Sunday, March 21, 2010

வண்ணத்துப்பூச்சியும் ஒரு காதல் கவிதையும்

“வண்ணத்துப்பூச்சி” என்கிற தமிழ்ப்படத்தின் இயக்குனரும் எழுத்தாளருமான ராசி அழகப்பன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார். வருகின்ற வெள்ளிக்கிழமைவரை மலேசியாவில் இருந்துவிட்டு பிறகு சென்னை திரும்பவிருக்கிறார். “வாழ்வியல் கலை” என்கிற தலைப்பில் வருகின்ற புதன்கிழமை கெடா சுங்கைப்பாட்டாணி வட்டாரத்திலும் குரூண் வட்டாரத்தின் 5 தமிழ்ப்பள்ளிகளின் ஆறாம் ஆண்டு மாணவர்களிடத்திலும் உரை நிகழ்த்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளேன்.

இடம்: ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி
நேரம்: மாலை மணி 2.00க்கு
திகதி: 24.03.2010(புதன்)

மேலும் கூலிம் தியான ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமையன்று மாலை 7.30க்கு மேல் அவருடன் ஓர் இலக்கிய சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அருகில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளலாம். திரைப்படம் குறித்த ஆழமான சிந்தனையும் மனித வாழ்வியல் குறித்த வினோதமான விமர்சனமும் பார்வையும் கொண்டவர் ராசி அழகப்பன் அவர்கள். மேலும் மாணவர்களிடத்தில் சிறப்பாகப் பேசக்கூடிய பேச்சாளரும்கூட. ஆகையால் அவரைச் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவும். செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் அவர் கெடாவில் இருப்பார். பிறகு வியாழன்று மீண்டும் கோலாலம்பூருக்குச் சென்று அன்றைய தினத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நடைப்பெறவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வண்ணத்துப்பூச்சி படத்திற்கு முன்பதாகவே ராசி அழக்கப்பனை எனது வலைப்பதிவின் மூலமும் இணையத்திலும் அறிந்திருந்தேன், பழக்கமும் உண்டு. வண்ணத்துப்பூச்சி திரைப்படத்தின் மீதான எனது விமர்சனத்தை முழுமையாகப் பதிவில் எழுத வாய்ப்புக் கிட்டாமல் போய்விட்டது, மேலும் அதை விமர்சிப்பதற்குரிய வலுவான பார்வையும் என்னிடம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அந்தப் படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் பெற்றோர் கதைப்பாத்திரம் மிகுந்த பலவீனத்திற்குரிய படைப்பு என்றே அடையாளப்படுத்தத் தோன்றுகிறது. பெற்றோர்களின் கவனிப்பு இன்மையாலும் புறக்கணிப்பாலும் சிதைந்து போகும் அன்பைத் தேடி அலையும் ஒரு சிறுமியின் கதைத்தான் வண்ணத்துப்பூச்சி. ராசி அழகப்பனுக்கு குழந்தைகளின் உலகின் மீது அதீத அக்கறை இருப்பதை இப்படத்தில் காட்டியிருக்க முயல்கிறார். இந்த மாதம் “வண்ணத்துப்பூச்சி” திரைப்படம் அஸ்ட்ரோ தங்கத்திரையில் ஒளிப்பரப்படவிருப்பதால், பார்வையாளர்கள் அந்தத் திரைப்படத்தைப் பார்த்து விமர்சிக்கவும்.

ஒரு காதல் கவிதை

1
உனது
அத்துனை வியாக்கியானங்களும்
மறுப்புகளும் நிராகரிப்பும்
நிகழ்ந்துவிட்டப்பிறகு
அன்பால் நிரம்பியிருந்த
எனது முத்தம்
வெறும் இரு சதைப்பிண்டங்கள் குவிந்து
அளிக்கும் எச்சிலாக
மாறிவிட்டிருந்தது.

2
வண்ணத்துப்பூச்சிகளை மட்டும்
காரணம் காட்டி
எத்துனை வன்முறைகளை
நிகழ்த்திவிட்டாய் இந்தக் காதலில்?
ஒவ்வொருமுறையும் உதிர்ந்த
வர்ணங்களில் மிதிப்பட்ட
ஒரு அழகியலும்
திணிக்கப்பட்ட அன்பும்
தேங்கிக் கிடந்தன.

3
ஆயிரம் வார்த்தைகளை
திரட்டி புகுத்தி அடுக்கி
உரையாடினேன்.
வெறும் புன்னகையால்
எல்லாவற்றையும் கடந்து சென்ற
உனது முதிர்ச்சியை
என்னவென்பேன்?

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com