Thursday, September 30, 2010

சீ.முத்துசாமியின் சிறுகதையும் நாவலும்: ஆழ்மனக் குறியீடுகளும் வாழ்வைக் கரைக்கும் வாக்கியங்களும்

நவீன சிறுகதைகளின் உச்சம் எனக்கருதப்படும் தனிமனித உளக்குறிப்புகளின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் கொந்தளிப்புகளையும் உச்சங்களையும் தனது சிறுகதைகளில் கையாண்டு பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமி. இன்றும்கூட சீ.முத்துசாமியின் கதைகள் மீள்வாசிப்புக்கும் தீவிர வாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதா என்பதே பெரும் கேள்வியாக நம் இலக்கிய வாசிப்பு தடத்தில் தேங்கி நிற்கிறது. அப்படியொரு மனித மனங்களின் ஆழ்ந்த குறிப்புகளை தன் கதைக்குள் வாழ்வை எதிர்க்கொள்ளும் உளவியல் கட்டுமானங்களாக எழுப்பிய பிரதியை வாசிக்கவும் விமர்சிக்கவும் தவறினால் அது பெருத்த இழப்பாக ஆகிவிடும் என்பது உறுதி.

2007-இல் அவரை நான் சந்திக்கும்போதே பின்நவீனத்துவம் பற்றியும் இலக்கியத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் உரையாடினார். எனக்கு பின்நவீனத்துவம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தியதில் அவருக்கு முக்கியமான இடமுண்டு. மலேசியாவில் எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்த நாவலாகவும் மனித வாழ்வின் வரலாற்றை நவீனமுறையில் ஓர் இலக்கியப்பிரதியாக எழுதப்பட்ட முதல் நாவலாகவும் 2006-ல் வெளிவந்த சீ.முத்துசாமி எழுதிய ‘மண் புழுக்கள்’ நாவலை மட்டும்தான் குறிப்பிட முடிகிறது. இதற்கு முன் வெளிவந்த ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண வெயில்’ குறிப்பிடத்தக்க மலேசிய வாழ்வின் துயரங்களையும் அவர்கள் அனுபவித்த ஒடுக்குமுறைகளையும் ஒரு கதையாக எல்லாம் உணர்வுகளையும் வெளிப்படுத்திய பிரதியாகக் கருதலாம். ஆனால் சீ.முத்துசாமியின் நாவல் ஒரு தோட்டப்புற வாழ்வைப் பெரும் தரிசனமாக அவர்களின் மொழியிலேயே எழுதி, மனதிற்கு நெருக்கமான கதையாக மாறி பண்பாட்டு வேர்களாக வளர்கிறது.

எது சிதைந்த கலாச்சாரம் எது உயர்ந்த கலாச்சாரம் என்பதில் நமக்கிருக்கும் மதிப்பீட்டு பலவீனங்களை, அள்ளி இறைத்துவிட்டு எட்டி உதைத்துவிட்டு கம்பீரமாக நம்மை ஒரு கதைவெளிக்குள் இழுத்துக் கொண்டு போகும் துணிச்சல் மண் புழுக்கள் நாவலுக்குண்டு. நிதர்சனத்தின் எல்லாம் உடலையும் உரித்துப் போட்டுவிட்டு வரலாற்றின் முன் சிதைந்துபோன ஒரு கலாச்சாரத்தைக் கதையாக மாற்றி சொல்வதில் சீ.முத்துசாமி கடுமையாக முயன்ற ஒரு படைப்பாளி என்றே சொல்லலாம். வரலாற்றில் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட சிறுபான்மை மக்களின் வாழ்வு குறித்தும் அவர்களின் மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளாலும் கொடுமைகளாலும் அவர்கள் அடைந்த வாழ்க்கைமுறைமை குறித்தும் மிகவும் கரிசனமான எல்லையைக் கண்டைந்தது சீ.முத்துசாமியின் மண் புழுக்கள்.

மக்கள் ஓசையில் தொடராக வெளிவந்த அவரது நாவலின் மொழியை வாசித்தவர்கள், தமிழ் மொழியைச் சிதைத்து எழுதுவதாகக் குற்றம் சாட்டினார்கள். மொழியைக் கொச்சைப்படுத்திய விதத்தைச் சுட்டிக்காட்டி சினமடைந்து அவரது நாவலை விமர்சித்துத் தள்ளினார்கள். அடிமைத்தனங்களால் கலாச்சாரத்தையே இழந்து, அதிகமாகச் சுரண்டப்பட்டவர்களின் கதைக்குள் இவர்கள் அப்படியென்ன ஒழுக்கமான பிரச்சாரத்தனங்களையும் இலக்கண விழுமியங்களையும் எதிர்ப்பார்க்கக்கூடும்? இலக்கியம் என்பதை ஒரு பிரச்சாரப் பிரதியாகக் கருதுபவர்களின் மனம் இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற எல்லையில் நின்றுவிடுவது வருத்தமளிக்கிறது. குறைந்தபட்சம் இந்த நாவலை முறையான விமர்சனத்திற்கு உட்படுத்திருக்க வேண்டும். ஒரு கதைக்கான மொழியையும் வாக்கியங்களையும் சொற்களையும் தேர்ந்தெடுப்பதில் அந்தக் கதை நிகழும் களமும் யாரெல்லாம் அந்தக் கதைக்குள் இடம்பெறும் மனிதர்கள் என்பதும் மிக முக்கியமான ஒன்றென புரிந்துகொள்வது அவசியம்.

Literature licence/independent எனப்படும் படைப்பு சுதந்திரத்தின் மீதான தெளிவும் அக்கறையும் படைப்பிலக்கியத்தைப் புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் ஓர் இலக்கியப்பிரதிக்குள் நுழைந்ததும் முதலில் வாக்கிய அமைப்பில் ஏதாவது பிழை நிகழ்ந்துள்ளனவா அல்லது எழுத்துப்பிழைகள் எங்கெல்லாம் நிகழ்ந்துள்ளது எனவும் ஆராய்வதில் தன் முழு கவனத்தைச் செலுத்திவிடுகிறார்கள். ஆகையால் கடைசிவரை இலக்கிய வாசிப்பிற்கான முதிர்ச்சியையும் இலக்கியப்பிரதிக்குள் ஒளிந்திருக்கும் மீ மொழி குறித்த தேடலும் இல்லாமல் அற்றுப் போகின்றன.

சீ.முத்துசாமி நாவலில் வருபவர்கள் முன்பொரு காலத்தில் மலாயா வெள்ளையனின் ஆட்சிக்குக் கீழ் இருந்தபோது ஒரு சிறு தோட்டப்புற மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களாகத் தங்களின் கலாச்சாரத்தையே தொலைத்துவிட்டு வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்களே. அவர்களைப் பற்றிய வாழ்வை எப்படிப்பட்ட மீ மொழியிலும் சொல் தேர்வுடன்கூடிய ஆக்கக்கரமான மொழியிலும் சொல்ல வேண்டும் என்பது படைப்பாளனின் நேர்மையான சுதந்திரம் குறித்தது. சீ.முத்துசாமி மண் புழுக்களில் தேர்ந்தெடுத்த அந்த மக்களின் வட்டார மொழியானது நாவலின் கூடுதல் நம்பகத்தன்மையையும் பலத்தையும் மேலும் வலுப்படுத்துவதாகவே கருதலாம்.

இங்குப் பின்நவீனத்துவ இலக்கியம் படைக்கப்பட்டுள்ளதா என்கிற கேள்வியில் இரண்டு வகையான அபத்தம் உண்டு. ஒன்று பின்நவீனத்தும் என்பதை முன்வைத்து ஒரு படைப்பை உருவாக்க முடியும் என நம்புவது, மற்றொன்று பின்நவீனத்துவத்தில் இலக்கியம் படைக்கப்படிருக்க வேண்டும் என நினைப்பது. எந்தவொரு கோட்பாடும் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான துணைக்கருவிகள் மட்டுமே. அதையும் மீறி எழுத்தாளர் தன்னை அறியாமலேயே பின்நவீனத்துவ படைப்பை எழுதியுள்ளாரா எனக் கேட்டால், தைரியமாக “மண் புழுக்கள்” நாவலைச் சுட்டிக்காட்டலாம். மலேசியாவில் எழுதப்பட்ட பின்நவீனத்துவ நாவல் என்றே குறிப்பிடலாம்.

அதெப்படி அது பின்நவீனத்துவ நாவலாகக் கருதப்பட முடியும் எனக் கேட்கக்கூடும். முதலில் அந்த நாவலில் எந்த மையக் கதைப்பாத்திரமும் இல்லாதிருப்பது. கதையின் மையம் என்பது தோட்டப்புற வாழ்வாக இருப்பதால் அந்த மையம் மாறிக்கொண்டே நாவல் முழுக்க தன் நிலையான இருப்பை இரத்துசெய்துவிட்டு தன் புதிய இருப்பிடத்தைத் தேடிக் கொண்டு அலைகிறது. அடுத்ததாக முதலாளி வர்க்கத்தால் சமூகத்தில் பிளவுண்டு கிடக்கும் அறம் குறித்தும் நாவலில் தொடர்ந்து கேள்வியும் கேலியும் எழுப்பப்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் சிறுக சிறுக சிதைந்து வரும் கலாச்சாரத்தையும் அறத்தையும் நாவல் அவ்வப்போது மறுப்புனைவு செய்து கதைக்கு வெளியே கொண்டு வந்து நீட்டுகிறது. இது மண் புழுக்கள் நாவலில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபாரமான முயற்சிகள் என்றே சொல்லலாம். இன்னமும் இந்த நாவல் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றே தீர்க்கமாக நம்புகிறேன்.

வல்லினம் முதல் இதழில் பிரசுரமான அவரது “வெளி” சிறுகதை மிக மிக முக்கியமான ஒரு கதையாகும். ஜெயமோகன் குறிப்பிட்டது போல உலகின் எந்த மூலையில் உள்ள வாசகனாலும் சீக்கிரம் அந்தக் கதைக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ஆழ்மனத் தவிப்புகளை அடைந்துவிடக்கூடும். இந்தக் கதையின் வாக்கிய அமைப்பு மிக சவாலனது என்றே சொல்லலாம். ஒவ்வொரு வாக்கியங்களிலும் ஒரு சொல்லுக்கும் அடுத்து வரும் சொல்லுக்கும் மிக நீண்ட மன பரிணாமங்கள் சிக்கல்களாகப் புனையப்பட்டிருக்கும்.

கதையில் இடம்பெறும் அந்த மனிதனின் மனதின் அத்தனை குறிப்புகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே அடையக்கூடிய தேர்ந்த வாசிப்பும் பயிற்சியும் அவசியம் எனக் கருதுகிறேன். ஆரம்பநிலை வாசகன் கதையில் ஏதாவது ஒரு இடத்தில் காணாமல் போகக்கூடும் அல்லது உள்ளே நுழைந்த வேகத்திற்கு சீ.முத்துசாமியின் வாக்கியங்களில் எங்காவது கரைந்து வெளியே வீசப்படவும்கூடும். ஒரு வாக்கியத்தை எளிமையாக்காமல் அடுத்த வாக்கியத்திற்கு நுழைய முடியாதபடிக்கு கதையின் ஆன்மாவும் அவரது சொற்களும் பிணைந்திருக்கும். ஒரு மரணத்தை முன்வைத்து அந்தப் பிரிவை ஆழ்மனக் குறிப்புகளாக ஒரு உளவியல் விவாதமாகக் கதைக்குள் அவர் நகர்த்தியிருக்கும் முயற்சி என்பது இன்னமும் அதிகமாக உணரப்படாத நவீன இலக்கியப்பிரதியின் தன்மைகள் என்றே அடையாளப்படுத்தலாம்.

தற்போது இலக்கியம் படித்து வரும் எல்லாம் மாணவர்களும் அவசியம் சீ.முத்துசாமியின் கதைகளை வாசித்திருக்க வேண்டும். மலேசிய இலக்கியத்தின் நவீன பாய்ச்சலை மூத்த படைப்பாளி முத்துசாமியின் கதைகளிலிருந்தும் அவரது மொழிநடை அடைந்திருக்கும் கவித்துவமான அடைவுநிலைகளிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம். வெளி சிறுகதை என்பது ஒரு நல்ல வாசகனுக்கு மிகவும் சவால் நிறைந்த கதையாகும். அதன் மொழியை நுகர்வதற்கு ஒருமுறையும், அதன் கருவை அடைவதற்கு ஒருமுறையும், அதன் சிக்கலும் முரணும் அழகியலும் நிரம்பிய வாக்கிய அமைப்புகளை புரிந்துகொள்வதற்கு ஒருமுறையும் என பலமுறை மீள்வாசிப்பு செய்ய வேண்டிய முக்கியமான கதையாகும்.

கதை என்பது ஒரு தீவிரமான மனப்பயிற்சியை வாசகனுக்கு அளித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். குறைந்தது வாசகனின் மனதைச் சலனப்படுத்தும் அளவிற்காவது வாழ்வு குறித்த அகப்பார்வை அந்தக் கதைக்குள் இருக்க வேண்டும். சீ.மு-வின் ‘வெளி’ சிறுகதை சலனப்பட்ட ஒரு மனதின் வழியாக மிகக் கரடுமுரடான அனுபவத்திற்குள் நம்மை நுழைக்கிறது. அந்த வாசிப்பு தரும் அனுபவத்தின் மூலம் மையக்கதைப்பாத்திரம் அடையும் அத்துனைவிதமான சலனத்தையும் கொந்தளிப்பையும் அடைந்து அந்தக் கதைக்குள்ளிருந்து மீள முடியாத ஒரு நிரந்தர இருப்பைப் பெற வைப்பதே சிறந்த கதை என நினைக்கிறேன். அப்படியொரு நிரந்தரமான இருப்பை அடைந்த என் வாசக மனதின் பதிவுகள்தான் இவை. சீ.மு-வின் சிக்கிக்கொண்ட வாசகன் அதிலிருந்து மீள முடியாததை ஒரு தடையாக எண்ண முடியாது. அந்தக் கணத்தில் மீள முடியாத பரிதவிப்பு என்பது அந்தப் படைப்பின் மூலம் அந்த வாசகன் அடையும் அனுபவம் ஆகும். பிறகொரு நாளில் அடுத்த இலக்கியப்பிரதிக்குள் அவன் தாவிச் செல்லக்கூடும். இது வாசகன் எதிர்க்கொள்ளும் மனமுதிர்ச்சி சார்ந்தவை.

-தொடரும்-

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, September 29, 2010

கவிதை: கனவிலிருந்து விடுப்படுதல்

வியர்த்த உடலுடன்
அந்தக் கனவுக்குள்ளிருந்து வெளியேற
நேர்ந்தது.
கனவிலிருந்து விடுப்படும்போது
மரணமொன்று முதுகில்
ஒட்டிக் கொண்டு வீடுவரை வந்திருந்தது.
திடீரென ஒருநாள் அது காணாமலும்
போயிருந்தது.

பிறகொரு நாட்களில்
என்னைச் சுற்றிய துர்சம்பவங்களினூடாக
எப்பொழுதோ என்னுடன் கனவிலிருந்து
தப்பித்த அந்த மரணத்தை நுகர்ந்தேன்.

மழைக்காலத்தில்
அப்பாவிற்கு நிகழ்ந்த இரண்டுவார
குளிர்காய்ச்சலின் கொடூரத்தில்.

பக்கத்து வீட்டிலிருக்கும்
நல்லம்மா பாட்டி
இறந்தபோது.

சுசீலா அக்காவின் மகன்
பீக்குட்டையில் விழுந்து
10 நாட்கள் உயிருக்குப்
போராடிக்கொண்டிருந்த சமயத்தில்.

அம்மணி அக்காளின் கணவனைக்
காணாமல் அந்த வீடே 15 நாட்கள் அவரைத்
தேடி அலைந்த கணத்தில்.

மீண்டும் ஒரு கோடையில்
அப்பா வளர்த்த கோழிகளெல்லாம்
செத்தொழிந்தபோது.

அன்று வெகுநேர
உறக்கத்திற்குப் பிறகு
வியர்த்த உடலுடன்
ஒரு கனவிலிருந்து வெளியேற நேர்ந்தது.

ஆக்கம்: கே.பாலமுருகன்

Tuesday, September 28, 2010

ஒரு குழந்தை தன் குழந்தைத்தனத்தை இழக்கிறது




குழந்தைகள் இழந்துவரும் குழந்தைத்தனங்களும் சுதந்திரமும் என்பது அவர்களின் கைகளுக்கு எட்டாதவாறு தூரத்தில் வைக்கப்படும் கண்ணாடி பொருள்கள் போலவும் விஷ திரவங்கள் போலவும் ஆகிவிட்டது. எப்பொழுது வேண்டுமானாலும் உடையக்கூடும்.”

அண்மையில் ஒரு திருமண விருந்தில் பார்க்கக் கிடைத்த ஒரு தொடர் நிகழ்வு மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. எத்தனையோமுறை பார்த்தும் உணர இயலாத ஒன்றை மீண்டும் அதன் உள் அடுக்குகளில் நுழைந்து ஆழமாகப் பார்க்கும்போது குற்ற உணர்வே சட்டென மேலிடுகிறது. எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அப்பாவையும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தையும் வெகுநேரம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் தொடங்குவதற்குக் காரணம் தன் அப்பாவின் பிடியிலிருந்து தப்பிக்க அந்தக் குழந்தை எடுத்துக் கொண்ட முயற்சிகள்தான்.

அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயத்துப் பார்க்கக்கூடிய துடிப்பும் உடல் இயக்கமும் தூக்கலாகவே இருந்தது. கைக்கு எட்டாத ஒன்றையும் அதன் இடத்திலேயே வைத்து தன் பார்வைகளாலும் கண் அசைவுகளாலும் தொட்டுவிடக்கூடிய தீவிரம் குழந்தைகளுக்கு உண்டு. தன் அப்பாவிடம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அலங்காரத் துணிகளைக் காட்டி காட்டி எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை அடக்குவதற்கு மட்டுமே அந்த அப்பா முனைந்துகொண்டிருந்தார். விரலை உதட்டில் வைத்து சத்தமாகஉஸ்என்றார். பதிலுக்குக் குழந்தையும் அதே போல செய்து காட்டிஉஸ்என்றது.

தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து அடுத்த நாற்காலிக்கு எகிறி குதிக்க முயன்ற குழந்தையின் கால்களைச் சடாரென பிடித்துக் கொண்டு அவர் மடியில் அமர வைத்தார். அது தொடர்ந்து தன் உடலை இலேசாக்கி அவரது பிடியிலிருந்து நழுவ முயன்றது. பெரியவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான வெறுப்புதான் குழந்தைகளின் மனதில் ஆழமாக வளர்ந்துவிடுகிறது. பிற்காலத்தில் பெரியவர்களின் சாதாரண அறிவுறையைக்கூட மாபெரும் அடக்குமுறையாகக் கருத வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. குழந்தை அந்த அப்பாவின் பிடியிலிருந்து தப்பித்து வரிசையின் கோடிக்கு ஓடி போய் அங்கிருந்து தன் அப்பாவை அழைத்தது. அவருக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்திருக்கும் போல, முகக் குறிப்புகளின் மூலம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். குழந்தையும் அதே போல செய்து காட்டி மீண்டும் அவரை அழைத்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போனவர், தன் இருக்கையிலிருந்து எழுந்துபோய் அந்தக் குழந்தையின் கைகளைக் கிள்ளி அங்கிருந்து கடைசி வரிசைக்கு அழைத்துக் கொண்டு போனார். குழந்தை அழும் சத்தம் மண்டபத்தை இரண்டாகக் கிழித்து எறிந்தது. இதுதான் நான் குறிப்பிட்ட பெரியவர்களின் கட்டுப்படுத்தும் முறைக்கு எதிரான குழந்தைகளின் வன்முறை. தன் உச்சக் குரலில் அழுது தன் வெறுப்பைக் காட்டுவது.

இந்த நிகழ்வு தொடர்ந்து எனக்குள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உருவாகிவிட்ட துண்டிப்பு பற்றியே சிந்திக்க வைத்தது. முதலில் நம் சமூகத்தில் பெரியவர்கள் குழந்தைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதே பெரிய சந்தேகமாக இருக்கிறது. ஒரு குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதில் நாம் காட்டும் அக்கறை, அந்தக் குழந்தையின் இயல்பைப் புரிந்துகொள்வதில் காட்ட மறுத்துவிடுகிறோம்.

நம் குழந்தைகள் இந்த உலகைக் காணும் அல்லது இந்த உலகத்தின் ஒவ்வொரு பொருள்கள் மீதும் கொண்டிருக்கும் தரிசனம் என்பதை எப்பொழுதும் நம்முடைய பழக்கப்பட்ட கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோமே தவிர அந்தக் குழந்தையின் கண்களின் வழியாக அந்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. குழந்தைகளுக்கான உலகைப் பார்க்கும் கண்களை நாம் இழந்ததைப் போல குழந்தைகளும் நம்முடைய(பெரியவர்களின்) அதீதமான கட்டுப்படுத்துதலால் தனது குழந்தைதனங்களையும் இழந்துவிட்டன. மீதி இருப்பது அறநெறியும் எதிர்காலத்தில் அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தைப் பற்றிய தகவல்களும்தான்.

எப்பொழுதுமே பெரியவர்களின் பொதுபுத்தியின் வழியாகத் தீர்க்கமாக நிறுவப்பட்ட அறத்தின் மூலமாகத்தான் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் மதிப்பிடுகிறோம். பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைவிற்கு எதிராக செய்யப்படும் அனைத்தையும் குற்றம் எனவும் தகாத செயல் எனவும் பொதுவாக வரையறுத்துவிடப்படுகிறது. ஆகையால் குழந்தைகளும் தான் செய்த குழந்தைத்தனத்தை ஒரு குற்றத்திற்கு நிகரான செயலாகக் கருதி பெரியவர்களின் அடக்குமுறையைத் தன்னை அறியாமலேயே ஏற்றுக்கொள்கிறது. முதலில் பெரியவர்களுக்கு எது குழந்தைத்தனங்கள் என்பதையும் எது குற்றச்செயல் என்பதையும் உணர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஒரு குழந்தை கல்லை தூக்கி குளத்தில் எறிந்துவிட்டு கைத்தட்டி சிரித்தால், அது குழந்தைத்தனம். அதே கல்லைத் தூக்கி இன்னொரு குழந்தையின் தலையில் எறிந்துவிட்டுச் சிரித்தால், அது தவறான ஒன்று என உணர்த்த வேண்டிய செயல். குழந்தைக் கல்லை எடுப்பதையே தடுத்து நிறுத்த வேண்டும் என நினைப்பது ஒன்றை ஆரோக்கியமாக வடிவமைக்க முனைவதில் அடைந்திருக்கும் பலவீனம் என்றே சொல்லலாம். தன்னைக் கடிப்பதற்குத் துரத்தி வரும் நாயைக் கல்லால் அடித்துத் துரத்தும் அளவிற்காகவாது அந்தக் குழைந்தைக்கோ அல்லது சிறுவன்/சிறுமிக்கோ துணிச்சல் இருக்க வேண்டாமா? கல்லை எடுத்து தூக்கி எறியும் ஓர் அனுபவத்தையே நம்மால் தடை செய்ய முடியாது.

குழந்தைகளின் ஆர்பாட்டமும் ஓட்டமும் சத்தமும் இல்லாத குடும்ப நிகழ்வுகளையும் திருமணங்களையும் யாராவது விரும்புவார்களா? அப்படியும் விரும்ப நேர்ந்தால், அந்தச் சமூகத்தை அல்லது மனிதர்களை என்ன சொல்வது? எப்படித் தன் குழந்தையை தன்னால் உருவாக்கப்படும் அறத்திற்குச் சாதகமாக கட்டமைக்க வேண்டும் என்பதில் பெரியவர்கள் காட்டும் தீவிரம் நாளடைவில் அந்தக் குழந்தைக்கு வெருப்பையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த வெறுப்புணர்வே அதே அறங்களுக்கு எதிரான மன அமைப்பாக அமைந்துவிடுகிறது. பிறகென்ன? அதிலிருந்து தப்பிப்பதற்கு அவர்கள் செய்யும் அனைத்துமே குற்றச்செயல், வெறுக்கத்தக்க செயல் எனக் கருதப்படும். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

முதலில் நாம் குழந்தைகளுக்குச் சில நேரங்களில் நம் வழிக்காட்டுதலுடன் கூடிய சுந்ததிரத்தை வழங்க வேண்டும். பொது இடங்களில் அதன் ஆபத்தை அறியாமல் ஓட ஆசைப்படும் குழந்தைகளைத் திடலுக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே அதன் பாதுகாப்பைச் சொல்லி சுதந்திரமாக ஓட விட வேண்டும். ஆனால் அவன் சுதந்திரமாகக் கத்திக் கொண்டு ஓடுவதையே குற்றம் எனவும் தடுக்க வேண்டிய செயல் எனவும் நினைப்பது குற்றம்தானே?

என்றாவது பெரியவர்கள் குழந்தைகளைப் பேச அனுமதித்ததுண்டா? எப்பொழுதும் அவர்களின் குரலை மீறிக் கொண்டு பெரியவர்களின் சொற்களே கடைசி ஒலிப்பாக இருக்க வேண்டும் என்பதே அறமாக இருக்கிறது. அவர்களுக்கான தேர்வு அவர்களுக்கு எப்பொழுதுமே வழங்கப்படுவதில்லை. திணிக்கப்படுவதே உண்மை.

ஏதாவது ஒரு திருமண அல்லது முக்கியமான நிகழ்வுகளுக்குச் செல்ல நேர்ந்தால், அங்குக் கட்டாயம் ஒரு குழந்தையையாவது பிடித்து ஓர் இடத்தில் அமர வைக்கும் முயற்சிகள் கடுமையாக நடந்துகொண்டிருக்கக்கூடும். மேலும், யாரோ ஒரு பெரியவரின் பார்வை கத்தியின் கூர்முனைபோல குழந்தைகளின் நடவடிக்கைகளின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து அவர்களின் மீது விழக்கூடும் அளவிற்கு மிக மிகக் கூர்மையான பார்வை.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா