Friday, April 16, 2010

கவிதை: மாய்த்தலும் மேய்த்தலும்

1
ஒரு விசுவாசியின்
இறுதி வழிப்படுதலோடு
எல்லாம் அடிமைத்தனங்களும்
முழுமையடைகின்றன.

2
ஒரு அடிமையை
உற்பத்திக்க
முதலில் கற்றுத்தர வேண்டியது
விசுவாசத்தை.

3
தனது கடைசி
நாவையும் பிரயோகித்து
எல்லாவற்றையும்
வழித்துவிட்ட விசுவாசம்
துளையிட்டுத் தேடத்துவங்கியது
முதலாளியின் காலடியையும்
அக்குளையும்.

4
அரசியல் கட்சிகளின்
விசுவாசம்
மிகப்பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன
ஏழைகளும் தீபாவளி பொட்டலங்களும்
விருந்துபரிப்பும் இருக்கும்வரை.

5
துடைத்துவிட்டப் பிறகு
தூக்கியெறியப்பட்டன
விசுவாசமும் நேர்மையும்.

6
தலைவர்களின் மலத்தில்
மொய்க்கின்றன
நன்றியுணர்வும் சமூக உணர்வும்.
தண்ணீர் சுழற்றப்படாத
கழிவறைத் தொட்டியின் வெண்மையில்
தலைவாறும் சில அடிமைகளின்
முகங்கள்.

7
மேய்ச்சலுக்கு
அவிழ்த்துவிட்டது போல
தேர்தலுக்கான பெயர் பட்டியல்.

8
தலைவருக்காக
சில வேண்டுதல்கள்
நிறைவேற்றப்பட்டன.
கடவுள் மொட்டையடித்து
மயிலிறகைத் தந்தருளினார்
எண்ணெய் தடவி.

9
மாய்த்தலுக்குப் பிறகும்
விழிக்கின்றன
மேடைவாதிகளின் எச்சில் துளிகள்.

10
சமூகம்
சமூகம்
சமூக
சமூ

பை
ப்பை
குப்பை.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 மலேசியா