Friday, February 12, 2010

மரணத்தைக் கலையாக்கும் சொற்களும் விடுப்பட இயலாத அன்பின் முகமும்

“இளவேணில் மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார்
வரவேற்போமே. . “

2004-இல் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மாணவராக நுழைந்தபோது “இளவேணில்” என்கிற எனது சீனியரின் அறிமுகம் கிடைத்தது. ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் அவருடன் நான் பேசிய வார்த்தைகளை ஒரே சிறு பத்தியில் எழுதிவிடலாம். அவசியமில்லாத தருணங்களின் இறுக்கம் பெரும்பாலானவர்களிடமிருந்து என்னை விலக்கியிருந்தது.

இளவேணில் இயல்பான பண்புடையவர். அவரிடம் கூடுதலான எந்தவொரு மிகைப் பண்பையும் பார்க்க முடியாது. அவருடைய நண்பரிகளிடமிருந்து பெற்றத் தகவல்கள் ஏராளம். கூடுதல் புள்ளிகள் பெறுவதற்காக விரிவுரையாளர்களிடம் நாடகம் நடத்தும் எந்த முயற்சியும் அற்ற மிகவும் இயல்பான மிதமான குணமுடையவர் இளவேணில். அவரைப் பற்றி திடீரென நான் எழுத நினைத்தது ஒருவேளை 13.06.2008-இல் அவருக்கு ஏற்பட்ட மரணம் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அவரது மாமாவான கவிஞர் ஸ்ரீரஜினி(சுங்கைப்பட்டாணி) அவர்களுடனான உரையாடல் ஒரு காரணமாக வந்துவிடவும் வாய்ப்புண்டு.

இருதயத்தில் ஏற்பட்ட துளை, வெகு சீக்கிரத்திலேயே அவரது சுவாசத்தை அதன் வழியே பறித்துக் கொண்டது. திருமணத்திற்குப் பிறகு தனது 4 மாத குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டே விடைப்பெற்றவரின் மரணம் எத்துனைத் துயரமானவை? தனது அடையாளத்திலிருந்து விழப்போகும் தனது நகல் அடையாளத்தையும் சேர்த்தே விழுங்கித் தின்றது மரணம். இனி மரணத்தை எதிர்க்கொள்ள எத்தனை விதமான முதிர்ச்சி வியாக்கியானங்களைத் தந்தாலும், மரணம் கடவுளைப் போன்று பிடிக் கொடுக்காமல் ஒரு மூட நம்பிக்கையாகவோ அல்லது அதிசயத்தின் குறியீடாகவோ அல்லது துயரத்தின் பெரும்வெளியாகவோ வெறும் மிரட்டலாகவே தூரமாகின்றது.

கவிஞர் ஸ்ரீரஜினி இளவேணில் மரணத்திற்குப் பிறகு அவரின் பிரிவையொட்டி ஒரு கவிதை எழுதியதாகக் கூறினார். மரணத்தைக் கலையாக்கும் ஒரு பெருந்தோல்வியாக இது இருந்தாலும், மரணத்தை எதிர்க்கொள்ள முடியாமை என்கிற மனிதனின் யதார்த்தங்களின் சாட்சியங்கள்தான் இது போன்ற படைப்புகள். மரணத்திற்கு முன் நிர்கதியாகிவிட்ட பிறகு நமது அன்பிற்குரியவர்களை ஒப்படைத்துபிட்ட பிறகு அவரது மரணத்தை அவரது பிரிவைக் கலையாக்குவது எதார்த்தமான ஒரு இயலாமை. இந்த இயலாமை எல்லாரினாலும் சந்தித்துவிட முடியும். ஆனால் கவிஞர் ஸ்ரீரஜினி அதையும் கடந்து தனது வரிகளுக்குள் மீண்டும் ஓர் அன்பைத் தேடும் மீண்டும் ஓர் உயிரைத் தேடும் பரிதவிப்புகளை எதிர்பார்ப்புகளை, எப்பொழுதும் இந்தப் பிரிவு என்கிற துயரத்தை உடைக்க நினைக்கும் உரையாடலைப் புகுத்தியிருக்கிறார்.

அந்தக் கவிதை வரிகளை வாசிக்கும்போது இளவேணில் என்கிற முன்பு இருந்த இப்பொழுது இல்லாமல் போன ஒரு பிம்பத்தை, எந்த வியாக்கியானங்கள் சொல்லியும் கடக்க முடியாத ஓர் இயலாமையைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. நமக்கு நெருக்கமானவர்களின் இருப்பு மிகவும் வலிமையானது என்பதை அவருடைய இல்லாமையை எதிர்க்கொள்ளும்போது நமக்கு ஏற்படும் பதற்றத்திலிருந்தும் தவிப்புகளிருந்தும் புரிந்துகொள்ள முடியும்.

கவிஞர் ஸ்ரீரஜினி அவர்கள் தனது கவிதையில் அதன் வரிகளை இப்படி முடித்துள்ளார்.

“ மீண்டுமொரு
பிறவி கொள்ளும்
வரம் வேண்டி. . “

ஒரு உயிரை, நம்முடன் வாழ்ந்த ஒரு பிம்பத்தை எப்படியும் மறுக்க மறக்க முடியாத ஒரு தோல்வியின் வெளிப்பாடுதான் அந்த வரிகள். எப்படியாயினும் மரணத்தை வென்றுவிட துடிக்கிறது அந்த வரிகள். மறுப்பிறவி என்கிற ஒரு குறியீட்டைக் கொண்டு இளவேணிலுக்கு ஏற்பட்ட மரணத்தைச் சரிக்கட்ட நினைக்கும் அந்தக் கவிஞனின் வரிகள், மறுப்பிறவியின் சாத்தியங்கள்/நம்பகத்தன்மைகள் பற்றி விவாதிக்காமல், அந்த வரிகளிலிருந்து கழன்று விழும் ஒரு துயரத்தைப் பற்றியே மீட்டுணருகிறது.

சமீபத்தில் இளவேணில் அவர்களின் பெரியம்மா மகளுக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும், அந்தக் குழந்தை அசல் இளவேணிலைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறியதும், மரணத்திற்கு முன் எப்பொழுதும் சமரசம் செய்ய இயலாத மனிதனின் அன்பைக் கண்டு பிரமிப்பு ஏற்பட்டது. இனி அந்தக் குடும்பத்தில் மீண்டும் இளவேணில் மீண்டுமொருமுறை தொடக்கத்திலிருந்து வளரப் போகிறார். யார் மறுத்தாலும் இனி அவள்தான் இளவேணில் என்கிற நம்பிக்கை அவர்களை இளவேணிலின் காணாமல் போன பிம்பத்தை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

கவிஞர் ஸ்ரீரஜினி அவர்களின் கவிதை வரிக்ளிலிருந்து எது உயிர் பெற்றிருக்கிறது என அந்த வரிகளைப் பின் தொடர்கிறேன்.

“எங்களின் செல்லக்கிளிகளில்
ஒன்றை தேடிக்கிடைக்காத
மரணக்காட்டில்
தொலைத்துவிட்டோம்”

அவரின் இந்த வரிகள் தனக்குள் இருக்கும் இயலாமைகளையும் ஒவ்வொரு மனிதனும் எதிர்க்கொள்ளும் மரணம் என்கிற கடக்க முடியாத தோல்வியையும் விழுங்கிக் கொண்டு அதற்கு எதிரான ஒரு முரண்பாட்டை கடைசி வரியில் படைக்கிறது,

“மீண்டுமொரு
பிறவி கொள்ளும்
வரம் வேண்டி. .”

இன்று இந்த முரண் நிசமாகியுள்ளதாக இந்த ஸ்ரீரஜினி என்கிற மௌனி நம்பிக்கையுடன் இருக்கிறார். மரணத்தைக் கலையாக்கும் ஒரு தோல்வி எத்துனைப் பெரிய அன்பைத் தேடி தனது வேர்களை சொற்களாக்கி விரிகிறது என்பதை அவரது அந்த மிக எளிமையான வரிக்ளில் கண்டேன்.

"இளவேணில் மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார்,
வரவேற்போமே. ."-கே.பாலமுருகன்

அன்புடன்
கே.பாலமுருகன்
மலேசியா