்களைச் சந்தித்ததால், அவர்களை இங்கே அழைத்து வருவதில் எந்தச் சிக்கலும் இல்லை. விரைவில் வல்லினம் சந்திப்பு அ.மார்க்ஸ் எனும் முக்கியமான எழுத்தாளருடன் நடைபெறும் எனவும் திட்டமிருப்பதாகக் கூறினார்.

விரைவில்(டிசம்பர்) கவிஞர் பெருந்தேவி கோலாலம்பூர் வருவதாகக் கூறியிருக்கிறார். அவரையும் வல்லினம் நண்பர்கள் சந்திக்கக்கூடும். இந்த மாதிரியான சந்திப்புகள் எந்தவிதமான மேடை அரசியல் ஏற்பாடுகள் ஏதுமில்லாமல் மிக எளிமையாக நடத்தப்படுகின்றன. குறிப்பாக மது வாங்கிக் கொடுத்து, அவர்கள் மொக்க போதையில் இருக்கும்போது இலக்கியம் பேசும் (போதையில்தான் நல்ல இலக்கியம் பேச முடியும் என்கிற மாயை) விதத்தைப் பின்பற்றாமல், உணவகத்திலும் இலக்கியம் பேசலாம் என்கிற மேடை நிகழ்ச்சிகளின் அனைத்து சாத்தியங்களையும் களைத்துப் போட்டது வல்லினம் சந்திப்புகள்தான். நல்ல முயற்சிதானே.

சேனன் அவர்கள் குறிப்பிட்ட இலக்கிய ஆளுமைகளை மறுக்கக்கூடிய விதத்தில் பேசியது வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே ஷோபா சக்தி வந்தபோதும் இதே போலத்தான் பலரை மறுத்து அவர்களின் ஆளுமைகளை உடைத்துத் தள்ளினார். (ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமையும் நமக்குரியதாக இருந்தபோதும்). சேனன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது அதிகாரத்திற்கு எதிராகக் கலகக் குரலை ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான். அதிகாரம் இலக்கிய சூழலில் இருந்தாலும் அதனை நோக்கி கலகத்தை ஏற்படுத்துவதுதான் மாற்றுப் பார்வையை ஏற்படுத்தும் எனக் கூறினார். 

நண்பர் யுவராஜன் உடனே ஜெயமோகன் வந்தபோது “கறாராக இருப்பது” பற்றியும், சேனன் அதே போல, “கலகத்தை” பற்றியும் சொல்லிவிட்டதால் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என உற்சாகக் குரலுடன் கூறினார். நவீன் தொடர்ந்து இலங்கை இளம் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறித்தும் அடுத்த தலைமுறையின் இலக்கியத்தைப் பற்றியும் கேட்டார். சேனன் குறிப்பிட்ட சில எழுத்தாளர் இளைஞர்கள் இப்பொழுது தீவிரமாக இயங்கி வருவதாகவும் தீபச்செல்வன் போன்ற எழுத்தாளர்கள் போர்ச்சுழலிலும் போருக்குப் பிந்தைய நெருக்கடியான சூழலிலும் எழுதி வருவதையும் குறிப்பிட்டார்.

யுவராஜன் அவர் வாசித்த ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ பற்றி சேனனிடம் பேசினார். மார்க்சியம் பற்றியும் சோவியத் யூனியன் பற்றியும் கம்யுனிசம் பற்றியும் அந்த நாவலில் பேசப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். மார்க்சியம் பற்றி விரிவாக அறிந்து வைத்திருக்கும் சேனன் போன்றவர்கள் அந்த நாவலை வாசிக்கும் போது அதை வேறுவிதமான ஆய்விற்கும் புரிதலுக்கும் வாசிப்பிற்கும் உட்படுத்த வாய்ப்புண்டு என யுவா கூறினார். சேனன் மலேசிய இலக்கியம் குறித்து லண்டனில் ‘எதிர்’ இணையத்தளம் மூலம் அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். 

வல்லினம் மீதான அவர் பார்வை மலேசிய இலக்கியம் குறித்த விமர்சனத்திலிருந்து வேறுப்பட்டிருந்தது. இதுவரை மலேசிய இலக்கியம் தீவிரமான வாசிப்பிற்குப் பரவலாகப் போய் சேரவில்லை, ஆகையால் புலம் பெயர்வு இலக்கியம் என்கிற ரீதியில்கூட மலேசிய இலக்கியத்தை அறியமுடியவில்லை எனக் கூறினார். இனி வல்லினம் அநங்கம் போன்ற சிற்றிதழ்களின் மூலம் இந்தத் தடைகள் தகர்க்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இரவு 10.30க்கு மேல் எங்களின் உரையாடல் முடிந்தது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா