Thursday, April 22, 2010

இந்தி திரைவிமர்சனம்- அப்பா-Paa- மீட்க முடியாத முதிர்ச்சியும் மீட்கப்படும் உறவுகளும்

“கடவுளை ஏன் தொந்தரவு செய்கிறாய்?”

என்கிற ஒரு வசனத்தை “ப்ப்பா” திரைப்படத்தில் அவுரா எனும் 12 வயது பையன் தன் பாட்டியிடம் கூறுவதாக இடம் பெற்றிருக்கும். இந்த வசனத்தின் எதார்த்தத்திலிருந்தும் அதன் பின்னனியில் ஒளிந்திருக்கும் அடர்த்தியிலிருந்தும் இந்த இந்தி திரைப்படத்தை அவதானிகக்லாம் என நினைக்கிறேன். இது படத்தில் ஒலிக்கும் மிகச் சாதரணமான வசனம்தான். ஆனால் படம் முழுக்க மனித படைப்புகளின் அதிசயங்களின் மீதும் அல்லது குறைபாடுகளின் மீதும் கடவுளை ஒரு காரணப் பொருளாகத் திணித்து தமது இயலாமைகளைச் சரிக்கட்டிக் கொள்ளும் எவ்வித முயற்சிகளும் காட்டப்படவில்லை. கடவுள் அல்லது விதி என்ற எந்தச் சொற்பிரயோகமும் இன்றி இந்த நோயையும் அவுராவையும் எல்லாரையும் போல இயல்பான படைப்புகளில் ஒன்றாகக் கற்பிக்கப்பட்டிருப்பது அருமையான அணுகுமுறை.

அவுரா progeria எனும் கோடியில் சிலருக்கு மட்டும் எற்படும் ஒரு நோயுடன் பிறக்கிறான். இந்த நோயைப் பற்றி ஆரம்பத்தில் ஒரு மருத்துவரால் சிறு விளக்கம் மட்டுமே தரப்படுகிறது. இந்த நோயுடையவர்கள் சீக்கிரமே முதுமையை அடைந்துவிடுவதாகவும், அவர்களின் உடல் உறுப்புகள் 12 முதல் 14 வயதிலேயே 80 வயது முதுமை அடைந்தவர்களுக்குரிய தளர்ச்சியை அடைந்துவிடும் எனவும் அந்தக் காலக்கட்டத்துலேயே அவர்கள் மரணிக்கவும் நேரிடும் எனவும் அவுராவின் பிறப்புக் குறித்து விவரிக்கப்படுகிறது. ஆகவே படத்தில் அவுராவின் 12ஆவது வயதில் கதை நகர்கிறது.

தன்னைப் புறக்கணித்து எங்கோ சென்றுவிட்ட தனது அப்பாவை வாழ்வில் முதல்முறையாகச் சந்திக்கும் மகனையும் அவனுக்குள் ஏற்படும் ஒருவகை மெல்லிய நட்பும் காதலும் அன்பும் வெறும் உணர்வுகளால் சொல்லப்பட்டுருக்கின்றன. அரசியல் முன்னெடுப்புகளுக்காக அவுராவின் அம்மாவை வயிற்றில் ஒரு குழைந்தையுடன் விட்டுச் செல்கிறார் அபிஷேக் பச்சான். அவுராவின் அம்மா ஒரு மருத்துவர், பல போராட்டங்களுக்கிடையே அவுராவைச் சுயமாக வளர்த்து எடுக்கிறார். அவுராவின் 12ஆவது வயதில் பள்ளியில் நிகழும் ஓர் அறிவியல் காட்சிக்காக அவுராவின் பள்ளிக்கு வரும் அப்பா(புகழ்பெற்ற அரசியல்வாதி) அவுராவைச் சந்திக்கிறார். அங்கிருந்துதான் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இருவரும் மீண்டும் தன் உறவுகளின் வேரைக் கண்டடைவதென கதை அடுத்த களத்திற்கு எந்தச் சலனமும் இல்லாமல் முன்னேறுகிறது.

இந்தப் படத்தை மூன்று விதங்களில் ஒரு சிறந்த படம் என மதிப்பிடக்கூடும். அந்த மூன்று தளங்களில் வைத்து திரைப்படத்தை விமர்சிக்கலாம் அல்லது எனது இரசனை குறிப்புகளை வழங்கலாம் என நினைக்கிறேன்.

1. அமிதாப் என்கிற அடையாளம் (அவுராவாக)

இந்தப் படத்தில் அவுராவாக அதாவது குறிப்பிட்ட நோயுடைய 12 வயது சிறுவனாக நடித்திருப்பது இந்தி திரைப்படத்தின் சூப்ப்ர் ஸ்டார் எனப் போற்றப்படும் மூத்த நடிகர் அமிதாப் பச்சான் ஆவார். இந்தி சினிமாவின் ஆளுமை என அடையாளப்படுத்தும் வகையில் தனது நடிப்பாற்றலை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பரிசோதனை முயற்சிகளுக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் ஆட்படுத்தி வரும் முக்கியமான சினிமா கலைஞரான இன்றும் தனது அடைவுகளின் மூலம் உச்சத்தை இழக்காமல் நடித்துக் கொண்டிருப்பவர்.

ஆரம்பக்காலக்கட்டத்தில் கதாநாயகத்துவத்தின் மூலம் பிரபல குறியீடாக எழுந்த அமிதாப் ஒரு சில காலக்கட்டங்களுக்குப் பிறகு தனது வயதின் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்று கதைப்பாத்திரத்தில் தன்னை வடிவமைத்துக் கொண்டு அதன் மூலம் சாகசங்களைத் தொடர்ந்த மிகத் துணிச்சலான மனிதர். இந்தி சினிமாவை இன்னமும் தனது மாற்று அடையாளங்களின் மூலம் வசீகரித்துக் கொண்டும் எல்லாம் கதைப்பாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய அளவிலான வடிவமாக இருந்து கொண்டும் எந்தச் சலிப்பபையும் ஏற்படுத்தாத சினிமா நாயகனாக தனது பயணத்தைத் தொடர்கிறார்.

ப்பா படத்தில் அவுரா எனும் 12 வயது சிறுவனின் கதைப்பாத்திரத்தை அடைந்திருக்கும் அமிதாப்பின் துணிவை தமிழ் சினிமா கமலின் முயற்சிகளுக்கு நிகராகச் சிலர் குறிப்பிடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. God father எனும் ஆங்கில திரைப்படத்தில் மார்லன் பிராந்தோவின் உடல் மொழியையும் அவரின் தொனி சிதறலையும் கூர்ந்து அவதானித்தவர்கள் கண்டிப்பாக நாயகன் படத்தில் கமல் செய்திருப்பது மார்லன் பிராந்தோவின் நகல் கதைப்பாத்திரத்தைத்தான் எனப் புரிந்துகொள்ள முடியும். இன்னொரு மாற்று சினிமாவைப் பார்த்து அதைப் போல அந்த நடிப்பைத் தமிழுக்குள் கொண்டு வந்து முயற்சித்தது கமல் மட்டும்தான். இதற்கும் மிகச் சிறந்த பயிற்சி வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

கமலின் நடிப்பு அரசியலிலிருந்து முற்றிலும் தவிர்த்து பார்க்க வேண்டியது அமிதாப்பின் கலையுணர்வு மிக்க நடிப்பாகும். யாரும் எதிர்ப்பார்த்திராத எந்த அலட்டலும் இல்லாத யதார்த்தத்தையும் கசப்பில்லாமல் மிகையில்லாமல் படைக்கும் ஆற்றலும் இந்தி சினிமாவின் மூலம் அவர் பெற்ற முதிர்ச்சியும் கைவசம் இருக்கின்றன. அந்த அவகையில் “ப்ப்பா” திரையில் அமிதாப் தனது சுய அடையாளத்தை முற்றிலும் அழித்துவிட்டு வேறொரு தோற்றத்துடன் படைப்பைக் கொடுத்திருக்கிறார். அவுரா கதைப்பாத்திரம் மிகச் சிக்கலான வடிவமாகும்.

மேலும் நம் சமூகத்தில் காணக்கிடைக்காத ஒருவகையான விநோதமான நோயைக் கொண்டிருக்கும் ஒரு முதிர்ந்த தளர்ந்த சிறுவனின் உடலுக்குள் சினிமா அளித்திருந்த பிரபலமான உடல்மொழிகளையும் அதற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையில் அவருக்கிருக்கும் உயரம் வசீகரம் என எல்லாவற்றையும் முற்றிலும் சிதைத்து உருவான ஓர் வித்தியாசமான மேலும் படைப்பின் எதார்த்த உக்கிரத்தை வெளிப்படுத்தும் வடிவம் “ப்ப்பா” வில் வரும் அவுரா. அவுராவின் உடல்மொழியும் தளர்ந்த தோற்றமும் நமக்குள் எந்த வெறுப்பையும் சலிப்பையும் அறுவறுப்பையும் ஏற்படுத்துவதில்லை, மேலும் பரிதாப மனநிலையையும் சேகரிக்க முயலவில்லை. மாறாக மனித படைப்பின் அதிசயத்தையும் அதன் இன்னொரு வடிவமான அடர்த்தியையும் அன்பையும் காட்டும் ஓர் ஆல்பம் போல திறந்து விரிக்கப்படுகிறது அவுரா என்கிற அற்புதம்.

சமீபத்தில் வெளியான பெஞ்சமின் பட்டன் ஆங்கில திரைப்படத்தை ஞாபகப்படுத்துவது போன்ற படமாக “ப்பா” இருந்தாலும் இரண்டு படங்களும் முன்வைக்கும் சிக்கல் வெவ்வேறானவையாகும். மேலும் அமிதாப்பும்                 பிரட் பிட்டும்(Brad pitt) வெவ்வேறான கலை வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள், இருவரின் உடல்மொழிகளும் சினிமாத்தனமானவை கிடையாது, தனித்துவங்கள் கொண்ட எதார்த்தமானவை.

2. உடலுக்குள் அடரும் முதிர்ச்சியும் தளர்ச்சியும் – அவுரா என்கிற அதிசயம்

அடுத்ததாக படத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் அவுராவின் வாழ்வைக் குறித்த அலசல் “ப்பா” படத்தில் மாற்று விதமாக அணுகப்பட்டிருப்பது மிகச் சிறந்த முயற்சியாகும். அவுரா என்பவனை ஒரு நோயாளியாகக் காட்டி, ஒரு அறுவறுப்புமிக்க கதைப்பாத்திரமாகக் காட்டி பார்வையாளர்களைக் கவலைப்படுத்தும் பிரமிப்பூட்டும் எந்தச் சினிமாத்தனமும் இதில் மேற்கொள்ளப்படவில்லை. மனித படைப்புகளை எப்படி அதன் அழகியலுடன் எதிர்க்கொள்வது எனும் மிக ஆரோக்கியமான உளவியலை படம் முழுக்க கட்டமைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

எம்.ஆர் ராதாவின் இரத்தக் கண்ணீரில் தொடங்கி, குஸ்டரோகியைக்கூட விவேக்கின் நகைச்சுவைக்காகப் பயப்படுத்தும் அற்ப முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு சமூகம் எதிர்கொண்டு பழக்கப்படாத ஒரு விநோதமான நோயை அன்பாலும் யதார்த்த அழகியலுடன் படைத்திருக்கும் “ப்ப்பா” திரைப்படக் குழுவிற்கு ஆழ்ந்த தரிசனம் வாய்க்கப்பட்டிருக்கிறது. கைகள் இரண்டும் நீளமாகவும் தொங்கியபடியும் முதுகுதண்டு வலைந்தபடியும் தலையில் முடியில்லாத நிலையில், முகத்தில் சுருக்கமும் என அவுரா 12 ஆவது வயதிலேயே 80 வயதிற்குரிய தளர்வைப் பெற்றிருப்பான். குரலில் இலேசான தடுமாற்றமும், சொற்களைத் தெளிவாக உச்சரிக்க முடியாமையும் என அவுரா நோயால் அடையும் துன்பத்தை திரையில் ஆரம்பத்திலும் இடையிலும் எங்கேயும் துன்பவியல் நாடகம் போல காட்டவில்லை, மாறாக இறுதி காட்சியில் அவுரா உயிரைத் துறக்கும்போது இதுவரை திரையில் காட்டப்படாத துயரத்தை மொத்தமாக நம்மால் உணர முடியும்.

அவுராவின் மரணத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிப்பதைக்கூட கண்டுகொள்ளாமல் படம் அலட்சியமாகக் கடந்து ஒரு நிறைவை அடையும்போது பிறப்பும் மரணமும் எத்துனை எதார்த்தமான நிகழ்வென நகுலன் தனது கவிதையில் அடையும் மௌனத்தையும் அடர்த்தியையும் போல நாமும் அடைந்துவிடுகிறோம். விவரிக்கப்படாத மௌளனம்கூட சொல்லமுடியாத ஒரு துயரத்தைக் கொண்டிருக்கும் என்பதைப் படத்தில் காட்டாமல் உணர்வுகளின் தளத்தில் வைத்து கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

“இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்” – நகுலன்

3. படம் முழுக்க சொல்லப்படும் அழகான நகைச்சுவை சொல்லாடல்கள்

அவுரா தனது நோயை எண்ணி கவலையடையும் எந்தத் தருணத்தையும் இந்தப் படத்தில் அடர்த்தியாகக் காட்ட முயற்சிக்கவில்லை. அவுரா எல்லாம் இடங்களிலும் சிறுப்பிள்ளைப் போல நடந்துகொள்வதோடு சராசரிக்கும் அப்பாற்பட்டு அதீதமான அறிவாற்றளையும் கொண்டிருக்கிறான். அதனை ஒரு சொற்பொழிவு போல எங்கேயும் விவாதிக்காமல் அதையே ஒரு நகைச்சுவை உணர்வின் மூலம் அலட்சியமாகச் சொல்லும்போது சிரிப்பை மட்டுமே ஏற்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக சில இடங்கள்:

“அரசியல்வாதிகள் ஏன் எப்பொழுதும் வெள்ளை சட்டையையே அணிகிறார்கள் தெரியுமா, காரணம் இந்த நாட்டையே சமாதியாக்கிவிட்டு அதைத் துக்கம் கொண்டாடத்தான் அப்படி அணிகிறார்கள் போல”

மருத்துவமனையில் அவுரா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, “நேரம் கொஞ்சமாகத்தான் இருக்கு. . “ என்று சொல்கிறான், உடனே அவனது தாத்தா அவன் மரணிக்கவிருப்பதைத்தான் சொல்கிறான் என நினைத்து அவனுக்கு பல ஆறுதல்கள் சொல்லத் துவங்குகிறார், அவனோ திடீரென்று “ விசிட்டிங் நேரம் கொஞ்சமாகத்தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிற போது வயிறு வலிக்க சிரிப்பலை ஏற்படுகிறது. இப்படிப் பல இடங்களில் நகைச்சுவை சொல்லாடல்கள் நிரம்ப இருக்கின்றன.

அவுரா அழகான உணர்வுகளையும் துயரத்தையும் தனது இயலாமைகளையும் எந்த அலட்டலமின்றி வெளிப்படுத்தும் ஒரு பாத்திரப் படைப்பாக மனதிற்குள் நிறைகிறான்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா