Thursday, September 9, 2010

ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2 : உலக இலக்கியமும் சமரசமற்ற எழுத்தும்

குறிப்பு: இந்தப் பதிவுகளில் ஜெயமோகன் குறிப்பிட்டதாகக் கூறப்படும் எல்லாமும் ஜெயமோகனுடன் ஏற்பட்ட உரையாடலின்போது என் மனதில் பதிவு செய்யப்பட்டது மட்டுமே. ஒளி/ஒலி நாடாக்களைப் பயன்படுத்த வாய்ப்புக் கிட்டவில்லை. ஆகையால் கருத்து பிழை ஏதேனும் நேர்ந்தால், அது என்னுடைய தவறாக இருக்கக்கூடும்.

இன்று காலையிலேயே பிரமானந்த ஆசிரமத்திற்கு நானும் கோ.புண்ணியவானும் சென்றுவிட்டோம். நவீன இலக்கிய சிந்தனைக்களம் அண்ணன் ஜெயமோகனைப் பினாங்கிற்கு அழைத்துச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். அதன்படியே ஆசிரமத்திலிருந்து சுவாமியின் வாகனத்தில் நான், புண்ணியவான், மணிஜெகதீசன், குமாரசாமி, ஜெயமோகன், சுவாமி மற்றும் தமிழ் மாறன் என மொத்தமாக 7 பேர் சென்றோம்.

ஜெயமோகன் இன்று கொஞ்சம் கூடுதலான உற்சாகத்துடன் காணப்பட்டார். காலையிலேயே எழுத்தாளர்களை முன்வைத்து சொல்லப்படும் பல நகைச்சுவைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார். அப்பொழுதுதான் அண்ணன் மகிழ்ச்சியாகச் சிரித்ததைப் பார்த்தேன். இரண்டு பேர் மது அருந்திவிட்டு போதையில் சாலையில் படுத்துக் கிடந்திருக்கிறார்கள். அப்பொழுது காவல்துறை அதிகாரி ஒருவர் அவர்கள் இருவரையும் எழுப்பி மிரட்டியிருக்கிறார். மேலும் இருவரும் யார் என விசாரித்துள்ளார். ஒருவன் எழுந்து விழுந்துகிடக்கும் மற்றொருவனைக் காட்டி அவர்தான் பிரபல எழுத்தாளர் எனக் கூறியிருக்கிறான். பதிலுக்கு நீ யார் என காவல்துறை அதிகாரி கேட்க, “நான் அவருடைய தீவிர வாசகன்” எனக் கூறியிருக்கிறான்.

மேலும் நகைச்சுவைகளை அடுக்கிக் கொண்டே போனார் ஜெயமோகன். ஒருவன் தூக்கம் வருவதில்லை எனவும் அது ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும் மருத்துவரிடம் சென்றிருக்கிறான். அந்த மருத்துவர் இலக்கிய நாட்டம் உள்ளவர், உடனே தூக்கம் வருவதற்கு மருந்து எழுதி கொடுத்திருக்கிறார். “பொன்னியின் செல்வன் காலையில் இரண்டு வேளை படிக்கவும், மாலையில் மூன்று வேளை படிக்கவும் என. ஜெயமோகன் ஒவ்வொரு நகைச்சுவையையும் சொல்லிவிட்ட பிறகு தன்னை மறந்து சிரித்தார்.

பினாங்கிலுள்ள தண்ணீர் மலை கோவிலைச் சென்றடைந்ததும், அந்தக் கோவிலைப் பற்றி கேட்டறிந்து கொண்டார். கோவில் புதுப்பிக்கப்பட்டு வருவதையும் மேலே புதிய கோவில் கட்டப்பட்டு வருவதையும் பார்த்தார். தண்ணீர் மலையின் படிக்கட்டுகளில் பேசிக் கொண்டே ஏறினோம். ஜெயமோகன் எப்பொழுதும் வித்தியாசமான அபாரமான தகவல்களையும் ஞானத்தையும் கொண்டுள்ளார். அவரால் உடனுக்குடனே எந்த விசயத்தையும் தொட்டு ஆழமாக உரையாட முடிகிறது.

முருக கடவுள் சங்க காலத்தில் ஒரு குறுநில சிறு தெய்வம் எனவும் சங்கம் மறுவிய காலக்கட்டத்தில்தான் அதாவது பக்தி காலக்கட்டத்தில் பெருந்தெய்வமாக வழிப்படப்பட்டார் எனவும் குறிப்பிட்டார். செட்டியார்கள் புலம்பெயர்ந்தபோது முருகரையும் கொண்டு சென்றார்கள், அவரையும் முருக பக்தியையும் பரப்பினார்கள் எனவும் சான்றுகள் உள்ளன. பினாங்கிலுள்ள தண்டாயுதபாணி கோவிலுக்குக் கீழேகூட செட்டியார் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இந்து கடவுள்கள் பற்றியும் அந்தப் பக்தி மார்க்கங்களையும் தண்டாயுதபாணி கோவிலில் வைத்து மேலும் உரையாடினார்.

அங்கிருந்து புறப்பட்டு பிறகு நகர் உலா வந்தோம். ஜெயமோகன் காரிலேயே அமர்ந்துகொண்டு பினாங்கு நகரத்தின் பகுதிகளையும் மக்களையும் பார்த்துக் கொண்டே வந்தார். பினாங்கு குறித்த வரலாற்று சான்றுகள் சிலவற்றை தமிழ் மாறன் கூறினார். நகரத்தைப் பற்றி குறிப்பிடுகையில் ஜெயமோகன் அவர்கள் அதன் மக்கள் அமைப்பைப் பற்றியும் அங்கு உருவாகியிருக்கும் இடைவெளிகள் பற்றியும் ஒரு விசயம் கூறினார். பெரும்பாலும் வசதியற்றவர்கள்தான் நகர்ப்பகுதியில் வாழ்கிறார்கள், அவர்கள்தான் நகர்ப்பகுதியை தங்களின் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும், வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் எப்பொழுதும் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள நிலப்பகுதியில் தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் எனவும் கூறினார். வசதியில்லாதவர்களின் இருப்பிடம்தான் நகரம், அவர்களுக்கான எல்லாம் தேவைகளும் அங்கேயே மிக வசதியாக முடித்துக் கொள்ளப்படுவதால்தான் அவர்கள் நகரத்திலிருந்து தூரமாகத் தள்ளி வசிப்பதை விரும்புவதில்லைப் போல.

மேலும் ஜெயமோகன் கம்ப இராமயணத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். எத்தனை எத்தனை எதிர் அவதூறுகள் வந்தபோதும் கம்ப இராமாயணம் வரலாற்றில் எப்படியாவது தன்னை மீட்டுக் கொண்டு மீண்டும் உயர்வான இடத்தில் தன்னை நிறுவிக்கொள்ளும் எனக் கூறினார். இறை மறுப்பை முன்னெடுப்பதற்காகத் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த சி.அண்ணாதுரை கீமாயணம் எனப் புத்தகம் எழுதினார். இது இராமயணத்தைக் கேலி செய்யும் வகையில் எழுதப்பட்ட பிரதியாகும். ஆனால் அதே காலக்கட்டத்தில் சிலம்பொலி செல்லப்பன் மேலும் ஒரு சில மனிதர்களின் மூலம் கம்பர் விழா நடத்தப்பட்டு, பல ஆய்வுகள் நடத்தப்பட்டு கம்ப இராமாயணம் மீண்டும் எழுந்து உருப்பெற்றது எனக் கூறினார்.

மாலையில் சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் “எழுத்தும் இலக்கிய எழுத்தும்” எனும் தலைப்பில் ஜெயமோகன் உரை நிகழ்த்தினார். 100க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்களும் பொது மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். பெரும்பாலும் ஜெயமோகனின் இலக்கிய படைப்புகளைப் படிக்காதவர்கள் இருந்தமையால், அவர் வசனம் எழுதிய சினிமாக்களைக் குறிப்பிட்டு சொல்லி அவரை அடையாளப்படுத்தவே நேர்ந்தது. ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகாவது ஜெயமோகனைத் தேடி வாசிப்பார்கள் என நம்புகிறேன்.

அந்த நிகழ்வில் ஜெயமோகன் பேசிய சில குறிப்புகள்:

1. தமிழ் இலக்கியம் என ஒன்று இப்பொழுது இல்லை, இனி உலக இலக்கியம் எனப் பிரக்ஞை மட்டுமே உருவாக வேண்டும், உலக இலக்கியங்கள் இப்பொழுது தமிழில் அதிகமாக மொழிப்பெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைப்பதால் தமிழ் வாசகர்கள் இனி நம் இலக்கியத்தை உலக இலக்கியம் என்கிற பரப்பிலிருந்துதான் மதிப்பிட வேண்டும்.

2. சமரசமற்ற எழுத்துத் தீவிரம் உருவாக வேண்டும். அது மட்டுமே எப்பொழுதும் தரமான ஓர் இலக்கிய முயற்சியை நோக்கி நம்மை நகர்த்தும்.

3. கறாரான விமர்சனப் போக்கு உருவாக வேண்டும். எதையும் எப்படியும் வன்மையாக நிராகரித்து கலை விமர்சனத்தை நிகழ்த்தக்கூடிய ஆளுமை உருவாக வேண்டும்

4. உலக இலக்கிய வாசிப்பை ஒவ்வொரு எழுத்தாளனும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், உலக இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் அண்மைய மாற்றங்கள்வரை ஒரு எழுத்தாளனால் அறியப்பட்டிருக்க வேண்டும்

5. காலம் காலமாகப் பல மாற்றங்களையும் புதுமையையும் கண்டதுதான் 2000 வருட வரலாற்றைக் கொண்ட நம் மரபு. புதுமையையும் புதுப்பித்தலையும் கொண்டிராத எந்த மரபும் வளர்ந்ததாகச் சொல்ல முடியாது. தொல்காப்பியமே மாற்றத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.


6. பின்நவீனத்துவம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் நவீனத்துவம் பற்றிய வரலாறு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நவீனத்துவத்தின் தோல்விதான் பின்நவீனத்துவம் என்கிற புரிதல் ஏற்பட வேண்டும்.

7. கோட்பாடுகள் அனைத்தும் ஒரு படைப்பைப் புரிந்து கொள்வதகான துணைக்கருவிகள் மட்டுமே, அதைக் கொண்டுதான் ஒரு படைப்பை உருவாக்குதல் என்பது “படைப்பைச் செய்தல்” எனும் அளவிற்குக் கருதப்படும்.

மேலும் பல விசயங்களைத் தொட்டு ஜெயமோகன் உரையாடினார். சினிமா தொடர்பான சில கேல்விகளும் கேட்கப்பட்டது. பார்வையாளர்களிடமிருந்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. தொடரும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா