Saturday, March 13, 2010

மலேசிய- கடாரம் மாநிலத்தின் ஆர்வார்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடமும் பூமி பூசையும்

இதற்கு முன் பல வருடங்களாக குரூண் சைம் டேர்பியின்(sime derby) நிலத்தில் இயங்கி வந்த ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி அடுத்த வருடம் முதல் குரூணிலுள்ள கம்போங் பஞ்சாங் நிலப்பகுதியில் பில்லியன் செலவில் புதிய கட்டத்துடன் செயல்படவிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் இப்பள்ளி அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற பள்ளியாக அங்கீகரிக்கப்படுவதோடு மேலும் பாலர் பள்ளி வகுப்பும் பள்ளியின் கீழான அங்கமாகச் செயல்படும்.

பீடோங் பட்டணத்திலிருந்து 10 நிமிடத்திற்குள் இந்தப் புதிய பள்ளி இருக்கும் இடத்திற்கு வந்தடைந்துவிடுவதோடு குரூண் பட்டணத்தின் வரவேற்பறையாக இந்த இடம் என அடையாளப்படுத்தலாம். இன்று காலை மணி 10 முதல் 12.00 வரை புதிய பள்ளி கட்டப்படவிருக்கும் நிலத்தில் பூமி பூசை நடத்தப்பட்டது. குரூண் பொதுமக்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களும், பத்திரிக்கை நிறுபர்களும், ம.இ.கா கிளைத்தலைவர்களும், சமூக அமைப்பின் செயலவை உறுப்பினர்களும் வந்து கலந்து கொண்டனர்.

இந்த ஆர்வார்ட் புதிய பள்ளிக்கான கட்டடம் விவகாரம் பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையில் இருந்தது. கல்வி அமைச்சைச் சார்ந்தவர்கள், ம.இ.கா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடலின் விளைவாக இந்தத் திட்டம் இப்பொழுது வெற்றியை அடைந்துள்ளது என ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் திரு.மா.முனியாண்டி அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

இந்த மாதம் தொடங்கி எதிர்வரும் நவம்பர் மாதம்வரை கட்டுமான பணிகள் தொடரும் என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துக் கொண்டனர். அடுத்த வருடம் முதல் முழுமையான வசதிகளுடன் ஒரு தோட்டத்தமிழ்ப்பள்ளி திகழப்போவதை முன்வைத்து, ஆர்வார்ட் பள்ளிக்கான நிலத்தை வழங்கிய சைம் டேர்பி நிறுவனத்திற்கும், இந்த நிலப்பிரச்சனை குறித்து பலவகைகளில் உதவி கரங்கள் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பள்ளியின் ஆசிரியர் என்ற வகையிலும் ஆர்வார்ட் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் என்கிற வகையிலும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா