Saturday, August 14, 2010

சினிமா விமர்சனம்: தாவரங்களின் நாவும் மனித தற்கொலைகளும் - The Happening

அம்மா தினமும் காலையில் எழுந்தவுடன் வீட்டின் எதிர்புறத்தில் இரும்பு கதவில் ஊர்ந்து கிடக்கும் கொடியைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருநாளும் அதன் அளவு நீண்டு கொண்டே இருக்கும். அதனைப் பார்த்தப்படியேதான் எங்களின் காலை பொழுதுகள் விடிந்து வெளியில் காத்திருக்கும். கொடி ஊர்வதைப் போல எங்களுக்குள் வீட்டைச் சுற்றியிருக்கும் தாவரங்கள் மீதான அன்பும் ஊர்ந்து ஊறிக் கிடக்கின்றன.

அப்பா கொண்டு வந்து சேர்த்த செடிகளில் வர்ணங்கள் எப்பொழுதும் வேறுவேறாகத்தான் தெரியும். காலையில் பார்க்கும்போது இருந்த வர்ணம் மாலையில் சூழலுக்குத் தகுத்தமாதிரி மங்கிப் போயிருக்கும். தாவரங்கள் சூரியன் மறைந்த பிறகு தற்காலிகமாக தற்கொலைச் செய்து கொள்கின்றன போல. தூரத்திலிருந்து எங்கள் வீட்டைப் பார்ப்பவர்கள் அது வீடென்பதைக் கிரகித்துக் கொள்ள கொஞ்சம் தடுமாறிவிடுவார்கள். அந்த அளவிற்குப் பூச்செடிகளும் இரும்பு கம்பிகளில் வேலிகளில் என்று ஊடுருவி பரவிய கொடிகளும் தனது இருப்பைப் பலப்படுத்தி வைத்திருந்தன.

சிறுவயதிலிருந்து தாவரங்கள் அடர்ந்த சூழலில் வாழ்ந்ததால், அந்த வாழ்தலில் கிடைத்த அனுபவத்துடன் இயற்கையின் மேலான பரிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. அன்மையில் பார்த்த the happening என்ற திரைப்படம் தாவரங்கள் மீதான அக்கறையையும் அன்பையும் சிறிதளவு அசைத்துப் பார்த்துவிட்டது என்றே கூறவேண்டும். வெறும் திரைப்படம்தானே என்று அவ்வளவு எளிதாக அந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்ட மனித மனநிலைகளை ஒதுக்கிவிட இயலவில்லை.

தாவரங்கள் மனிதர்களின் மீது ஏற்படுத்தும் வன்முறையை மிகவும் முரண்பாடான சூழலில் உலகப் பார்வையை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட படம்தான் M.Night shyamalan அவர்களின் the happening திரைப்படம். இவரின் பெரும்பாலான படங்களில் நீண்டு கிடக்கும் கதைக்கான களம் இருண்மையைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. சில படங்களில் மிகவும் ஆழமான குறியீடுகளை இருண்மை பாணியில் சொல்ல முயற்சித்ததால் சாமன்ய இரசிகர்களுக்குக் கதைக்கான மூலக் கரு விளங்காமலே போய்விடுகிறது. இருந்தபோதும் the happening திரைப்படம் கொண்டு வரும் செய்தி தாவரப் பிரியர்களுக்கும் இயற்கையைச் சுரண்டும் ஏகாத்திபத்திய வளர்ச்சி நிறுவனங்களுக்கும் பெரிய மிரட்டலையே ஏற்படுத்தியுள்ளது.

நாம் புறக்கணிக்க முயலும் ஒன்று நம் வளர்ச்சிக்காகக் கொன்று குவிக்கப்படும் ஒன்று இந்தப் பூமியிலிருந்து நம்மை அப்புறப்படுத்த காற்று வழி மரணமாக வருவதை மிகவும் அபூர்வமாக இந்தப் படத்தில் M.Night Shyamalan பதிவுச் செய்துள்ளார். நீயு யோர்க்கிலுள்ள சென்ரல் பார்க்(central Park) எனும் ஒரு பூங்காவில் நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களின் இருப்பு திடீரென்று இயக்கம் இழந்து சிலையாகிறது. மரத்தின் அடியிலுள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் இரு பெண்களின் உரையாடல் தடைப்படுகிறது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண் ஏதேதோ உலறுகிறாள், பிறகு சுயமிழந்து தலையிலுள்ள பின்னை உருவி கழுத்தில் சொருகிக் கொள்கிறாள். அதன் பிறகு சிலையாகிய மற்றவர்களின் மனநிலையும் அதேபோல் பாதிக்கப்பட்டு உள்ளார்ந்த நிலையில் அவர்களுக்குள் பெரிய பிரளயம் ஏற்பட்டு சொந்தமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தன்னைக் காயப்படுத்திக் கொள்ள துடிக்கிறார்கள். ஒவ்வொரு உடலாக மண்ணில் சாய்கின்றன. அடுத்து வரும் காட்சியில் உயரமான கட்டடத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதிக்கிறார்கள். கீழே விழுந்து சிதறும் அவர்களின் உடல்கள் திடீர் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

முதலில் இது தீவிரவாதிகளால் தொடுக்கப்படும் இராசயண வெடிக்குண்டு (airbomp chemical toxin) எனக் கருதப்பட்டாலும் படத்தின் நடுப்பாகத்தில் இது தாவரங்கள் வெளிப்படுத்தும் ஒருவகையான chemical response என்று வரையறுக்கப்படுகிறது. எங்கெல்லாம் மனிதக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றனவோ அங்குதான் முதலில் இந்தக் காற்று பரவி முதலில் அவர்களின் பேச்சில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது(confuse of speak) பிறகு அவர்களின் கவனம் நிலை தப்புகிறது(lost direction) இறுதியாக அவர்கள் மன ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள். சாலையில் போய்க் கொண்டிருக்கும் கார்கள் நின்று விடுகிறது. அதிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும் கண்ணாடியில் மோதி முகத்தைச் சிதைத்துக் கொள்வதும் என தற்கொலைகள் வினோதமாக நிகழ்கின்றன.

அந்தத் தாவரங்களின் தீயக் காற்று பரவும் நகரங்கள் அடையாளம் காணப்படுவதால் ஒருசிலர் அங்கிருந்து கிளம்பி வேறு திசையை நோக்கிப் புறப்படுகிறார்கள். அந்தக் குழுவில் இந்தப் படத்தின் கதாநாயகனான mark wahlberg (அறிவியல் ஆசிரியர்) அவனுடைய மனைவியும் நண்பனின் பிள்ளையும் இடம் பெறுகிறார்கள். அந்தக் குழுவில் இவர்கள் மட்டுமே கடைசியில் உயிர் தப்பிக்கிறார்கள். முழுக் கூட்டமாக நகர்வதால் அந்த விஷக் காற்று நம்மை தாக்கிவிடுகிறது என்பதால் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஓடுகிறார்கள். மனித நடமாட்டம் அதிகமில்லாத சூழலில் மட்டுமே தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற புரிதலில் ஆளுக்கொரு திசையில் மறைகிறார்கள்.

அந்தக் காற்று தாக்கிய மறுகணமே துப்பாகியால் அவர்கள் சுட்டுக் கொண்டு இறப்பதை வெறும் ஒலியினூடாகச் சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிக்கும் கதாநாயகனும் அவனது காதலியும் ஒரு வயதான பெண்ணின் வீட்டில் அடைக்களம் பெறுகிறார்கள். பிந்தைய காட்சியில் அந்த வயதான பெண்ணும் தாவரங்களின் விஷக் காற்றால் பாதிக்கப்பட்டு தன் வீட்டுக் கண்ணாடிகளிலே மோதிக் கொண்டு இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

பின்னனியில் நீண்ட சோகத்தின் குறியீடாக ஒலிக்கும் வைலின் இசையுடன் தொடங்குகிற படம் அடுத்து வருக் காட்சிகளில், மனிதர்களைத் துரத்திக் அவர்களின் மூளையின் செயலைத்தளங்களை சேதமாக்கி மூளையின் முக்கியச் செயலாக்கமான பிறப் பாகங்களுக்கு தகவல் அனுப்புவதை தடைச்செய்வதாகக் கதை நீள்கிறது. விழிப்பு நிலை இழந்து தன்னைக் காயப்படுத்திக் கொண்டு (self damaging)மனிதர்கள் இறக்கிறார்கள்.

கதைக்கான களம் பூங்காவில் தொடங்கி பிறகு சிறு நகரத்தில் நுழைந்து சாலை வழியாகப் பயணிக்கின்றது. சிறு நகரத்தில் இருப்பவர்கள் விஷக் காற்று பாதிக்கப்படாத இடங்களை
நோக்கி ஓடுகிறார்கள். செல்லும் வழியில் மரங்களில் மனிதர்கள் தூக்கிலிட்டு சாலைகள்தோறும் தொங்கிக் கிடக்கும் காட்சி தற்கொலையின் உச்சக்கட்டத்தைக் காட்டுகிறது.

இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்தும் அழிவை ஒரு காலக்கட்டம்வரை ஏற்றுக் கொள்ளும் இயற்கை திடீரென்று இரசாயண பகிர்வு வழியாக மனித அழிவை ஏற்படுத்தி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதைப் போல படமாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தினூடாக தாவரங்களும் செடிக் கொடிகளும் தம்முடைய எதிர்ப்பு சக்தியை இருந்த இடத்திலேயே இப்படியான இராசயண வெளிப்பாடுகள் மூலம்தான் தெரிவிக்கிறது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. The happening திரைப்படத்தை நிகழ்வு சார்ந்த எச்சரிக்கையாகவே அணுக முடிகிறது. இது ஒருவகை தீர்க்கத்தரிசின முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் கோட்பாடாகவும் இருக்கலாம்.

இதன் மூலம் இரண்டு மனநிலைகளை உணர முடிகிறது. ஒன்று இயற்கையின் அழிவில் நமக்கெல்லாம் பங்கு இருப்பதால் இனியும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதும் மற்றொன்று வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்களைப் பார்க்கும்போது அவையுடன் நட்பு பாராட்டி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதும். எங்காவது நகர மேண்மைக்காக அழிக்கப்படும் மரங்களைப் பார்க்கும்போது அது வெறும் நிகழ்வாகத் தெரிவதில்லை. ஒருநாள் the happening நிகழும் என்பதற்கான எதிர்கால குறியீடாகத்தான் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. இயற்கையின் நாவு வெகுத் தொலைவில் இல்லை.

நன்றி: யுகமாயினி 2009 இதழில் பிரசுரமானது.

ஆக்கம் : கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா