Saturday, April 17, 2010

மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு

1. உலகத் திரைப்பட மேதை அகிரா குரோசாவா

ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா அவர்கள் எழுதிய நாட்குறிப்புகளையும் சினிமா குறித்த கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தவர்கள் மு.நடராஜன் மற்றும் இளையபாரதி ஆவர். அகிராவின் படங்களில் மிக முக்கியமாகக் கருதப்படுவது மனித உணர்வுகளின் ஆழங்களைத் தொடுவதன் மூலம் அவர் உருவாக்கும் அழுத்தமான பிரதிகள் மற்றும் ஒவ்வொரு சினிமாவிலும் அவர் வெளிப்படுத்தும் புதிர் தன்மையாகும்.

“வன்முறையும் அமைதியும் மாறி மாறி வருகிறது” என்ற ஒரு வசனம் இந்தப் புத்தகத்தில் அகிராவின் சினிமா படைப்பை மையப்படுத்துவது போல இடம்பெற்றிருக்கும். மடோடோயா என்கிற படத்தின் மூலம் உணர்வுகளின் உச்சத்தைத் தழுவும் சந்தர்ப்பங்களையும் மனித வாழ்வையும் அன்பின் முன் உடையும் எல்லாம் தர்க்கங்களையும் தரிசிக்கும் வகையில் அவரது அந்தக் கடைசி படைப்பைக் கொடுத்திருப்பார். பூனை ஒன்று தொலைந்துபோகும்போது அந்தத் துக்கத்தை நினைத்து அழுவதற்கு அவர் ஒரு எளிமையான மனிதராக இருக்க வேண்டும் என்பதற்கில்லை, மெத்த படித்த முதிர்ந்த ஒரு பேராசிரியராகவும் இருக்கலாம்.

இந்தப் புத்தகத்தின் தொடர் கட்டுரைகள் சிறு சிறு பத்திகள் அகிராவின் வாழ்வியல் குறிப்புகளை நினைவுக்கூர்கின்றன. ஒரு அழகான மழையின் ஆல்பத்தைத் திருப்பிப் பார்ப்பது போல அடர்த்தியான எண்ணங்களைப் பரவவிடும் தருணத்தை இந்தப் புத்தகத்தில் கண்டடைந்தேன்.

சில குறிப்புகள்: நான் வளர்ந்துவிட்ட மனிதல்ல, வளர்ந்துகொண்டிருக்கும் மனிதன், நான் திறமைசாலியல்ல, வலுவானவனும் அல்ல, பிரத்யேகமான மனிதனும் அல்ல, எனக்குக் குறைபாடுள்ள கதைப்பாத்திரங்களை மிகவும் பிடிக்கும், காரணம் என்னவென்றால் எத்தனை வயதானாலும் நான் இன்னும் முழுமையற்ற மனிதனாகவே இருக்கிறேன்”
– அகிரா


2. காந்தியமும் தமிழ்ச் சனாதனிகளும் – அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ் எழுதிய காந்தியத்தைப் பற்றி வேறொரு பார்வையை விமர்சனத்தை வெளிப்படுத்தும் முக்கியமான நூல் இது. மார்க்ஸ் உருவாக்கும் பிரதிகள் பெரும்பாலும் பொது புத்தி சார்ந்து கட்டமைந்திருக்கும் புரிதலையும் அரசியலையும் எதிர்த்து முரணான வடிவத்தில் மையத்தைக் கட்டவிழ்க்கும் பிரதிகளாக இருக்கும். அவ்வகையில் இந்தப் புத்தகம் காந்தியத்தையும் காந்தியையும் வேறொரு அடையாளத்தில் வைத்து ஆராய்கிறது.

அ.மார்க்ஸின் இஸ்லாமியத்தின் சமூக குடும்ப கல்வி மதிப்பீடுகளை மாற்று வெளியில் வைத்து விவாதிக்கும் ஆற்றலைப் போல இந்த இடத்திலும் மிகவும் துணிச்சலாக காந்தியின் மீதிருக்கும் இந்துத்துவ அடையாளங்களை நோக்கி தனது பார்வையையும் புரிதலையும் கூர்மையாக்குகிறார். யார் காந்தியின் உண்மையான எதிரிகள் எனத் தொடங்கி, சனாதன மரபுகள் குறித்து காந்தி, பெரியாரின் பார்வையில் காந்தி எனப் படரும் ஒரு விரிவான அரசியல் விழுமியங்களாக வாசிக்க வாசிக்க புதியதொரு கற்பிதங்களை உருவாக்குகின்றன.

“மதசார்பின்மை” என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஒரு அரசியல் சொல்லாடலாக மாற்றி அமைத்ததில் காந்தியின் பங்கையும் செயல்பாடுகளையும் மிகவும் தெளிவாக அ.மார்க்ஸ் விவிரிக்கிறார். இந்திய மரபின் மீது அதீதமான நம்பிக்கையும் மரியாதையும் உடைய காந்தியின் இன்னொரு எதிர் பிம்பத்தையும் கடைசிவரை தீண்டாமைக்கு எதிர்குரல் கொடுத்த காந்தியையும் மார்க்ஸ் மேலும் ஆழமாகச் சொல்கிறார்.

சில குறிப்புகள்: அ.மார்க்ஸ் காந்தியைப் பற்றி விவரித்ததில் மிக முக்கியமாக நான் கருதுவது, இந்து சனாதனத்துக்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பேசியவர்கள் அம்பேத்காரும் பெரியாரும் ஆனால் ஒடுக்குதலுக்குக் காரணமான அதிகார சக்தியினர் மத்தியில் பேசியவர் காந்தி எனும் வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என காந்தி குறித்த நமது அரசியல் பார்வையை உடைக்கிறார் அ.மார்க்ஸ்.

“ரகுபதி ராகவா ராஜா ராம் எனும் பாடலைப் பின்னனியில் ஒலிப்பரப்பவிட்டு, காந்தியை ஓர் ஒழுக்கம் சார்ந்த ஆளுமையாகப் பார்த்து பரவசப்படும் ஓர் சாதரண இந்துத்துவ அடையாளம் கிடையாது காந்தி என்பதை தத்துவப் பரப்பில் வைத்து மறுத்துள்ளார் மார்க்ஸ்.

-புத்தக வாசிப்பும் தேடலும் தொடரும்-

இலக்கியப்பிரதி/புத்தக விமர்சனம்
கே.பாலமுருகன்
மலேசியா