Friday, December 31, 2010

துண்டிக்கப்பட்ட நகரத்துக் கிழவர்கள்

நகரத்தில் எப்பொழுதும் ஆங்காங்கே பல தொடர் அல்லது தொடர்பற்ற நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்காததைப் போலத் தோன்றினாலும் நகரம் என்கிற மையம் அனைத்தையும் இணைத்து வைத்திருக்கின்றது. நகரத்தின் மீது நீங்காது சில கனவுகள் வெயில் போல எரிந்தபடியே பரபரப்பிற்கு மத்தியில் படிந்திருக்கின்றன. கட்டற்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் சிலவற்றைத் தொகுக்கும்போது சில மனிதர்களும் சில நிகழ்வுகளும் தற்செயலாகச் சிக்கிக் கொள்கின்றன.

நிதானமின்றி ஒருவர் மீது ஒருவர் அவசரத்தையும் வெறுப்பையும் தூக்கி வீசிக் கொண்டு பரபரத்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எங்காவது ஓர் இடத்தில் இதற்கெல்லாம் தொடர்பே இல்லாமல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கக்கூடும். அவர்தான் நகரம் இழந்துவிட்டிருக்கும் அமைதியின் கடைசித் தூதர்போல எல்லாவற்றையும் அசைபோட்டுக் கொண்டு உட்காந்திருப்பார். அவர் யார்? அவர் யாரை அல்லது எதை அப்படிக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற கேள்வி எழ வாய்ப்புண்டு.

இதுபோல ஒரு மதியத்தில் நான் அத்தகைய ஒரு கிழவரை நகரத்தில் சந்திக்க நேர்ந்தது. முன்பு ஒருமுறை இதே கிழவரைத்தான் சம்சு கடையிலிருந்து துரட்டப்படுவதையும் அவர் படியிலிருந்து இடறிச் சாலையில் விழுவதையும் பார்த்திருக்கிறேன். எல்லாரையும் போல அதைக் கணநேர வேடிக்கையாகக் கடந்து போய்விட்டேன். இன்று மீண்டும் அதைவிட மோசமான தோற்றத்துடன் ஆப்போய் காய்க்கறி கடையில் மூலையில் அமர்ந்திருக்கக் கண்டேன். பலநெடுங்காலத்தின் சோர்வு அவர் முகத்தில் ஒட்டியிருந்தது. உடலைச் சுத்தப்படுத்திக்கொள்ளாமல் குறைந்தது இரண்டு மாதம் அவர் இந்த நகரத்தில் சுற்றி அலைந்திருக்க வேண்டும்.

Saturday, December 25, 2010

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருது

2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்ற எனது நாவலான " நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்" தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றுள்ளது.

பரிசளிப்பு விழா வருகின்ற 1.01.2011 ஆம் தேதி மாலை மணி 6.00க்கு சிங்கப்பூரில் நடைப்பெறவுள்ளது.

கே.பாலமுருகன்
மலேசியா


Friday, December 24, 2010

பாராட்டு விழா - மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு தியான ஆசிரம இலக்கிய விருது

நாவலாசிரியர் உயர்திரு அ.ரெங்கசாமி ஐயாஅவர்களுக்கு நாளை (24/12/2010), வெள்ளிக்கிழமை இரவு 8-லிருந்து 10 வரை கூலிம் தியான ஆசிரமத்தில் (பாயா பெசார், லுனாஸ், கூலிம் கெடா) பாராட்டு விழா நடைப்பெறவிருக்கின்றது. ஐயா அவர்களின் முக்கிய படைப்புகளில் உயிர் பெறும் உண்மைகள், புரட்சிப்பூக்கள், புயலும் தென்றலும், புதியதோர் உலகம், நினைவுச்சின்னம், இமயத்தியாகம், லங்காட் நதிக்கரை போன்ற நாவல்களும் அடங்கும். 2005-யில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய மலேசியத் தமிழ் நாவல் எழுதும் போட்டியில் இவரது 'லங்காட் நதிக்கரை' என்ற நாவல் முதன்மைப் பரிசை வென்றது.
நன்றி: தகவல்: மு.வேலன்

வருடந்தோறும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களையும் கூலிம் தியான ஆசிரமம் சிறப்பித்து வருகிறது. இந்த வருடம் வரலாற்று நாவலாசிரியரான அ.ரெங்கசாமி விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்படவிருக்கிறார். அவருக்கு வழங்கப்படும் இந்த இலக்கிய விருது மிகவும் முக்கியமானதாகும். வல்லினம் தைப்பிங் சந்திப்புக்கூட்டத்திற்குப் பிறகு அறியப்பட்ட மகிழ்ச்சிக்கரமான விசயம் என்பதால் அ.ரெங்கசாமி எனும் படைப்பாளியின் பங்களிப்பும் இருப்பும் மேலும் பெரியதொரு கவனத்திற்குச் செல்கிறது. அவர் தொடர்ந்து இன்னமும் ஆழமாக வாசிக்கப்பட வேண்டும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Sunday, December 19, 2010

அநங்கம் இதழுக்காக செழியனுடன் ஒரு சந்திப்பு- சிங்கப்பூரில்

-எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வதுதான் நல்ல சினிமா- செழியன்
(செழியனின் சினிமா பார்வை மூன்றாம்தர பார்வையாளன்/வாசகனையும் சினிமா பற்றிய நுகர்வெளிக்குள் கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழின் வாசகர்களுக்கு அவர்களின் பிரக்ஞைக்கு ஏற்ப அதே சமயம் விரிந்த உளவியல் பார்வையுடன் தன் விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர் செழியன். அவரது எல்லாம் சினிமா கட்டுரைகளிலும் மனத்துவ
அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது.விகடன் வெளியீடாக இவரது சினிமா விமர்சனம் தொகுப்பு இரு பிரிவுகளாக வெளிவந்திருக்கின்றன.)

கே.பா: சிறுகதையை அல்லது நாவலைப் படமாக்குதல் போன்ற மேற்கத்திய சினிமா பாணியைத் தமிழ் சூழலுக்குக் கொண்டு வந்தால் வெற்றிப் பெறும் அல்லது இரசனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

செழியன்: நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும் நமது குறும்படங்களும் சினிமாக்களும் இயக்குனரின் கதையாகவும் தயாரிப்பாளரின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ற கதையாகவும் தான் இருக்கிறது. நம்மிடையே கதைகளே இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன. குறும்படத்தின் வடிவமே ஒரு மாற்று ஊடகம் அதாவது altanative media என்பதுதான். மாற்று ஊடகம் என்றால் வெகுஜன சினிமா செய்ய முடியாததை இந்த ஊடகம் செய்ய முடிந்தால் அது மாற்று ஊடகம் எனலாம். உதாரணத்திற்குத் தீவிர இதழை வெகுஜன இதழுக்கு எதிரான பண்பாட்டில் நடத்துவது போலத்தான். அதுபோல தீவிரமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்யும் சினிமாத்தான் மாற்று முயற்சிகளை முன்னெடுக்க முடியும். இந்த மாற்று முயற்சியைக் கொண்டு அவரவரின் சொந்தக் கதைகளைப் படமாக்குவதைவிட ஏற்கனவே கண்கானிக்காமல் விடப்பட்ட நமது தமிழ் அடையாளங்களை கலாச்சாரங்களை, வாழ்வைப் படமாக்கினால் தீவிர இரசனை மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். எத்துனையோ தமிழ்
கலாச்சாரத்தை முன்னிறுத்தக்கூடிய சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன, அதையெல்லாம் நாம் முறையாகப் படமாக்கினால் கண்டிப்பாக முக்கியமான கவனம் பெறும்.

தும்பி: மாணவர்அறிவியல் இதழ்

மாணவர்கள் அறிவியல் என்பதை எப்பொழுதிலிருந்து அறியத் துவங்குகிறார்கள்? இந்த ஒரு கேள்வி ஒவ்வொருவரின் வாழ்வின் அறிதல் முறைகளை நோக்கியும் மிக வேகமாகப் பாயக்கூடியது. ஒரு கல்லை எடுத்து ஆற்றில் வீசியதும் மூழ்கிவிட்ட கல்லின் தன்மையை உணர்வதிலிருந்தும் எட்டுக் கால் பூச்சிக்கு எட்டுக்கால் எனச் சொல்வதிலிருந்தும்கூட நம்முடைய முதல் அறிவியல் சிந்தனை உருவாகியிருக்கக்கூடும். அறிவியல் நம் அன்றாட வாழ்வின் மிக நெருக்கமான ஒன்று. நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவற்றையும் தெரிந்துகொள்வதில் நமக்குக் கிடைக்கும் கூடுதலான புலனே அறிவியல்.

அறிவியல் குறித்த கவனம் சமீபத்தில் இந்தியர்கள் மத்தியில்  அதிகமாகவே குவிந்துள்ளது என்றே சொல்லலாம். பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ள வரும் பெற்றோர்களின் அக்கறை அறிவியல் பக்கம் திரும்பியிருப்பதை உணர முடிந்தது. இனி அறிவியல் பாடம் அடுத்த வருடம் முதல் தமிழ் மொழியிலேயே போதிக்கப்படும்.  இந்த ஆண்டு முதல் "தும்பி" எனும் அறிவியல் காலாண்டிதழ் சு.யவராஜனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தூவங்கியிருக்கிறது.

தும்பி அறிவியல் இதழ் மாணவர்களுக்காகப் பல சிறப்பு அம்சங்களுடன் பல அரிய தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் காலாண்டிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துகொண்டிருக்கும் தும்பியை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் செய்யலாம்.(yuvatozhi@gmail.com)
விண்வெளி, பசுமை அறிவியல் என ஒவ்வொரு இதழிலும் ஒரு தனிச் சிறப்பான தலைப்புகளுடன் எளிமையான ஆய்வுகளுடன் அறிவியல் மீதான மாணவர்களின் இடைவெளியையும் பயத்தையும் நீக்கும் விதத்தில் உங்களை நாடி வருகிறது “தும்பி”.

சிறப்பான தாளில் முழு வண்ணப் பக்கங்களுடன் வெளிவரும் தும்பியின் விலை வெறும் ரி.ம 2.50 மட்டுமே. இதுவரை தும்பி 2010 ஆம் ஆண்டின் சிறப்பிதழாக இரண்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. 

கே.பாலமுருகன்.
மலேசியா

Saturday, December 11, 2010

சிறுகதை: சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

1. தவிப்பெனும் கடல்

நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும். இருளில் சொற்கள் கரைந்துகொண்டிருக்கும் உணர்வைப்பெற முடியும். மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த சிட்டுக்குருவியின் படப்படப்பு மட்டும் அதீத ஓசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து ஓடிவந்த முதல் நடுநிசி அது. நகரம் செத்து அநேகமாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கக்கூடும்.
“செவன் இலவன் எங்காது இருக்குமா?”

எதிரில் யாரும் இல்லை. கேட்டு விடவேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததில் எப்படிக் கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே நடந்தேன். முதலில் சந்திப்பவரிடம் அதைக் கேட்டுவிட்டு கூடவே ஏதாவது சாப்பிடுவதற்குக் கொஞ்சம் பணமும் கேட்டுத்தான் ஆக
வேண்டும். நகரத்து சாலை இருளுக்குள் ஓடி மறையும்வரை எனது கண்களுக்குள் சூன்யமாக விரிந்து கிடந்தது. கண்கள் வழக்கமாக மாயையை உருவாக்கி அனுமானங்களின் மூலம் கிளர்ச்சியுறுவதில் பழகி போனதாயிற்றே. யாரோ வருகிறார்கள், வந்து விடுவார்கள், ஒரு வயதான பெண்மணி வருகிறாள் எனத் தொடர்ந்து தூரத்தைப் பற்றிய கனவை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. எங்காவது களைத்து மயங்கிவிட்டால் என்கிற உடல் குறித்த பயமும் தொடர்ந்து ஒட்டிக் கொண்டது.

Wednesday, December 8, 2010

மலாய் மொழிப்பெயர்ப்புக் கவிதை -2 Karuna (தமிழில் கே.பாலமுருகன்)

உன்னைப்போல உருவெடுத்த
இந்தப் பட்டாம்பூச்சியின் சிறகுகளாய்
ஓர் அமைதியான இரவில்
நான் மாறியிருந்தேன்.

இல்லாமலிருக்கும் நிலையிலேயே
நம் இல்லாமல் போகும் நாட்களை நோக்கி
தவம் கிடக்கிறேன்.
உன் வருகையைப் போல
உன் விடைப்பெறுதலும்
அதிசயமாக நிகழ்கிறது எனக்குள்.

எரிந்துவிட்ட உன் புகைப்படத்தின்
சாம்பல்களில்
உன் பொய்யான முகமும்
நான் எதிர்பார்க்கும் ஒரு செய்தியும்
ஒட்டிக்கிடக்கின்றன.

காலம் நகர்த்த முடியாத
ஒரு கெட்டியான இருளில்
கருகி விழுகின்றன
என் சிறகுகளும்
இந்தப் பட்டாம்பூச்சியும்.
இதுவும் ஒரு அதிசயம் போல.

மலாயில்: Karuna
தமிழில்: கே.பாலமுருகன்

Monday, December 6, 2010

மலாய் மொழிப்பெயர்ப்புக் கவிதை: H.Hisham (தமிழில்: கே.பாலமுருகன்)

தெரியப்படுத்துங்கள் எல்லோரிடமும்
நான் ஓர் அடிமையென
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வருவது போல
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சென்றும் விடுகிறேன்
நான் அழைக்கப்படவும் இல்லை
சென்றபோது தடுக்கப்படவுமில்லை
எனக்கு அளிக்கப்பட்ட வாழ்வுடன்
என் அடிமைப்பாதையைத் தேடி நகர்வதற்கு
விடப்பட்டேன்.

என் அன்பை
அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள்
என் வேண்டுதல்களும் என் ஞாபகங்களும்
நாம் கைக்குலுக்கிக்கொண்ட குறிப்புகளும்
நாம் சகோதரர்களாக இருந்த தருணங்களும்
இவையனைத்தும் தங்கிச் செல்லும் நினைவுகளாக
தேவையும் பயணமும் வெவ்வேறாக இருந்தபோதும்
இன்றைய பயனத்தில் தொடர்கிறது.

நாம் எதிர்பார்த்திராத ஒரு நாளில்
மீண்டும் சகோதரர்களாக ஒரே பயணத்தில்
சந்தித்துக் கொள்வோம்.
நம் வேட்கையும் நம் போராட்டமும்
நம் தேடலும் நம் இலட்சியமும்
ஒன்றுசேர நம் இலக்கை
உறுதிப்படுத்தி பயணத்தின்
எல்லையை வந்தடையும்.

Thursday, December 2, 2010

கேலி சித்திரங்களும் கல்வி உலகமும்: கார்ட்டூனிஸ்ட் காஷிம்

2006 ஆம் ஆண்டு சிறந்த கார்ட்டூனிஸ்டாகத் தேர்வாகி, 1998 ஆம் ஆண்டு சிறந்த தேசிய தினத்திற்கான சின்னம் வரைந்ததற்கான விருதும் கிடைத்த காஷிம், 1970இல் பேரா மாநிலத்திலுள்ள தாப்பா எனும் இடத்தில் பிறந்தவர் ஆகும். நாட்டிலுள்ள பல இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் கார்ட்டூன் வரைபவராகப் பணியாற்றி ஆழமான அனுபவம் திறமையும் உடையவர் இவர்.

உத்துசான் மெலாயு எனும் மலாய்ப் பத்திரிக்கையின் கல்வி பிரிவில் கார்ட்டூனிஸ்டாகப் பணிப்புரிந்து வரும் இவர், தனது “usik usik” எனும் வாசகத்தின் மூலம் உத்துசான் நாளிதழில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். கல்வியும் பள்ளிச்சூழல் சார்ந்தும் வேடிக்கையான கார்ட்டூன்கள் வரைந்து கடுமையான பிரச்சனைகளைக்கூட நகைச்சுவையாக்கி சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தவர்.

கல்வி அமைச்சு புதியதாக அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எப்படி ஆசிரியர்களையும் கற்றல் சூழலையும் பாதிக்கிறது என்பதன் இன்னொரு பகுதியைத் துணிச்சலாகத் தன் கேலி சித்திரங்கள் மூலம் பொதுமக்கள் பார்வைக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். குறிப்பாக அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்க வேண்டும் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு எப்படி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பெரும் தடுமாற்றங்களை அடைகிறார்கள் என்பதை அதிகமாகத் தன் சித்திரங்களில் மூலம் விமர்சனம் செய்திருக்கிறார். (அவர் குறிப்பிட்ட மொழி தடுமாற்றம் நம் சமூகத்து கல்வியாளர்களின் ஒருவகையான போதமை எனவே குறிப்பிடலாம்)

தமிழில் ஓவியர் சந்துருவின் சித்திரங்கள் முக்கியமானவையாகும். கோடுகளின் வழியாகவே கோட்டோவியங்களைப் படைத்து தனக்கென தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். ஒரு சிறுகதையின்/கவிதையின் ஆழ்மனதைத் தொடக்கூடிய சாத்தியப்பாடுகளை தன் ஓவியங்களின் மூலம் உருவாக்கிக் காட்டியவர் சந்துரு. சித்திரங்களில் ஒரு நகைச்சுவை பாங்கை இடைப்பகுதியாகக் கொடுத்து மையப்பிரச்சனையையும் தொட்டுவிடச் செய்தார். குறிப்பாக செம்மொழி மாநாடு குறித்தான கார்ட்டூன்கள் இரசிக்க வைத்தன. கார்ட்டூனிஸ்ட் என்பவர்கள் வெறும் நகைச்சுவை சித்திரங்களை வரைந்துகொண்டு ஊடகத்தோடு தன்னைச் சுருக்கிக் கொண்டவர்கள் அல்லர் என்பதை காஷிம் சந்துரு போன்றவர்களின் துணிச்சலான செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு சொல்ல முடிகிறது. சமூக நிகழ்வுகளின் மீதான தனது பரிச்சியத்தை வளர்த்துக்கொண்டு அதனைச் சார்ந்த புதிய கருத்தாக்கங்களையும் உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து தன் ஓவியத்தின் நகைச்சுவைக்குள் தனது கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கத் தெரிந்த ஆற்றலுடையவர்கள் சமீபத்திய ஓவியவர்கள்.

கீழ்க்காணும் காஷிம் அவர்களின் கார்ட்டூன் ஓவியங்களை மாதிரிக்காக அளித்துள்ளேன். இதுவரைக்கும் 1000க்கும் மேற்பட்ட கேளிக்கை சித்திரங்களை வரைந்துள்ளார்.

படம் 1:
சோதனையை முன்வைத்து இங்கு உருவாகியிருக்கும் போராட்டம் என்கிற உணர்வை வெளிப்படுத்துவதாக இந்தக் கேலி சித்திரம் அமைந்துள்ளது. சோதனையை எழுதுவதற்கு மண்டபத்தினுள் செல்லும் மாணவர்களைப் பார்த்து, “சிறப்பாகப் போராடுங்கள்” என ஆசிரியர் சொல்வது போல சோதனை மாணவர்களுக்குப் பெரும் சோதனைக் கொடுக்கக்கூடியதாகவே முன்வைக்கப்படுவதை காஷிம் இதில் வரையறுக்கிறார். சோதனையாலும் சோதனைகளின் முடிவாலும் மாணவர்களின் சிரிப்பும் மகிழ்ச்சியும் பிடுங்கப்பட்டு, அவர்களின் உளவியல் பெரும் மாற்றத்திற்குள்ளாகுவதைத்தான் இங்கு நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 

படம் 2:
முதலாம் ஆண்டிற்குப் பல கற்பனைகளுடன் நுழையும் மாணவர்களின் எண்ணங்கள் பிறகொரு சமயத்தில் அவர்களின் மீது சுமத்தப்படும் பலவகையிலான சுமையால் சிதைந்து போவதை இந்தச் சித்திரத்தின் வழி விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார் ஓவியர். முதலில் இந்தச் சுமையின் வடிவம் புத்தகப்பையின் மூலமாகவே அவர்களுக்குள் ஆழ்ந்து படிகிறது. அவர்களின் உயரத்திற்கும் உடல் அளவிற்கும் சற்றும் பொருந்தாத பெரிய புத்தகப்பையை முதுகில் சுமந்துகொண்டு சிரமப்பட்டுப் பள்ளிக்கு வந்து சேர்வதைப் பார்த்த என் அனுபவத்தைத் தொடக்கூடியதாக இந்த ஓவியம் அமைந்துள்ளது.

படம் 3:
முன்பொரு சமயத்தில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்ட கணினி கட்டிடங்கள் சரிவு சார்ந்த தன் விமர்சனத்தையும் கேலியையும் இந்தச் சித்திரத்தின் மூலம் மீட்டுக்கொண்டு வருகிறார் காஷிம். மாணவர்கள் எல்லோரும் தலையில் பாதுகாப்பு தொப்பியை அணிந்துகொண்டு கணினி வகுப்பிற்குள் நுழைகிறார்கள். ஆசிரியர் ‘கணினி கூடம் தயாராகிவிட்டது, கணினிகளும் கிடைத்துவிட்டன், பிறகேன் தொப்பி அணிந்துள்ளீர்கள்?”எனக் கேட்க, அதற்கு மாணவர்கள் வேடிக்கையாக, “ இடிந்துவிழும் கிருமியிலிருந்து எங்களைத் தற்காத்துக்கொள்ள’ எனப் பதிலளிக்கிறார்கள்.
இப்படி மேலும் கல்வி உலகில் நிகழும் பல சர்ச்சைகள்/பிரச்சனைகள்/ குறைபாடுகள் என அனைத்தையும் தொட்டுப் பேசக்கூடிய கேலி சித்திரங்களை ஓவியர் காஷிம் தொடர்ந்து படைத்துக் கொண்டு வருவது ஆரோக்கியமான விசயமாகும்.

குறிப்பு: மேற்கண்ட காஷிம் அவர்களின் கேலி சித்திரங்கள் ஏற்கனவே வெவ்வேறு காலக்கட்டங்களில் உத்துசான் நாளிதழில் பிரசுரமானவையாகும். கூடிய விரைவில் கார்ட்டூனிஸ்ட் காஷிம் அவர்களை வல்லின இணைய இதழுக்காக ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்துள்ளேன். விரைவில்.

நன்றி: உத்துசான் நாளிதழ்
ஓவியர் காஷிம்
கே.பாலமுருகன்
மலேசியா