Friday, January 1, 2010

மணல் என்கிற விரக்தி அல்லது வெயிலின் பிம்பம்

மணலில் அப்படி என்ன செய்ய முடியும்? ஓடுவதற்குக் கூடுதலான முயற்சியும் சாமர்த்தியமும் வேண்டும், நடப்பதற்கு கொஞ்சம் நேரமும் பொறுமையும் வேண்டும், அமர்ந்து கொள்வதற்கு கொஞ்சம் இறந்தகாலத்தின் நினைவுகள் வேண்டும்.வெளிப்படையான நமது உடல் ரீதியிலான பலவீனங்களை மறைத்துக் கொள்வதற்கு, எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட சாகசங்களில் ஈடுபடவும் சிலர் மணலுக்கு வருவதுண்டு.


மணலின் நிலப்பரப்பில் கண்டடையும் எல்லாம் தோல்விகளும் ஒரு கவிதை போல கடந்துவிடும் அல்லது வாசிக்கப்படும் பின்பு கலையாகிவிடும். மனுஷ்ய புத்திரனின் மணலைப் பற்றிய ஒரு பிரபலமான கவிதை உண்டு. வாழ்வின் தருணங்களை அதில் நிகழும் அன்பின் புறக்கணிப்புகளை மணலைப் போல கற்பித்து மணலில் அவர் வரைந்திருக்கும் கவிதை பாராட்டுதலுக்குரியவை.

இங்கே எனக்குக் கிடைத்த சில புகைப்படங்களைத் தருகிறேன். இவர்கள் மணலில் செய்திருக்கும் சாகசம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. சமாதானம் அமைதி, வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்கள் என தொடங்கி அதன் பதிவுகள் உலக அரசியலின் குறியீடுகளையும் தீண்டுகிறது.


மணலை ஒரு விரக்தியென ஏதோ ஒரு கவிஞர் எழுதி வாசித்ததாக நினைவுண்டு. மணலை எதிர்க்கொள்ள கொஞ்சம் கூடுதலான சாமர்த்தியமும் சக்தியும் வேண்டுமென்பதால், அதை விரக்தியாக்கிவிட்டார்கள். சிலர் மணலை வெயிலின் கைகள் எனவும் சொல்வார்கள். அடிப்பாதங்களை எரிக்கும் நெருப்பு குழம்பின் துகள்கள் என எனது அறிவியல் ஆசிரியர் ஒருமுறை சொன்னதுண்டு.

இங்கே மணலை இவர்கள் ஒரு ஓவியமாக்கி இருக்கிறார்கள்.



மணலைப் பற்றிய ஒரு கவிதை

அத்துனை உரையாடல்களும்
முடிவடைகின்றன
காதல் மட்டும் தொடர்கிறது.
அன்பின் படிமத்தில்
வெயிலின் நிழல்
ஊர்கிறது ஒரு பெருங்காவியமென.

கே.பாலமுருகன்
மலேசியா