Friday, June 25, 2010

சிறுகதை: உடைய மறுக்கும் அதிகாலை மரணமும் சில பேருந்துகளும்

1
இருளை அறுக்க இயலாத
ஒளியின் தோல்விகளென
திட்டுதிட்டாய் தூறுகின்றன
அதிகாலை.

கனவுகளின் மீதங்களாய்
துள்ளியெழுகின்றன
கடக்க முடியாத மரணங்களாய்.

வழக்கம்போல 6.30மணிக்கு எழுந்துவிட்டால் பிரச்சனை இருக்காது. ஆனால் ஒரு கெட்டியான இருள் விழிக்கும் சமயத்தில் எப்பொழுதும் கட்டிலுக்கடியில் அல்லது அருகாமையில் நகர மறுக்கும் பிடிவாதத்துடன் காத்திருக்கிறது.

கவிதைகள் போல மறுக்க முடியாத இருப்புடன், அதிகாலையைச் சந்திக்கிறேன். அநேகமாக அது மரணத்தைப் பற்றிய கவிதையாக இருக்கக்கூடும். எனக்குள் விரியும் காட்சிகளாக ஆல்பத்திலிருந்து விடுப்பட்ட அல்லது காணாமல் போன ஒரு பிம்பத்தின் உடைவுகள் போல எங்கோ ஒலிக்கிறது, சில சமயங்களில் சன்னமாக சில சமயங்களில் சமீபத்தில்.

அலாரம் வைத்துவிட்டுப் படுக்கும் நம்பிக்கையின்மை என்னிடம் இல்லை. அது சோம்பேறிகளுக்குத் தன்மீது இருக்கும் சந்தேகத்தின் குறியீடு. எப்பொழுதோ பால்யத்தில் நண்பன் ஒருவன் கற்றுக் கொடுத்த வழிமுறை இன்றும் நீங்காத கரங்கள் போல என்னைத் தட்டி எழுப்பிவிடுகிறது.

“நீ படுக்கும்போது, தலகாணிகிட்ட மூனு தடவே தட்டி தட்டி. . காலைலெ 6மணிக்கு எழுப்பிவிட்டுடு காலைலே 6மணிக்கு எழுப்பி விட்டுடுன்னு சொல்லிட்டு படுடா. . கண்டிப்பா சரியா ஏஞ்சிறுவ”

இந்த வழிமுறை பால்யத்தில் நிறைவேறவே இல்லை. என் தலையணை என்னைச் சுயமாக எழுப்பிவிடும் அதிசயம் நிகழும் முன்னே அம்மாவின் கரங்கள் தடதடவென மேலே விழும். “டே மணியாச்சி ஏஞ்சிரு. .குளிக்கனும்”

எனது ஒவ்வொரு அதிகாலையும் ஒரு பறவையின் முனகலைப் போல தொடங்கி காகத்தின் அரவம் போல விரியும். இன்று சுயமாக எழுந்து கொள்கிறேன். தனியாகக் கிளம்புகிறேன். யாருடனும் பேசுவதில்லை. அதிகாலை ஓர் அடர்த்தியான மௌனத்துடன் கணமிழந்து மிதந்து கொண்டிருந்துவிட்டு சடாரென்று கரைந்துவிடுகிறது.

அதிகாலையில் கேட்கும் அம்மாவின் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் குரலோ அல்லது அப்பாவின் அதிகாலை நடமாட்டங்களோ இல்லாத இல்லாமல் போன ஒரு வெறுமையான அதிகாலை பொழுதுகளில் வேறென்ன இருக்க முடியும்?

சனிக்கிழமைகளில் எப்பொழுதாவது வழக்கத்திற்காக எதிராக அதிகாலையில் விழித்துக் கொண்டால், அந்தக் கெட்டியான இருள் மேலும் நகர்ந்து நெருக்கத்தில் வந்திருக்கும். அது வெறும் உப்பிய இருளின் மாயையாகவும் இருக்கக்கூடும். அல்லது நினைவிலிருந்து நீங்க மறுக்கும் அதிகாலை என்பதன் நீள்பதிவாகவும் இருக்ககூடும். பொருட்படுத்துவதில்லை என்றாலும் அறையையும் அறையிலிருக்கக்கூடிய பொருள்களையும் சுருக்கி ஒரு புள்ளியாக்கி ஏதோ ஒரு மையத்தில் வட்டமிடுகிறது அதன் அடர்த்தியும் நெருக்கமும்.

“முருகா! இன்னிக்கு பஸ்ஸுகார அங்கிள் தூக்கி வெளிய எறிஞ்சிர மாட்டாரே?”

இருள் தனது முதல் சொல்லை அதன் பல வருட மௌனத்தினூடாக எல்லாம் இறுக்கங்களையும் ஊடறுத்து இன்று உரையாடத் துவங்கியது. அறை மெல்ல கரைந்து உடல் பற்றிய பிரக்ஞை களைகிறது. எனக்கு முன்பான அந்தக் கெட்டியான இருள் உடையும்போது சப்தமில்லாமல் அசைந்து கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை வெகு சமீபத்தில் அடைகிறேன்.

நீண்டதொரு சாலை எல்லைக்கோடுகளை கடந்து விரிந்து தாவர மேடு போல கிடக்கிறது. ஒவ்வொரு பேருந்தாக மேடுகளைக் கரைத்து மரணங்களைத் தூவுகின்றன. மரணம் ஒரு விதை போல நிலத்தின் அடிவேர்களாய் வளர்ந்து ஒரு இருளாக முளைக்கிறது. மீண்டும் ஒரு மஞ்சள் பேருந்து. அதற்குப் பிறகான சூன்யத்தில் சிறு கைகளும் இன்னும் சரியாக முளைக்காத கால்களுமாய் யார் யாரோ ஓடி வருகிறார்கள். மேடு இரைச்சல்மிக்க பிரதேசசமாக மாறுகிறது. சூன்யம் உடைய அங்குமிங்குமாக வீசப்படுகின்றன அதிகாலை என்கிற மௌனமும் மௌளனத்தைக் களைக்கும் ஒரு உரையாடலும்.

அதிகாலை உடையும் சாலை

அலாரத்தின் ஒலி காதுக்கு எட்டும்போது அப்பா முன்வாசல் கதவைத் திறந்துவிட்டு வெளியே நின்றிருப்பது தெரிந்தது. அனேகமாக சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்திருக்கக்கூடும். வீட்டின் நெருக்கமான பரப்பளவு மேலும் சுருங்கிப் போனது போல, கைக்கு அகப்படும் தொலைவில் எல்லாமும்.

கதவின் இடுக்கில் வெளி இருள் குளிர்ந்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. பின்கட்டு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்க நான் படுத்திருந்த அறையின் கதவு வெளியிலிருந்து கசிந்த அதிகாலை இருளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அப்பே பேருந்தில் ஏறும் நண்பர்கள் என்னைவிட 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க வேண்டும். அது வழக்கமாக நிகழும் ஒரு கட்டாயம். சரியாக 6.15க்கு கம்பத்தின் மேட்டுப் பாதையில் அப்பே பேருந்து வந்து நிற்கும். அதிகாலை இரைச்சலை ஏற்படுத்துவதற்காகவே ஒரு மிகப்பெரிய சீன மாணவர்களின் கூட்டம் அங்கு இருக்கிறது. 8.00 மணிக்கு தொழிற்சாலை வேலைக்குச் செல்பவர்களுக்கென்று தனியான
அலாரங்களோ கடிகாரங்களோ கிடையாது. அப்பே பேருந்து வந்தவுடன் உடையும் அதிகாலையின் அமைதி மட்டுமே அவர்களுக்கான விடியலின் முதல் புள்ளி. இரைச்சல்களும் வேகமாக ஓடும் கால்களின் சப்தங்களும் ஒரு கனவு தேசத்தின் சிதைவாக உறங்கிக் கொண்டிருப்பவர்களின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட உலகத்திலிருந்து அவர்களை மீட்டுக் கொள்ளும்.

“ புடாக் புடாக். .”

பெட்டிக்கடை கிழவன் முன்வாசல் கதவை திறந்துவிட்டு அரக்க பறக்க ஓடும் மாணவர்களைப் பார்த்து சில சமயங்களில் கெட்ட வார்த்தையில் திட்டுவான். சில சமயங்களில் அவனுக்குள்ளாக அது ஒரு முனகலாக புதைந்துகொள்ளும். அப்பே பேருந்து வந்தவுடன் அந்தக் கிழவனும் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வெளியே வைத்துவிட்டு கிளம்புவதற்குத் தயாராகிவிடுவான். அவனுக்கு அப்பே பேருந்துதான் அலாரம்.

தண்ணிமலை பேருந்து மிக நீளமானது. எங்கள் கம்பத்தில் நுழைய போதுமான இடவசதி இல்லையென்பதால் தண்ணிமலை அண்ணன் அங்கிருந்து மாணவர்களை ஏற்ற மாட்டார். ஒருமுறை பேருந்து தவறவிட்டதால், அம்மா பிடரியில் ஓங்கி அடித்து பெரிய சாலைக்கு இழுத்துக் கொண்டு போய் தண்ணிமலை அண்ணன் பேருந்தில் ஏற்றிவிட்டார்.

“சனியன். . பஸ்ஸ உட்டுட்டான். . ஏத்திட்டுப் போய்ட்டு விட்டுறங்கணே. . 1 வெள்ளி தந்துடறன்”

என் முன் சட்டை பையில் ஒரு வெள்ளியைத் திணித்துவிட்டு மீண்டும் பிடரியில் விழுந்த இரண்டாவது அடியுடன் தண்ணிமலை பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அந்தப் பேருந்து சரியாக 7.05க்கு எங்கள் கம்பத்தைக் கடந்து போவது பலருக்கு வசதியாக இருந்தது. பேருந்தைத் தவற்விடுபவர்களுக்கென ஒரு சேவை தண்ணிமலை பேருந்தில் கிடைத்தது. ஆகையால் பேருந்து தவறவிட்டாலும் விடுமுறை என்கிற மிகப் பெரிய சுதந்திரம் எங்களின் அதிகாலை கனவு போல வெகு சீக்கிரத்திலேயே களைந்துவிடும்.

எதிர்வீட்டில் உள்ள மாணிக்கம் அண்னனின் மகன் செல்வா பாதி உறக்கத்தில் அழுதுகொண்டே வாசலுக்கு வருவது கேட்டது. இந்தக் கம்பத்தில் எல்லோரையும்விட முதலில் விழிப்பவன் செல்வா. அவனுக்குரிய அலாரம் சரியாக 5மணிக்கு கதறும். அப்பொழுது நான் இரவின் கைகளுக்குள் ஆழ்ந்துகிடந்த பிரக்ஞையின் முதல் தடுமாற்றங்களுடன் விழிக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் உடல்வாகுவுடன் படுத்திருப்பேன். எனக்குள்ளிருந்து பாதி மங்கிக் கிடக்கும் சோம்பல் நெளிய துவங்கும் கணத்தில் செல்வா அதிகாலை குளிரைத் தனது உடலில் சரியவிட்டிருப்பான்.

அவன் வீட்டில் சுடுத்தண்னீர் கிடையாது. காலையில் தொட்டியில் குவிந்து கிடக்கும் தண்ணீரை அள்ளி உடலில் ஊற்ற வேண்டும். அவன் கைகளில் அதிகாலை நடுங்கிக் கொண்டிருக்கும். மெதுவாக இரவு முழுக்க வெளியே பரவிய குளிரை தனது மேற்பரப்பில் சேமித்து வைத்திருக்கும் தொட்டித் தண்ணீரைச் செல்வா அள்ளும்போது, குளிருக்கு கைகளும் கால்களும் முளைத்திருக்கக்கூடும். அதன் தீண்டலில் அவன் அழுவதை என்னால் பல சமயங்களில் கேட்க முடிந்தும் அதற்கு பதில் கொடுக்க இயலாத, அடுத்து விழிக்க போகும் எனது துர்சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பேன்.

மாணிக்கம் அண்ணன் காலை சந்தையில் மீன் வியாபாரம் செய்பவர். காலையில் 6.10 போலவே வீட்டிலிருந்து கிளம்பி தஞ்சோங் டாவாய் ஆற்று முகத்துவாரத்திற்குச் சென்றாக வேண்டும். காலை 7 மணி போல அங்கு மீன்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சுங்கைப்பட்டாணி காலை சந்தைக்கு ஓட வேண்டும். அவர் வந்து சேர்வதற்குள் பாதி சீனர்கள் அவர்களின் மீன்களைப் பேரம் பேசியிருப்பார்கள். மாணிக்கம் அண்ணனுடன் செல்வாவும் எழுந்துகொண்டு போகும் வழியில் அவனைப் பள்ளியில் இறக்கிவிட்டுவிடுவார். பள்ளியின் உள்வாசலுக்கு அருகில் இருக்கும் நீண்ட நாற்காலியில் கண்களுக்கு அகப்படாத ஓர் இருளுக்குள் அமர்ந்துகொண்டு உடலில் மீதமாகத் தேங்கிக் கிடக்கும் உறக்கத்தில் தொலைந்து மீண்டும் மீள்வதே அவனது நாட்கள்.

“ம்மா குளுருதும்மா. . நான் குளிக்கல”

அதிகாலை எப்பொழுதும் வீடு முழுக்க தனது குளிர்ந்த உடலை பரவவிட்டிருக்கிறது. கண்னாம்பூச்சி விளையாடும் குழந்தைகள் போல எழுந்த பிறகு எதிர்க்கொள்ளும் அதிகாலையுடன் போராட வேண்டியிருக்கிறது, ஒளிந்து கொள்ளவும் நேர்கிறது.

“உன் காலெ தரதரன்னு இழுத்துக்கிட்டு போய் தொட்டியில போட்ட தெரியும்” இது அம்மா. அவர் எழுந்ததும் தலையை வாரிக் கட்டிக் கொண்டு காலை பசியாறை சமைத்துவிடுவார். அடுப்பின் இன்னொரு அடுக்கில் எனக்கான சுடுத்தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.

“டே ஏஞ்சி வாடா. . தண்ணீ கொதிச்சிருச்சி, வெழாவ போறன்”

அப்பா இன்னமும் அதிகாலையின் மௌனத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மோட்டார் பட்டறையைச் சரியாக 6.30மணிக்குத் திறந்தாக வேண்டும். பட்டணத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் வேலைகளுக்குச் செல்லும் அதிகாலை மனிதர்களுக்கு அப்பா கண்டிப்பாகத் தேவைப்படுவார். பத்து டூவா பெரிய சாலையின் ஓரம் என்பது சாமர்த்தியான இருப்பு. காலையில் கல்லூரிகளுக்குச் செல்லும் பேராசியர்களின் கார் முதல் ஆசிரியர்களின் மோட்டார்வரை அவசரத்திற்கு பெட்ரோல் எண்ணை தேவையென்றால் உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு இயந்திரத்தின் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.

அப்பொழுதுதான் வானத்திலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கும் பகல். கடையின் வாசலில் லெண்டின் விளக்கை எரிய வைத்துவிட்டு அதிகாலை விலகுவதற்கு முன் உருவாகிக் கொண்டிருக்கும் சன நகர்வை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பார்.

“சுசி மணியாச்சி கெளம்புறேன்”

அப்பா கிளம்பும்போது நான் சிலுவாரை அணிந்துகொண்டு பாதி வெற்றுடலுடன் அறைக்குள் உறைந்து கிடந்தேன். மோட்டார் சத்தம் மெல்ல அகன்று தூரமாகும்வரை வெறுமனே நின்றிருந்தேன். தவுக்கே பேருந்தில் ஏறும் சீன மாணவர்கள் மௌனமாக என் அறையின் சன்னலைக் கடப்பது தெரிந்தது. அந்த தவுக்கே பேருந்தில் ஏறும் பல மாணவர்கள் பெண்கள்தான் என்பதால் எல்லோரும் காலையில் கிடைக்கக்கூடிய சிறு வெளிச்சத்திலேயே எதையாவது வாசிக்கத் துவங்கிவிடுவார்கள்.

10 நிமிடத்திலேயே முழுவதும் கிளம்பிவிட்டு புத்தகப்பையுடன் வெளியே வந்தேன். மணி சரியாக 6.40லிருந்து 6.45க்குள்தான் இருக்கும், மேட்டுப் பாதையில் மணியம் அண்ணன் பேருந்து வந்து நிற்கக்கூடிய நேரம். மேட்டுப் பாதையை அடைந்தவுடன் மிகப் பெரிய ஒரு ஹார்ணை அடித்துவிட்டு அதன் சத்தத்தின் அலைகள் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பலமான சத்தம்.

“சீக்கிரம் வாங்கடா! பாசாருக்குப் போற மாதிரி வருதுங்க பாரு. பிள்ளிங்களா பெத்துப் போட்டுருக்காங்க. . ஆங் ஆங் சீக்கிரம். . உடியாடா”

மணியம் அண்ணன் அவரது இருக்கையிலிருந்து எழுந்து தூரத்திலிருந்து வேகமாக பதற்றத்துடன் ஓடி வரும் எங்களைப் பார்த்துக் கத்தினார். எப்பொழுதும் இப்படித்தான் கத்துவார். இங்கிருந்து புறப்பட்டு சுங்கை ஈபோர் கம்பத்திலும் 4 மாணவர்களை ஏற்ற வேண்டும் என்பதால் அதிகாலையில் எல்லாம் அமைதிகளும் முதலில் மிகவும் வக்கிரமாக உடைவது மணியம் அண்ணன் பேருந்தில் வைத்துதான்.

“எவனாது எழுந்து தலையெ வெளிய நீட்டுனிங்கனா அறுத்துருவேன். . “

எல்லோரும் கால்கள் இரண்டையும் பெண் பிள்ளைகள் போல இறுக்கிக் கொண்டு அமர்ந்து கொண்டோம். வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அன்று ஐயா பிள்ளை சாப்பிட்ட நாசி லெமாக் பொட்டலத்தின் தாளைக் கசக்கி வெளியே எறிந்துவிட்டிருந்தான்.

“டே. . உங்கப்பனா வந்து கூட்டறான் ரோட்டெ. சிவராமன் மவந்தானே நீ? வெளுத்துருவாண்டா உன்னெ. எங்கடா பஸ்ஸு காசு? 25 வெள்ளி கொடுக்க வக்கு இல்லெ. .”
மணியம் பேருந்தில் 25 வெள்ளியைச் சரியான நேரத்தில் கட்ட முடியாத பல வக்கில்லாதவர்கள் இருந்தார்கள். மாதத்தின் ஆரம்பத்திலேயே 25 ரிங்கிட் கொடுத்துவிட்டு நீல நிற பாஸ் புத்தகத்தில் மணியம் அண்னனின் கையெழுத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

“எல்லாம் கடன்காரனுங்களா வந்து சேந்துருக்கானுங்க!”

என் வீட்டு பின்புற வரிசையில் இருக்கும் காந்தராவ் பயத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு நாற்காலி தள்ளிதான் தனது முகத்தைக் காட்டாதவாறு பதுங்கிக் கொண்டிருந்தான்.

“யேண்டா?”

“பஸ்ஸு காசு எடுத்து வரலடா. .”

“நாளைக்குக் கட்டிக்கயேன்”

“உஷ்ஷ்ஷ். . “முருகா! இன்னிக்கு பஸ்ஸு கார அங்கிள் தூக்கி வெளிய எறிஞ்சிர மாட்டாரே?”

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவனைப் பேருந்தின் படிக்கட்டுகளின் மீது வைத்தே திட்டினார் மாணிக்கம்.

“ரோசம் இருந்தா. . 2 மாச காசு இன்னும் தரலே. கொண்டாந்து கொடுக்க சொல்லு. நாளைக்கு எடுத்து வரலே பஸ்லேந்து தூக்கி வெளிய வீசிருவேன் உன்னெ. புரியுதா?”

அவனது முகத்தில் தெரிந்த அவமானத்தின் சாயல் அவ்வளவு உக்கிரமானவை இல்லையென்றாலும் அன்று முழுவதும் ஒரு முதிர்ச்சிக்குரிய அழுகையுடன் தனியாகத் திரிந்து கொண்டிருந்தான். இன்றும் அவனுக்கு பணம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு கணமும் மணியம் அண்ணனின் கடுமையான வார்த்தைகளுக்கும் அந்த வார்த்தைகள் அவனைத் தூக்கி வெளியே வீசப் போகும் தருணத்திற்கும் மத்தியில் ஒரு திடப்பொருள் போல இறுகியிருந்தான்.

அதிகாலை இன்னமும் பின் தொடர்ந்தது. பள்ளியில் இறங்கும்போதுதான் இலேசாக விடிந்திருக்கும். சிங் தாத்தா பள்ளியின் வாசல் கதவைத் தரதரவென தள்ளிக் கொண்டும் சாத்திக் கொண்டும் அதிகாலை இரைச்சலின் கடைசி வருகையென நகர்ந்து கொண்டிருப்பார்.

பள்ளியின் வளாகத்தில் பேருந்து நுழைந்ததும், திடலின் வெகு தொலைவான மௌனத்திலிருந்து சிறுக சிறுக விடைப்பெற்றுக் கொண்டிருந்த இருளைப் பார்க்க முடிந்தது. எல்லோரும் இறங்குவதற்கு வரிசைக்கட்டி நின்றோம். தவறுதலாக காந்தராவ் வரிசையின் முதல் இடத்தில் நின்றிருந்தான். பேருந்து நின்றதும் இறங்கி ஓடி விட வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவு அவனை அவசரப்படுத்தியிருக்கக்கூடும்.

“டே. . கடன்கார பையா. .ஒளிஞ்சிக்கிட்டு ஓடப் பாக்கறியா?”

மணியம் அண்ணன் பேசி முடிப்பதற்குள் பதற்றத்தின் உச்சத்தில் இடறிய காந்தராவ் தடுமாறி பேருந்திற்கு வெளியே விழும்போது, கடைசியாகப் பார்த்த அவனது முகமும் விழுவதற்கு முன்பான யாருக்கும் கேட்காதபடிக்கு தவறிய அவனது சொற்களும், நடக்கப் போகும் அசம்பாவிதத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தனது உடலை நகர்த்தி வெளிச்சத்திற்குச் சௌகரிகமான இடமளித்திருத்துக் கொண்டிருந்த அதிகாலையின் கரைதலில் தொலைந்துபோயின.

உடைய மறுக்கும் அதிகாலை

இன்றும் அதிகாலை வருகிறது. உடலைத் தீண்டும் பனி கூட்டம் யாருக்கும் தனது பிம்பத்தைக் காட்டாமல் கரைந்துவிடுகிறது. முன்வாசல் பக்கமாக வந்து நிற்கும் போது சுற்றிலும் விரிந்துகிடக்கும் இரும்பு காடுகளின் மீது படர்ந்து தோல்வியுற்று உடையாமல் காந்தராவின் மரணத்தைப் போல அல்லது ஓர் அதிகாலையில் மரணித்த அப்பாவின் நினைவுகள் போல ஒரு திடப்பொருளாக மாறிவிட்ட அதிகாலையைப் பரிதாபமாக மட்டுமே தரிசிக்க முடிகிறது.

அப்பே பேருந்தோ தவுக்கே பேருந்தோ மணியம் பேருந்தோ, இப்பொழுது எங்கே ஓடிக் கொண்டிருக்கும்?

நன்றி: மாத இதழ் உயிர் எழுத்து(மே) இந்தியா
              அநங்கம் காலாண்டிதழ் மலேசியா (டிசம்பர்)


ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Wednesday, June 23, 2010

அடுத்து வரப்போகும் பிரதிகள்

எனது வலைத்தலத்தில் விரைவில்(தாமதமும் ஆகலாம்) பிரசுரமாகப்போகும் பிரதிகள் பின்வருமாரு:

1. சுயத்தம்பட்டமும் பின்நவீனகோமாளி எம்.ஜி.சுரேஸும்
( எம்.ஜி அவர்களின் அறிவானது ஆங்கிலேய பின்நவீன ஆளுமைகளின் பிரதியின் மூலம் உருவாக்கப்பட்ட மிகப் பிழையான ஒரு பிதற்றல்)
(அவர் பின்நவீனம் என்கிற குறியீட்டில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு சாதாரண கலாச்சார அதிகாரி அல்லது ஒழுக்கவாதி)
(வெறும் பின்நவீன பிரதிகளைப் பாடமாகப் படித்து வளர்ந்த சிறுபிள்ளை எம்.ஜி க்கு இந்த அறம் என்ற வார்த்தை தெரிந்திருப்பதே பெரிய விஷயம் என்பதால் அவரை மன்னித்துவிடலாம்) . . . இன்னும் பல பக்கங்களுடன்.

2.மலேசிய திரைப்பட ஆளுமையான மறைந்த யஸ்மின் அமாட் அவர்களின் கடைசி சினிமாவின் திரைவிமர்சனம்

3. புலம் பெயர் அரசியலைக் கேலி செய்யும் குடியேறி எனும் அடையாளத்திற்குள் ஒளிந்து விளையாடும் சிங்கப்பூர் "புனைவர்" லஷ்மி

4. சிறுகதை: மூன்றாவது முறை கதவைத் தட்டும்பொழுது

காற்பந்து பருவம் எனக்கான நேரத்தைச் சுரண்டிக் கொள்வதால் மேற்கண்ட பிரதிகள் எப்பொழுது பிரசுரமாகும் என்கிற கேள்விகளுடன். . .

மேலும்: அநேகமாக இந்தத் தடவை அர்ஜெண்டினா அல்லது பிரசில் (காகா எனும் விளையாட்டாளரை இழந்துவிட்டதால்- சந்தேகம்தான்) அல்லது போர்த்துகல் இதில் ஏதாவது ஓர் அணி உலகக் காற்பந்து கோப்பையை வெல்ல வாய்ப்புண்டு என உங்களுடன் சேர்ந்து இந்த அனுமானிக்கும் வித்தையில் நானும் கலந்துகொள்கிறேன்.Goal Goal. . . .

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Saturday, June 19, 2010

திரைவிமர்சனம்: ராவணன்: காவிய மறுப்புனைவும் புனைவை மீறாத விவாதமும்

‘வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்,வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்’

பல சைவசமயத் தேவாரப் பாடல்களில் மட்டுமே இராவணனைப் பற்றிய உயர் மதிப்பீடுகளைக் காண இயலும். தென்னிந்தியர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய ஊடுருவல் ஆரியர்களின் ஆதிக்க விரிவாக்கமும் தென்னிந்தியர்களின்(திராவிடர்கள்) கலாச்சார வெளிகளை அபக்கரித்தலும், திராவிட நிலப்பின்புலங்களை அழித்தலும் என விமர்சிக்கப்படுகிறது. இன்றும் இராவணனை அரக்கனாகவும் அசுரனாகவும் பத்து தலை நிரம்பிய கொடியவனாகவும் சித்தரிக்கும் இராமயணக் காவியத்தை வடநாட்டு ஆரியர்கள் அந்தத் தென்னிந்திய நிலத்தையும் மக்களையும் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கும்; ஒடுக்கவும்; அடிமைப்படுத்தவும் புனைந்துள்ளார்கள் என்கிற சர்ச்சை நிலவுகிறது.

இராமயாணக் காவியத்தை முழுவதும் எந்தப் பக்கமும் சாராமல் அந்தப் பிரதியை அணுக நேர்ந்தால், அது முழுக்க ஆணாதிக்க சமூகத்தை வளப்பட செய்யும் அதிகார குரல்களை ஆங்காங்கே நிறுவப்பட்ட ஒரு பிரதியாகவும் பெண்களை மீட்பதும் பரிசோதிப்பதுமான கருவியாகப் பாவிக்கப்பட்டிருப்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்தக் காவியத்தைப் படித்து வளர்ந்த பின்விளைவுகளை இன்றைய சமூக நடப்பிலும் பல விடயங்களில் மறுமதிப்பீட்டின் மூலம் உணர வாய்ப்புண்டு. இராமாயணத்தை ஒரு பக்தி குறீயீடாகவும் அழித்தல் கடவுளின் ஆன்மீக வருகையின் பதிவாகவும் அதை மிக நுணுக்கமாக வழிப்படுதலுக்குரிய கருவியாகத் தென்னிந்திய மக்களுக்கு வழங்கியவர்கள் ஆரியர்கள் எனும் சர்ச்சையும் தொடர்ந்து திராவிட உணர்வுடையவர்களால் முன்வைக்கப்படுகிறது.

இராவணன் அன்று:

இலங்கை மண்ணைச் செழிப்புமிக்க தேசமாகவும் வளமிக்க பூமியாகவும் வளர்தெடுத்த சிறந்த அரசன் எனவும் கலைகளில் சிறந்த தேர்ச்சியுடைய மன்னனாகவும், பக்தி மிகுந்த சிவப்பக்தனாகவும் முக்கியமான சில பதிவுகளில் இடம்பெற்றுள்ளன. மேலும் திராவிட விவாதங்களிலும் இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆனால் இராவணனை (தென்னிந்திய மண்ணின் அரசனை) ஒரு ஆன்மிக புனைவாக மட்டுமே இராமாயணத்திற்குள் நுழைத்து அவனுக்கு ஏற்பட்ட மரணத்தையும் நியாயப்படுத்தும் இடமானது ஆரியர்களின் மிக முக்கியமான திட்டம் என்றே சொல்லலாம். ஆகையால்தான் இராவணனை இதற்கு முன்பே மகா விஷ்ணுவின் அவதாரத்தால் கொல்லப்பட்டு இறந்துபோன இரன்ய கசிப்புவின் இன்னொரு அவதாரம் எனவும், இவன் முன்பே சனாதன முனிவர்களால் சபிக்கப்பட்டவன் என்றும் அந்தப் பிறவி கடனைத் தீர்க்கவே கொடியவர்களாக அவதாரங்கள் எடுத்து 7 முறை மகா விஷ்ணுவால் கொல்லப்பட்டு மீண்டும் வைக்குண்டம் அடைவான் எனவும் இன்னொரு புனைவு இராவணின் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவை யாவும் வரலாற்றில் இராவணன் குறித்து திணிக்கப்பட்ட கட்டமைப்புகளா? அல்லது புராணம் என்பதே வெறும் கட்டுக்கதைகளின் கோர்வையா? அல்லது பார்ப்பன வெறியைத் தென்னிந்தியாவில் பரப்புவதற்காகப் பக்தி எனும் அடையாளத்தின் மூலம் விரிவாக்கப்பட்ட புனைவு பிரதியா?

இதைத் தொடர்ந்து விவாதித்தால், வழக்கமாக நிகழ்ந்தும் நிகழ்ந்து சலித்துப் போன கடவுள் இருக்கிறாரா என்கிற சந்தேகத்தில் முடிந்துவிடும் எனும் எண்ணமும் தோன்றுகிறது. ஆனால் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த ஒரு தமிழன். வடநாட்டு பக்தி பிரதிகளில் இராவணன் கேலிக்குரிய 10 தலை அசுரனாகக் காட்டப்பட்டிருப்பதும் உண்மை. மேலும் இராமன் என்கிற கடவுளின் அவதாரத்தால் அவன் கொல்லப்படுவதுதான் தர்மம் எனவும் நியாயம் வலுவாகக் கற்பிக்கப்பட்டு நிறுவப்பட்டிருப்பதும் உண்மை.

மனிரத்னத்தின் ராவணன்:

சிதைக்கப்பட்ட தென்னிந்தியாவின் தொன்ம அடையாளத்தைத் தனது படத்தின் மூலம் மீட்க முயலும் ஒரு முயற்சியைத் செய்திருக்கிறார். வரலாற்றையும் புரானத்தையும் காவியத்தையும் மறுபுனைவு செய்து பார்ப்பதில் மனிரத்னத்திற்குத் தனித்த ஆளுமையும் அடையாளமும் தமிழ் சினிமாவில் இருக்கிறது. வரலாற்றை மீட்டுணர்ந்த படமாக இருவர் படத்தையும், காவியத்தை மறுபுனைவு செய்த தளபதி படத்தையும் குறிப்பிடலாம். அதே களத்துடன் பார்ப்பன பிரதிகளில் கொடியவான சித்தரிக்கப்படும் இலங்கை மண்ணைச் சேர்ந்த இராவணனை மீள்புனைவு செய்து அவனைத் தென்னிந்திய வரலாற்றின் முக்கியமான அடையாளமாகத் திராவிட மனங்களுக்குப் புது தெம்பை அளிப்பது போல மீட்டெடுத்திருக்கிறார் மனிரத்னம்.

காட்டுவாசிகளின் நாட்டாமையாகவும் அவர்களுக்கு நல்லது செய்யும் நாட்டாரியல் கதைநாயகனுக்குரிய அடையாளமாகவும் விக்ரம் வீராசாமியாகப் படைக்கப்பட்டுருக்கிறார். (நாயகன் படத்தின் கமலை மீண்டும் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு மட்டுமே எழுகிறது) வீராசாமியின் தங்கை பிரியாமணியின் திருமண நிகழ்வில் சலசலப்பை ஏற்படுத்துவதோடு, அவனைக் கழுத்திலும் சுட்டுவிடுகிறார்கள் காவல் படை(பிருத்திவிராஜ் தலைமையில்). மேலும் பிரியாமணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுக்க மாற்றி மாற்றி கற்பழித்துவிடுவதோடு அவளின் தற்கொலைக்கும் காரணமாகிவிடுகிறார்கள். காட்டுவாசிகளின் மீதான அதிகாரிகளின் ஒடுக்குமுறையைக் கண்டிக்கும் வகையில் பிருத்திவிராஜ் என்கிற உயர் அதிகாரியின்( புராணப்படி இவர்தான் இராமன்) மனைவியைக் கடத்துகிறான் ராவணன்.

வனத்தினுள் அவளைக் கடத்திச் செல்லும் ராவணனைப் பின்தொடர்ந்து விரட்டுகிறது காவல்படை. படம் முழுவதும் வளம் மிகுந்த அடர்ந்த வனத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த வனத்தில் (அசோக வனமாகவும் கற்பித்துக் கொள்ளலாம்) சீதையின் கதைப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் ராவனணனுக்கும் இடையில் நிகழும் உரையாடலும் உணர்ச்சி போராட்டமும் இராமாயணத்தில் புனையப்பட்ட ஒழுக்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக நிகழ்த்தப்படுகிறது. இராமாயணத்தில் இறுதிவரை மாசுப்படாத கதைப்பாத்திரமாகச் சீதை படைக்கப்பட்டிருப்பதைக் கொஞ்சமும் தனது திரைப்படத்தில் சிதைக்காமல், கடத்திச் செல்லும் விம்ரமின் சுண்டு விரல்கூட அவள் மீது படாதவாறு அமைத்து சமூகம் நம்பியிருக்கும் ஒழுக்கக் குறியீட்டைக் காப்பாற்றியுள்ளார் மணி.

ஆனால், ஐஸ்வர்யாவின் வீரத்தையும் தற்கொலை முயற்சியின் காட்சியையும் நேரில் கண்டு பதறும் ராவணனுக்கு அவள் மீதான உணர்வு மாறுப்படும் இராசயண தருணத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். ஓர் அதிகாரியின் மனைவி என்கிற பிம்பம் களைந்து அவளின் புற உலகத்தைச் சூன்யமாக்கிவிட்டு, அவளை தன் மனதைச் சலனப்படுத்திய ஒற்றைப் பிம்பமாக ராவணன் தரிசிக்க முயல்வதோடு தனக்குள் இருக்கும் வளர்க்கப்பட்டிருக்கும் ஒழுக்க அமைப்புடனும் போராடுகிறான். (சூர்ப்பநகைத் தாக்கப்பட்டதன் மூலம் கோபமுறும் இராவணன் இராமனைப் பழி வாங்குவதற்காகச் சீதையைக் கடத்தி வருவதோடு அவளின் அழகிலும் மயங்கிவிடுவதாகப் புராணம் சொல்கிறது) ஆனால் புராணத்தில் எவ்விடத்திலும் ஒழுக்க ரீதியில் இராவணன் தனக்குள் போராடுவதை அல்லது சீதையின் மீது ஏற்பட்ட உணர்வைத் தர்க்கம் செய்வது போன்ற கதைகள்/சந்தர்ப்பங்கள் இடம்பெறவில்லை. இப்படத்தில் மணிரத்னம் மாற்றான் மனைவியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை உணர்வைத் தொடர்ந்து அகப்பிரச்சனையாக, அகப்போராட்டமாக அதைக் கடைசிவரை மீறாத படைப்பாகக் காட்டியிருக்கிறார். அதாவது குற்றம் இழைத்தவன் இராவணன் என்கிற பழி சுமத்தலுக்கு எதிராக மறுபுனைவின் மூலம் இராவணன் உண்மையில் நல்லவன் என்கிற செய்தியைச் சொல்ல முற்படுகிறார் என்பதாகப் படத்தைப் புரிந்துகொள்ளலாம்.

ஒளிப்பதிவும் கதைக்களமும் கலையும்

இப்படத்தில் ஒளிப்பதிவையும் கலையையும் தனித்துவமான பலமாகவும், படத்தின் கருவை மெய்ப்பிக்கும் யதார்த்தங்களை மீறாத உணர்வாகவும் அடையாளப்படுத்தலாம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இப்படத்தில் விருதுக்குரிய மதிப்பீடுகளையும் கடந்து ஒரு வனத்தின் வாழ்வை இதுவரை தமிழ் சினிமாவில் காணாத இயற்கையின் பரிணாமங்களை முன்வைக்கும் மிக முக்கியமான முயற்சியாக உணர முடிகிறது. இன்னமும் அந்தக் காட்டுவாசிகளின் வனத்தின் அடர்ந்த உலகத்திலிருந்து மீள முடியாத ஒரு நெருக்கமான புலனைக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அவரின் காட்சி பதிவுகள் பலரைப் பிரமிக்க வைக்காமல் போயிருக்கக்கூடும். எந்த இடத்திலும் தமிழ் சினிமாவில் இடம்பெறும் வழக்கமான காட்சி அமைப்புகளும் ஒளிப்பதிவும் அதிரடியும் இல்லாமல், ஏதோ ஒருவகையில் நம் புருவங்களை உயர்த்த செய்யும் அசாத்திய காட்சிகள் படம் முழுக்கப் பயணிக்கின்றன.

குறிப்பாக நதிக்கு நடுவில் பாதி உடைந்து நீளமாகப் படுத்திருக்கும் மகா விஷ்ணுவின் கருமையான சிலையும், அதன் மீது தெறித்து வீழும் நதியின் சாரலும், அந்தச் சிலைக்கு முன் நின்று தன்னை இன்னமும் காப்பாற்றி வைத்திருக்கும் இந்தக் கோபத்தை என்னிடமிருந்து பறித்துவிடாதே என மன்றாடும் ஐஸ்வர்யாவும், ஒரு சாரல் போல மனதைச் சலனிக்கச் செய்கிறார்கள். தொடர்ந்து ஐஸ்வர்யா மலை உச்சியிலிருந்து நீர்பாதாளத்தை நோக்கி குதிக்கும் காட்சி எந்தத் தொழில்நுட்ப ஒப்பனைகளும் நெருடலை ஏற்படுத்தாத வகையில் பதிவு செய்திருக்கிறார்கள். அவருடன் சேர்ந்து பார்வையாளர்களும் நீர்வீழ்ச்சியைப் போல பாதாளத்தில் குதிப்பது போன்ற அனுபவம் ஏற்படும். இது காமிராவின் அசைவும் நகர்வும் கையாளப்பட்டிருக்கும் விதத்தின் திறமையைக் குறிக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய கலை குழு, வனத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் காட்டுவாசிகளின் குடியிருப்பு பகுதிகளை அதே போல உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். காட்டுவாசிகளின் நடவடிக்கைகளையும் வாழ்விடங்களையும் கலை ஆய்வின் மூலம் அறிந்துகொண்டு பதிவாக்கியதாகப் புரிந்துகொள்ள நேரிடும். மழை நேரத்தில் காட்டுவாசிகளின் இருப்பிடத்திற்குள் நுழையும் அதிகாரிகளின் கொடூரமான செயல்களை அதன் உக்கிரம் குறையாமல் அதிகாரத்தின் தொனிக்கு பிரேம் போட்டு காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குனர்.

பின்னனி இசையும் பாடல்களும் வழக்கமாக ரஹ்மான் அவர்களின் இசை தனித்துவத்தை மீண்டும் வழங்கியிருக்கிறது. குறிப்பாக பின்னனி இசை காட்சியுடன் இயந்து யதார்த்தத்தையும் காட்சியின் உணர்வையும் புரிந்துகொண்டு சம அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பாடல் சீடியில் இடம்பெறாத ரஹ்மான் பாடிய படத்தின் இறுதி பாடல் படம் முடிந்தும் ஒருவித துன்பத்தின் கொண்டாட்ட உணர்வை உள்ளுக்குள் ஏற்படுத்துவது போல தோன்றுகிறது.

இரு தேசிய விருது பெற்ற நடிகர்களும் இடம் பெறும் ஒரு காட்சி ராவணன் படத்தில் தவிர்க்க முடியாத வலியைத் தருவதாக அமைந்திருக்கிறது. காவல் அதிகாரிகளால் பலமுறை கற்பழிக்கப்பட்ட பிரியாமணியும் விக்ரமும் பேசுவதாக இடம்பெறும் அக்காட்சியில், கொஞ்சம் நேரம் என்றாலும் இருவரும் மிகச்சிறப்பான அலட்டல் இல்லாத நிதர்சன உணர்வுகளையும் முகப்பாவனை மூலம் உணர்வை உந்தி வெளித்தள்ளும் விதத்தையும் செய்து காட்டி அசத்திவிட்டார்கள்.

படத்தில் புகுத்தப்பட்டிருக்கும் அரசியல்:

இருவர் படத்தின் மூலம் திராவிட அரசியல் கட்சிகளின் வளர்ச்சியையும் அந்தக் கட்சியின் மூலம் வளர்ந்த இரு முக்கியமான பிம்பத்தையும் காட்டி, இது வெறும் கற்பனை கதை என நழுவிய மணியின் அரசியல் பிரயோகம் இப்படத்திலும் இராவணுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுருக்கிறது. இப்படத்தில் ராவணன் ஐஸ்வர்யாவைக் கடத்துவதற்குப் பிரியாமணிக்கு நிகழ்ந்த கொடூரம்தான் காரணம் எனப் புரிந்துகொண்டு வெளிவருகையில், காட்டுவாசிகளின் மீது தொடுக்கப்படும் அதிகாரிகளின் அதிகார நடவடிக்கைகளையும் மேட்டுக்குடி மக்களுக்கு கீழ்தட்டு மக்களின் மீது இருக்கும் ஒடுக்கும் மனபான்மை குறித்தும் படத்தில் பேசப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் தவறுவதற்கும் வாய்ப்புண்டு. படம் பார்த்த சிலரிடம் படத்தைப் பற்றி கேட்டபோது இதைப் பற்றி யாரும் சிறிதளவும் குறிப்பிடவில்லை.

குறைகள்: நிறைய இடங்களில் நெருடலாகவும் சில இடங்களில் நகைச்சுவைகளாகவும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பழைய நடிகரான கார்த்திக்கை அனுமானாகக் காட்ட வேண்டும் என்கிற வெறியில் அவரைக் குரங்கு போல அங்குமிங்கும் தாவவிட்டு அவரின் மீதான மதிப்பைக் குறைக்கும்படி படைக்கப்பட்டிருப்பது நெருடலாக அமைந்திருக்கிறது. மேலும் ராவணன் கதைப்பாத்திரத்திற்குக் கொடுக்கப்பட்ட கவனமும் நேரமும் காட்டுவாசி மக்களின் வாழ்க்கைமுறையின் மீதும் அவர்களின் வன வாழ்வின் மீதும் காட்டி கதைக்களத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கலாம்.

மேலும் ராவணன் சில இடங்களில் காவல் அதிகாரிகள் தேடும் மக்களுக்கான நாட்டாமையாக மட்டுமே மிளிர்கிறார். சில இடங்களில் ஏற்கனவே பார்த்து சலித்துவிட்ட பிதாமகன் விக்ரம் போல தெரிகிறார். பிருத்திவிராஜ் கதையுடன் சற்றும் பொருந்தாமல் தள்ளி நின்றிருப்பதை உணர முடிகிறது. மீசை வழித்த அழகான வாலிபன் போல, காதல் படங்களின் கதைநாயகன் போல வலம் வருவதாகத் தோன்றுகிறது.

“நான் ஒடுக்கப்பட்ட கிராமத்தான்” எனும் வசனத்தை ராவணன் குறிப்பிடுவதைக் கொஞ்சம் வரலாற்றை நோக்கி பின்னுக்கு நகர்த்தினால், இலங்கை மண்ணைச் சேர்ந்த ராவணனையும் இன்றளவும் பாசிச அரசினால் கடுமையான ஒடுக்குதலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளான கொலைநிலமாகக் கருதப்படும் இலங்கையும் தமிழர்களையும் நினைவுப்படுத்த முடிகிறது. இறுதி காட்சியில் ராவணன் காவல் அதிகாரி படைகளால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டு மலையின் உச்சியிலிருந்து சரிந்து விழும் காட்சி, வரலாற்றில் தமிழன் எப்பொழுதுமே ஒடுக்கப்படுவான் அல்லது கொல்லப்படுவான் என்கிற நிதர்சன வலியை உணர்த்தி மனம் முழுவதும் பரவி நேர்மையற்ற அரசியலையும் அதிகாரத்தையும் காட்டுகிறது. கணத்த மனதுடன் அந்த உண்மையைச் சுமந்து கொண்டு வெளியில் வரநேர்வதன் கையறுநிலையை வேறு எப்படிச் சொல்வது?

ராவணனைப் படைக்க விரும்பிய மணிரத்னம், அந்தப் பாத்திரத்தைக் காவிய பிம்பமான இராவணனை மீட்பதாக மறுபுனைவு செய்தும், ஆதி புனைவின் ஒழுக்கத்தை மீறாமல் மறுபுனைவையும் அதே போல படைத்து நியாயப்படுத்தியும் அது வெற்றிப் பெறாதது போன்ற விமர்சனத்தையே தருகிறது. ராவணன் வெறும் முயற்சி மட்டுமே.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா



Wednesday, June 16, 2010

கவிதை: சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்

எப்பொழுதும் போலவே
இன்றும்
கிழக்குக்கரையைப் பற்றிய
ஒரு கதை
அடித்துச் சென்றது
சுங்கை நதியில்.

அநேகமாக
கிழக்குக்கரையிலுள்ள
அஞ்சலைப் பாட்டி
இறந்திருக்கக்கூடும்
அல்லது இன்று
கூடுதலான
மலம் கழிக்கப்பட்டிருக்கும்.

மீண்டும்
மழைக்காலத்திற்குப் பிந்தைய
ஒரு அதிகாலையில்
அடர்ந்த கதைகளுடன்
முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது
யாருமற்ற தனிமையில்
சுங்கை நதி.

தவுசே சீனக் கிழவியின்
வீட்டின் மூன்றாவது
கால் இடறி
வீட்டை முழுங்கிய
ஒரு செய்தியை
எப்படிக் கதையாக
மாற்றக்கூடிய சாமர்த்தியம்
வாய்த்திருக்கும்
சுங்கை நதிக்கு?

அம்மோய் அக்காவின்
குடிக்கார கணவன்
எப்படி ஒரு கதைக்குள்
தவறி விழுந்து
இறந்திருக்கக்கூடும்?

வரிசையாக நின்று
சுங்கை எனும் கதைக்குள்
மூத்திரம் பெய்த சிறுவர்களில்
இருவர்
ஒரு மழைக்காலத்தில்
கதையிலிருந்து நீங்கிவிட்டதன்
சோகத்தை எப்படி
புனைந்திருக்கும்
சுங்கை நதி?

மீண்டும்
ஒரு அதிகாலை.
யாருக்கும் சொல்ல வேண்டாம்
என்கிற வெறுப்பில்
எல்லாம் கதைகளையும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
இரகசியமாய் நகர்கிறது
சுங்கை நதி.

வெளியே தெரிந்த
இறந்தவர்களின் கைகளில்
ஒட்டிக் கொண்டிருந்த
வறுமையும் கிழக்குக்கரையின்
சோகமும்
எப்படியும் வெளிப்பட்டன
மையமில்லாத வெறும் கதைகளாய்
அர்த்தமற்ற வெறும் நிகழ்வாய்
கதைப்பாத்திரங்களை இழந்த
வெறும் சூன்யமாய்.

சுங்கை நதி
எந்தச் சலனமுமின்றி
அடுத்த மழைக்காலம் வரும்வரை
தனக்குள்ளே பயணிக்கத் துவங்கியது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.

Wednesday, June 9, 2010

சினிமா விமர்சனம்(ஸ்பானிஷ் திரை) : Cell 211 / குற்றம் என்கிற அறையின் மௌனம்

நம்மில் பலர் ஒரு சுற்றுப்பயணியாகக்கூட சிறைச்சாலைக்குச் சென்றிருக்க மாட்டோம். எனக்குத் தெரிந்தவர்களில் பலர், சிறைச்சாலையைத் தூரத்தில் இருந்து ஒரு பார்வையில் கடந்துவிட்டுப் போகக்கூடிய மனநிலையிலேயே இருக்கிறார்கள். சிறையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் முள்வேலியைப் போல சிறை குறித்து நமக்கிருக்கும் எண்ணமும் பார்வையும்கூட கரடுமுரடாகத்தான் இருக்கின்றன. என் வகுப்பு மாணவர்களிடம் சிறை என்றால் என்னவென்று கேட்டிருந்தேன். பின்வரும் பதில்கள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன.

1. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இடம்
2. தங்களின் குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டனையை அனுபவிக்கும் இடம்
3. பாவம் செய்தவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடம்
4. சமூகத்திற்கு ஆபாத்தானவர்களை அடைத்து வைத்திருக்கும் இடம்
5. தவறு செய்தவர்களை அடைத்து வைத்து தண்டிக்கும் இடம்

மாணவர்கள் சுயமாக சிறையைப் பற்றிய இந்தப் புரிதல்களைப் பெற்றிருக்கவில்லை, அவர்களுக்கு வலிந்து கற்பிக்கப்பட்டிருக்கிறது. சிறையையும் குற்றவாளிகளையும் காட்டி பிள்ளைகளை மிரட்டி வளர்க்கும் பெற்றோர்களே இங்கு அதிகம். சிறை என்பதே அடைக்கப்பட்டு தண்டிக்கப்படும் கொடூரமான குறியீடாக எல்லோர் மனதிலும் மிக வலுவாகப் பதிக்கப்பட்டிருப்பதால், சிறையிலிருந்து வெளியேறும் ஒருவனை இன்னமும் குற்றவாளியாகவே பார்க்கும் மனநோய்க்குப் பலர் ஆளாகியிருக்கிறோம். அந்தக் கொடூரமான ஒரு குறியீட்டின் வலியையும் அதனிலிருந்து மீள முடியாத தவிப்பு மனநிலையையும் மிகச் சிறப்பாகச் சொல்லும் படம் தான் ஸ்பானிஷ் திரைப்படமான “சிறை எண் 211”.

சிறை எண் 211இல் இதற்கு முன்பு 4 கைதிகள் கொடூரமான முறையில் மரணித்திருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியில் சிறை எண் 211-இல் உள்ள ஒரு குற்றவாளி கைகளை அறுத்துக் கொண்டு, தனது குருதியைச் சொட்டவிடுவது போன்ற அழுத்தமான சூழ்நிலை காட்டப்படுவதுடன் படம் துவங்குகிறது. குற்றவாளிகளின் உலகம் வலிகளாலும் இறுக்கமான மனநிலையினாலும் தவிர்க்க முடியாத புறக்கணிப்பின் கொடூரத்தாலும் கட்டப்பட்டவை என்கிற உண்மையைச் சொல்லும் வகையில் வித்தியாசமான புரட்சிக்கர வெளிப்பாடாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருண்ட வேரை நோக்கிய பதிவாக இப்படத்தைக் காணலாம்.

ஜூவான் என்கிற புதிய சிறை அதிகாரி தனது பணியைத் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பே அந்தச் சிறைக்கு வருகிறான். அவனுடன் சக அதிகாரிகளும் சிறை கைதிகளைப் பற்றியும் சிறை தொடர்பான அனுபவங்கள் சட்டத்திட்டங்கள் போன்றவற்றையும் பகிர்ந்துகொண்டே, மூவரும் சிறைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். அந்த நேரம் பார்த்து சிறையின் முதலை என அடையாளப்படுத்தக்கூடிய Malamadre எனும் பழைய கைதி ஒருவன் அதிகாரி ஒருவனைத் தாக்கிவிட்டு சிறையைத் தனது ஆக்கிரமிப்பிற்க்குள் கொண்டு வருகிறான். அதிகாரியிடமிருந்து பறிக்கப்பட்ட சாவியின் மூலம் எல்லாம் சிறைக்கதவுகளையும் திறந்துவிடுகிறான்.

திடீரென தலையில் காயப்படும் ஜூவானை சக அதிகாரிகள் காலியாக இருக்கும் சிறை எண் 211-க்குக் கொண்டு செல்கிறார்கள். அரை மயக்கத்தில் இருந்த அந்தப் புதிய அதிகாரியை அங்கேயே போட்டுவிட்டு வேறு வழியில்லாமல் இருவரும் தப்பித்துவிடுகிறார்கள். இப்பொழுது சிறை முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலிருந்து குற்றவாளிகளின் ஆக்கிரமிப்பிற்குள் வருகிறது. ஜூவான் எனும் இந்தப் புதிய அதிகாரி மட்டும் உள்ளே சிக்கிக் கொள்கிறான். அவன் அந்தக் குற்றவாளிகளின் உலகத்தினுள் நுழையும் விதமும் அவர்களைப் புரிந்துகொள்ளும் விதமும் மிகவும் அபாரமான அரசியல் கற்பனை ஆகும்.

ஏற்கனவே ஒருமுறை அந்தச் சிறை இதே போல கைதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பல அதிகாரிகளும் பிணை கைதிகளும் கொல்லப்பட்டுருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணமானவன் இந்த மாலமட்ரே தான். குற்றவாளிகளுக்குள் அதிகாரத்திற்கு எதிராக வளர்ந்திருக்கும் ஒட்டுமொத்த வெறுப்பின் அடையாளம் அவன்தான். ஆகையால் ஏற்கனவே அந்தச் சிறையில் பதிந்துள்ள கசப்பான அனுபவமும் வரலாறும் அதிகாரிகளைப் பயமுறுத்துகின்றன. குற்றவாளிகளிடம் சிக்கிக் கொண்ட ஜூவானைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உரையாடல் அதிகாரிகளின் மத்தியில் சலனத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் அவர்கள் சிறை முழுவதும் பொறுத்தப்பட்டிருக்கும் காமிராவின் மூலம் உள்ளே நிகழும் சம்பவங்களை முதலில் கண்கானிப்பதாகத் தீர்மானித்துவிட்டு, இராணுவப்படையின் உதவியுடன் சிறையைச் சுற்றி பாதுகாப்பும் அமைக்கப்படுகிறது.

இந்தச் சிறையில் உள்ள கைதிகளுக்கு மத்தியில் ஓங்கி ஒலிக்கக்கூடிய வலிமையயன குரலாக மால்மட்ரே திகழ்கிறான். ஆகையால் எல்லாமும் அவனின் ஆணணப்படி நடத்தப்படுகிறது. 211-இல் சிக்கிக் கொண்ட ஜூவானை அவனிடம் கொண்டு செல்ல ஒரு வயதான கைதி முடிவு செய்கிறான். அந்தக் கைதி திரும்புவதற்குள் ஜூவான் அவனைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் அபாயத்தைப் புரிந்துகொண்டு உடனடியாக இந்தச் சூழலிருந்து தப்பிக்க முயல்கிறான். அவன் மிகத் தந்திரமாக தனது தப்பிக்க முடியாத இயலாமையை உணர்ந்துகொண்டு தான் ஒரு அதிகாரி என்கிற அடையாளங்களை மறைத்துவிடுகிறான். தான் ஒரு அதிகாரியாக அந்தச் சிறையில் சிக்கிக்கொண்டால் கொடூரமாகப் பழித் தீர்க்கப்படும் மேலும் கொல்லப்படுவான் என்பதை உணர்தே உடனடியாக அவனது அடையாள அட்டை, பணப்பை, காலணி எல்லாவற்றையும் அகற்றி மறைத்துவிடுகிறான்.

இந்தச் சிறைக்கு வந்ததும் முதலில் சக அதிகாரிகள் அவனுக்கு ஒரு குற்றவாளி எப்படியெல்லாம் அணுகப்படுவான் என்றும் குற்றவாளிகளின் மத்தியில் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கப்படுகிறான். குற்றவாளியின் முன் எப்பொழுதும் பயந்த சுபாவத்தைக் காட்டக்கூடாது. எப்பொழுதும் அவர்களைக் கண்கானித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனப் பல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதே போல ஒரு குற்றவாளி சிறைக்கு வந்ததும் அவன் ஆடையும் உள்ளாடையும் கழற்றப்படுவதோடு, அவனது ஆசன வாய் பரிசோதிக்கப்படும், அவனிடமிருக்கும் எல்லாம் உடமைகளும் பறிக்கப்படும் என்றெல்லாம் குற்றவாளியின் அடையாளம் விரிவாகச் சொல்லப்படுகிறது.

அதற்குத் தகுந்த மாதிரி புதிய அதிகாரியாக நாளை பணியைத் தொடரவிருக்கும் ஜூவான், தன்னை 211 சிறைக்கு புதியதாக வந்திருக்கும் குற்றவாளியாக அடையாளப்படுத்திக் கொள்கிறான். ஜூலியசை அங்கிருந்து கடத்தி மால்மட்ரேவிடம் கொண்டு வருகிறார்கள். மால்மட்ரே ஒரு குற்றவாளி எப்படியெல்லாம் இதுவரை சிறையில் அவமானப்படுத்தப்பட்டுருக்கிறானோ அதையே ஜூவான் மீதும் பயன்படுத்தி அவனைப் பரிசோதித்துப் பார்க்கிறான். ஜூலியசின் ஆடைகள் அகற்றப்பட்டு அவனை நிர்வானமாக்கி, சுற்றியுள்ளவர்களிடம் அவனது ஆண் குறியைக் காட்டச் சொல்லி அதனைக் கிண்டலடிக்கிறார்கள். இந்தக் காட்சித்தான் குற்றவாளியின் உலகத்தில் நிகழும் மிகவும் வன்மையான செயல். ஒவ்வொரு குற்றவாளியும் பாலியல் ரீதியில் சிறைக்குள் அவமானப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தவும் படுகிறார்கள்.

குற்றவாளிகளின் மீதான இந்தப் பாலியல் கேலியும் அவமானப்படுத்துதலும் எங்கிருந்து தொடங்குகிறது எனப் பார்த்தால், சிறை அதிகாரிகளிடமிருந்து பிறகு தலைமை குற்றவாளியின் குழுவிடம் தாவுகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றவாளியும் தன்னைப் போலவே இன்னொருவன் அவமானப்படுவதைக் காணும்போது அவர்களுக்குள் வளர்ந்து அடர்ந்திருக்கும் வன்முறையும் பரிதவிப்பும் காயமும் மெல்ல தணிவது போல கற்பித்துக் கொள்ளும் அளவிற்கு அத்தகையதொரு மனநிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஜூவான் ஒரு அப்பாவி கொலையாளியாக அவர்களுக்கு மத்தியில் ஏற்றுக் கொள்ளப்படுகிறான்.

ஒரு அதிகாரி குற்றவாளியாகி, குற்றவாளிகள் நடத்தப்படுவதைப் போல எல்லாம் அநியாயங்களையும் போராட்டங்களையும் சந்தித்து அவர்களுள் ஒருவனாக அவர்களின் மனநிலைகள், வலிகள், இருண்ட வாழ்வின் பதிவின்மைகள், சூன்யம் எல்லாவற்றையும் அடைவதாக இப்படத்தில் காட்டப்படுகிறது. மேலும் அதிகாரத்திற்கு எதிராக வதைக்கப்பட்டு, ஒரு முழு குற்றவாளியாகவே மாறிவிடும் குற்றவாளியின் மௌனம் நிரம்பிய நிதர்சன அறையை பார்வையாளர்கள் முன்னிலைக்குக் கொண்டும் வரப்படுகிறது. சமூகத்தில் எல்லா வசதிகளுடனும் பணத்தின் மூலம் பெறப்படும் நல்ல பெயருடனும் ஒழுக்கத்தைச் சுயமாக உற்பத்தி செய்துகொண்டு மேல்தட்டு மனோபாவத்தில் வாழும் அதிகார சக்திகளுக்குச் சீர்த்திருத்தம் எனும் பெயரில் சமூகத்தின் எச்சங்கள் தேங்கிக்கிடப்பதாகச் சொல்லப்படும் சிறையில் குற்றவாளிகளுக்கு நடக்கும் அகக் கொடுமைகள் பற்றியும் உடல் துன்புறுத்தல் பற்றியும் என்ன தெரியப் போகிறது? என்கிற கேள்விக்குப் பளார் எனும் அறையும் படம்தான் “சிறை எண் 211”.

சிறை 211-இன் சுவரில் ஏற்கனவே இறந்துபோன குற்றவாளிகளின் கிறுக்கல்களும், அவர்கள் எப்படி மரணித்தார்கள் என்ற குறிப்புகளும் காணப்படும். ஒருவன் தலையில் ஏற்ப்பட்ட புற்றுநோயால் கதறி கதறி தலை பிளந்தும், இன்னொருவன் அறையிலிருக்கும் சன்னல் கம்பியில் தூக்குப் போட்டுக் கொண்டும் இறந்திருப்பார்கள். இந்தச் சிறையின் 211 அறைக்குள் நிகழ்ந்த குற்றவாளிகளின் மரணம் அதிகாரத்தின் அலட்சியத்தையும் குற்றவாளிகளின் அகத்தை முறையாகச் சீர்ப்படுத்தாத கொடூரத்தையும் காட்டுகிறது. அவர்கள் ஒரு மிருகத்தைப் போல நடத்தப்படுவதன் விளைவையும் சிறை எண் 211 பிரதிபலிக்கிறது.

ஸ்பானிஷ் பிரதேசத்தின் இப்படமானது நிறைய விருதுகளையும் பாராட்டுகளையும் உலக அளவில் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் மைய கதைப்பாத்திரமாகவும் குற்றவாளியாகவும் நடித்திருக்கும் மால்மட்ரே எனும் பெயரில் வரும் லுய்ஸ் தோஷர் ஸ்பானிஷ் மொழி சினிமா உலகத்தின் மிக முக்கியமான நடிகராவவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மொழியில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் லுய்ஸ் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் அந்த நாட்டின் பல முக்கியமான தொடர்களிலும் நடித்து இரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். இந்த சிறை எண் 211 படத்தில் இவரின் பாத்திரப்படைப்பு வெகுஜன இரசிகர்களையும் கவர்ந்துவிடும் அளவிற்கு ஆளுமை நிறைந்திருப்பதாக இருக்கிறது. அலட்டலும் மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளுமற்ற நிதானமான உடல் மொழியாலும் குற்றவாளிகளின் கரார் தன்மை நிரம்பிய குரலிலும் உண்மையான அடையாளமாக படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

4 படத்திற்கும் மேல் இயக்கி அனுபமுடைய Daniel Monzón இப்படத்தையும் இயக்கியுள்ளார். பலவகையான காரணத்தால் உள்ளுக்குள் திடீரென அடரும் ஒருவகை வெறுப்புணர்ச்சியாலும், கோபத்தாலும் குற்றங்களைச் செய்துவிட்டு சிறைக்கு வருபவர்களின் மீது மேலும் மேலும் சித்ரவதைகளும் துன்புறுத்தல்களும் திணிக்கப்பட்டு, அவர்களுக்குள் உருவான வன்முறை உணர்வை வலுப்படுத்தி, அவர்களை மீண்டும் ஒரு குற்றவாளியாகவே வெளியே அனுப்பும் சிறையின் கண்டிக்கத்தக்க செயல்பாடுகளை எதிர்க்கும் முரண் பிம்பமாக இப்படம் 2009-இல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை குற்றவாளியின் அறைக்குள் அனுப்பி கடைசிவரை காப்பாற்ற முடியாமல் போன சிறை நிர்வாகத்தின் கையறுநிலையை தந்திரமான சிக்கலான களத்தில் வைத்து மிக வலுவான திரைக்கதையின் மூலம் படைத்திருப்பது பாராட்டத்தக்க உதாரணம்.

ஜூவானை கடைசிவரை குற்றவாளிகளின் உலகத்திலிருந்து சிறை அதிகாரிகளால் காப்பாற்றவே முடியவில்லை. மால்மட்ரேவின் நம்பிக்கைக்குரியவனாக ஆவதற்கும் “உயிருடன் இருக்கவும்” அங்குச் சிக்கிக் கொண்ட அதிகாரியான ஜூவான் பிணை கைதி ஒருவனின் காதை அறுக்க நிர்பந்திக்கப்படுகிறான். மேலும் தன் கற்பினி மனைவியான எமிலாவைக் கலவரத்திலிருந்து காப்பாற்றத் தவறிய அதிகாரியும் மேலும் அவளைக் கலவரத்தில் தாக்கிவிட்டு, அங்கேயே விட்டுச் சென்ற மேலதிகாரியுமான ஒருவன் சிறைக்குள் சிக்கிக் கொள்கிறான். அதிகாரத்தின் நேர்மையற்ற செயலைக் கண்டு துடிக்கும் ஜூவான் அந்த மேலதிகாரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுகிறான். படத்தின் இந்தப் புள்ளி விரியும் இடம் மிக முக்கியமானது. அதவாது ஓர் அதிகாரி உண்மையான குற்றவாளியாக மாறுகிறான். அதற்குக் காரணம் யார்?

டாக்டர் சண்முகசிவா அவர்களின் ஒரு வரியை மலேசிய செம்பருத்தி இதழில் வாசிக்க நேர்ந்ததும் இப்படத்தின் மையக்கருவுடன் அதை ஒப்பீட்டுப் பார்க்க முடிந்தது.

“சமூகம் குற்றங்களை உற்பத்தி செய்கிறது, குற்றவாளிகள் அதைச் செய்து முடிக்கிறார்கள்”

முன்பு ஒருமுறை இங்குள்ள சிறையைக் கண்காட்சிக்காகப் பொதுமக்களுக்குத் திறந்துவிட்டடர்கள். அப்பொழுது தூக்குத் தண்டனை கைதிகளின் அறைகளைப் பார்க்க நேர்ந்தது. அங்கு என்னால் விவரிக்க முடியாது ஒரு துக்கமும் மௌனமும் நிரம்பியிருந்தது. சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு தூக்குத் தண்டனை கைதியின் வரியுடன் இந்த விமர்சனத்தை முடிக்கின்றேன்.

“ நாளிக்கு எனக்கு தூக்கு. அம்மா என்ன மன்னிச்சிறு”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/


Thursday, June 3, 2010

எனக்குள் எரியும் ஒரு பிசாசைக் கொல்ல முயற்சிக்கின்றேன் எதிர்வினை: கருத்துத் திருட்டும்- சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி அம்மையாரும்

முதல் பாகம்

(based on the true story)

எவ்வளவு அடக்கியும் இந்தப் பிசாசு அடங்க மறுக்கிறது. ஏற்கனவே வெறுக்கப்பட்டவர்களின் பட்டியலில் பலரின் பெயர் நிறைந்திருக்க, இப்பொழுது மீண்டும் பட்டியல் திறக்கப்படுகிறது, இன்னும் சிலரை அதில் உறுப்பினர்களாக்க. “இந்த மனதை வைத்துக் கொண்டு என்னத்தான் செய்வது” என்கிற நகுலனின் வரியைக் கொஞ்சம் திருடி, இங்கே இட்டு நிரப்பிக் கொள்கிறேன். கவனிக்கவும் சற்று முன்பு காரணமே இல்லாமல் நான் நகுலனைக் களவாடியிருக்கிறேன்.(கருத்துத் திருட்டு! ஆ! ஆ! ஆ!)

“பிழைப்புத் தேடி வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த எனது முந்தைய தலைமுறைக்கும், இன்றளவும் அதிகாரங்கள் துரட்டியடித்து பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் எனது மக்களுக்கும், இவர்களின் வாரிசாக இன்னமும் நேர்மையான அரசியலைப் பெற இயலாத சூழலில் மலேசியாவில் பிறந்து வளர்ந்து குடியுரிமை பெற்றிருக்கும் எனக்கும் இந்த எதிர்வினை கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.” ha ha ha ha ha ha ha

2003 வரை இலக்கிய பரிச்சியமே இல்லாதிருந்த நான், தற்செயலான விரிவுரையாளர் தமிழ் மாறனுடான சந்திப்பினாலும் புதுமைப்பித்தன், வண்ணநிலவன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் பிரதிகளை வாசித்துருவான வாசக மனதின் உந்துதலாலும் எழுதத் துவங்கினேன். வண்ணநிலவன், பாரதி, புதுமைப்பித்தனின் கருத்துகள் அல்லது எழுத்து எனக்கு எழுதுவதற்கான வலிமையை ஆர்வத்தைக் கொடுததது. அவர்களின் கருத்து சார்ந்து நான் புரிந்துகொண்ட புள்ளியிலிருந்து எனது உரையாடலை இலக்கியத்தைத் துவங்குகிறேன்.

ஆனால் எனக்குப் பெரிய பிரமிப்பு என்னவென்றால் பரிசுத்த ஆத்மாவான சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி அவர்கள் ஒரு நாள் ஆழ்ந்த கனவுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் தனது ஆழ்பிரக்ஞைக்குள் சர்யலீச காட்சி பிழைகளில் சிக்கிக் கிடந்த சமயத்தில் திடீரென ஓர் எழுத்தாளராகவோ அல்லது நூல் ஆசிரியராகவோ உருவாகிவிட்டார். விழித்ததும் ஒரு புத்தகத்தை எழுதி பிரசுரித்துவிட்டதுதான் மாபெரும் ஆச்சரியம். எந்தப் பிரயத்தனமும் இன்றி எந்தச் சலனமும் இன்றி உருவான இலக்கிய வடிவம் அவர் என அவர் “மிகச் சரியாகப்” புரிந்துகொண்டு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சிலர் இன்னமும் தவறான அவநம்பிக்கையில், அவரை ஓர் இலக்கிய பிரதியாக உருவாக்கியதில் ஏதாவது ஒரு பிரதியின் கருத்துகளுக்கோ அந்தப் பிரதியின் ஆழ்ந்த கலை எழுச்சிகளுக்கோ பங்கிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நீங்கள் அவரை அடையாளப்படுத்த நேர்ந்தால் இந்தச் சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி ஒரு “கருத்துத் திருடர்” எனும் தீர்மானத்திற்கு வர நேரும். ஆகையால் நாம் இங்கே பிடிவாதமான சமரசத்திற்கு உட்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர் எந்தக் கருத்தையும் சாராமல் அல்லது எதிர்க்காமல், எந்தவொரு பிரதியின் கருத்துகளையும் உள்வாங்கி தரிசிக்காத, மிக மிக உன்னதமான பரிசுத்த ஆத்மா.

குறிப்பாக அவர் தனது சில நூல்களில் எழுதியுள்ள “கருத்துகளுக்கு” பதிப்புரிமை வாங்கி, அதைப் பதிவும் செய்துவிட்டார் என்பதும் உறுதி. காரணம் அவர் குறிப்பிட்டது போல கருத்துத் திருட்டு நிகழாமல் இருக்க வேண்டுமல்லவா. மேலும் சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி கருத்துகளுக்கு வெளிநாடுகளில் கோடிக்கும் மேற்பட்ட தொகையில் காப்புரிமை வழங்கப்படுகிறது. அத்துனைச் “சுயமான சுத்தமான புதிய உற்பத்தியான” அவரது கருத்துகள் உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவையாகும். (என்னையுமறியாமல் சிரிப்பு வரும்போதெல்லாம் பிறரைக் கேலி செய்து சிரிப்பது மிகக் கொடுமையான விஷயம் என்பதால் அடக்கிக் கொள்ள முயற்சிக்கின்றேன்)

முதலாவதாக சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி அவர்கள், எனக்கும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கருக்குமான உரையாடல் குறித்து சொல்லும்போது, அவரது கருத்துகளையே நான் அங்கு வாந்தியெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜெயந்தியைப் புகழ்வதற்காக நான் அவரது “மிகப் பெரிய அறிவார்ந்த வாந்தியை. . மன்னிக்கவும் கட்டுரையைத் தேர்ந்தெடுத்ததாக வேறு குறிப்பிட்டிருந்தார். தனது கட்டுரைக்குப் புகழ் தேடுவதிலும் சில நியாயம் இருக்க வேண்டாமா? அதற்காக இப்படியா? ஜெயந்தியை இனி நான் வேறு தனியாகப் புகழ வேண்டுமா? அல்லது புகழ்ந்தால் அவர் எனக்கு 100 சிங்கப்பூர் டாலர் தருவதாகக் கூறிய ஒப்பந்தத்தையேதேனும் லஷ்மி தனது சர்யலீச கனவில் மறைந்திருந்து கண்டுவிட்டாரா? தொடர்ந்து பல முக்கியமான எழுத்தாளர்களால் விமர்சிக்கப்படும் அடையாளப்படுத்தப்படும் வகையில் நல்ல மதிப்பையும் பாராட்டையும் பெற்ற ஜெயந்திக்கு இந்தச் சாதாரண புகழ்ச்சியெல்லாம் அனாவசியம் எனத்தான் நினைக்கிறேன். லஷ்மிக்குள் இருக்கும் ஏதோ ஒரு புகை எரிந்து வெளிப்பட்டதன் விளைவாக அவர் இப்படியொரு கருத்தை முன்வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். உலகம் அறியாத அப்பாவியாக அல்லவா இருக்கிறார்.

அடுத்ததாக எனது உரையாடலை முன்வைத்து கருத்துத் திருடர் எனும் பட்டத்தையும் வழங்கியிருக்கிறார். அதென்ன கருத்துத் திருட்டு? யாராவது தன் சுயக் கருத்துகளைப் பிறர் எடுத்து விவாதிக்கக்கூடாது எனவும் அல்லது தனது கருத்துகளின் அடிப்படையில் யாரும் எந்த உரையாடலையும் நடத்த கூடாது எனவும் அல்லது என் கருத்துகள் எனதானது யாரும் அதைப் படித்துவிட்டு அதை உணரக்கூடாது எனவும் வாதிட்டுள்ளார்களா? முதலில் லஷ்மி மௌனம் கட்டுரையில் வெளியீட்டுள்ள கருத்துகள் முழுக்க முழுக்க அவருடையதுதான் எனவும் இந்தக் கருத்துகளை உருவாக்க அவர் எதையும் மேற்கோளாகக் கொண்டிருக்கவில்லை எனவும் நிருபிக்க இயலுமா?

மேலும் ஒரு மிகப் பெரிய அபத்தம் என்னவென்றால், மௌனம் இதழில் வெளிவந்த இவரது கட்டுரை இப்படித்தான் தொடங்குகிறது. “ கவிதையைக் கூட எளிதில் எழுதிவிடலாம். ஆயின், கவிதையைப் பற்றி எழுதுவது மிகவும் அருமையுடைய செயல் என்பது விக்ரமாதித்யனின் கருத்து.“ ஆக கவிதை குறித்து கவிஞர் விக்கிரமாதித்தியன் என்ன கருத்தை அல்லது புரிதலைக் கொண்டிருக்கிறார் என இவர் குறிப்பிட்டதன் பின்னனியில் எந்தவகையான “கருத்துத் திருட்டு” நடந்துள்ளது? கவிதையைப் பற்றி இவர் என்ன புரிந்து வைத்திருக்கிறார் என்பதுதான் இங்கு முக்கியமாகப் படுகிறதே தவிர விக்கிரமாதித்தியன் சொன்னதையெல்லாம் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி அவர்கள் மீள்வாந்தியெடுக்க வேண்டாம் எனவும் பலர் கேட்கக்கூடும். (கேட்டும் இருக்கிறார்கள்)

இலக்கியத் திருட்டு என்பதைப் பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்.

1. பிறர் எழுதிய கதையை அப்படியே எடுத்து தனது பெயரை இட்டு வெளியிடுவது
2. பிறர் கருத்தை முன்வைத்து எழுதியும், பின்குறிப்பில் அல்லது எங்காவது மேற்கோளாகத் துணைப்புரிந்தவர்களின் பிரதியையோ அல்லது பெயர்களையோ குறிப்பிடாமல் மறைப்பது
3. பிறர் சொன்ன கருவை அவருக்கே தெரியாமல் படைப்பாக்கி எந்த இடத்திலும் உந்துதல் பெற்ற மூலத்தின் அடையாளத்தை மறைப்பது/மறுப்பது
4. பிறர் எழுதியதைத் தன் சுய லாபத்திற்காக நூலாக்குவது
5. பிறரின் படைப்புகளைப் பிரசுரம் செய்து, அவர்களைச் சுரண்டி தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வது

எனக்கு அறிந்து இதை இப்படியும் வகைப்படுத்தலாம். அல்லது இதைவிடவும் கூடுதலான விளக்கங்கள் இருந்தால், தெரியப்படுத்துங்கள். கேட்டுக் கொள்கிறேன். ஆகையால் எனக்கும் ஜெயந்திக்கும் இடையிலான உரையாடலில் நான் இந்த நேர்காணலைத் தொடங்குவதற்கான காரணத்தை, “மௌனத்தில் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி எழுதிய விமர்சனத்தை முன்வைத்தே” என இரு இடங்களில் குறிப்பிட்டுருக்கிறேன். அவரது அந்தக் கட்டுரை பிரசுரமாகாமல் இருந்திருந்தால் அப்படியொரு உரையாடலும் நிகழ்ந்திருக்காது எனவும் சொல்லியிருந்தேன். எங்கேயும் லஷ்மியின் கட்டுரையையோ அல்லது அவரது பெயரையோ நான் மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. சிங்கப்பூர் லஷ்மி இதை நன்கு தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் சுமாரான கருத்துகளைத் திருடும் அளவிற்கு எனக்குக் கருத்து பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் உங்களின் கருத்துகளுடன் உடன்படாத எதிர்வினைத்தான் அந்த உரையாடல் என்பதைக்கூட நீங்கள் புரிந்துகொள்ள மறுத்துள்ளீர்கள்.

அப்படியென்றால் இங்கே அதிகமாகத் திருடப்பட்டிருப்பது பாரதியும் புதுமைப்பித்தனும்தான் போல. இந்த முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி அவர்களும் புதுமைப்பித்தனின் படைப்புகளை வாசித்து ஆராய்ந்து, அவரது சுய உழைப்பைச் சுரண்டி புத்தகம் போட்டு சம்பாதித்துவிட்டார் எனவும், “அவரது மொழியில்” சொல்லலாம் போல. (இது அவரே முன்மொழிந்துள்ள கருத்துத் திருட்டுக்கான புதிய விளக்கத்தின் அடிப்படையில், எனது விளக்கமல்ல).

ஒரு படைப்பை விமர்சிப்பதென்பது, முதலில் அந்தப் படைப்பின் செய்திகளையும் அதன் கருத்துகளையும் உள்வாங்கி புரிந்துகொண்டு அந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் படைப்பு மொழியிலிருந்து விடுப்பட்டு விமர்சன மொழிக்குத் தாவும் ஓர் உத்தியாகும். பிரதியின் கருத்துகளைக் கொண்டுத்தான் விமர்சன மொழியில் நமது ஆக்கத்திறமையால் இன்னொரு விமர்சனத்தை அல்லது பார்வையை உருவாக்க முடியுமே தவிர பிரதியின் கருத்துகளை முற்றிலும் நிராகரித்துவிட்டு வெறுமனே ஒரு புரிதலை விமர்சனமாக முன்வைப்பது ஆரோக்கியமற்றது.

எடுத்துக்காட்டாக லஷ்மிக்குத் தெரியாத சில விஷயங்கள்:

1. based on the true event
2. based on the true story
3. inspired by novel
4. inspired by short story

இப்படிப் பல காரணங்களாலும் பல மூல படைப்புகளின் உந்துதல்களாலும் உருவான பல ஆக்கங்கள் உண்டு. ஒருவரின் கருத்தைப் பின்தொடர்ந்து அதனையொட்டி அதனை முன்வைத்து நம் புரிதலை உருவாக்குவதென்பது “கருத்துத் திருட்டு” ஆகாது என நினைக்கிறேன். முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி சொல்வதைப் பார்த்தால் மொழிப்பெயர்ப்பாளர்கள் எல்லோரும் திருடர்கள்தான்? ஒருவனின் மூலப் படைப்பை எடுத்து தனது பன்மொழி ஆற்றலைப் பயன்படுத்தி அதனை இன்னொரு பிரதியாக்குவதென்பது திருட்டு என்றே அவரது மொழியில் சொல்வதென்றால் உலகில் நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த அரிய மொழிப்பெயர்ப்பு முயற்சிகளும் “கருத்துத் திருட்டென” அர்த்தமாகிவிடும் அபாயம் உண்டு. (மூலப் பிரதிக்கு உரிமையானவரின் அனுமதியில்லாமல் அல்லது அந்தப் பதிப்பகத்தாரின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் மொழிப்பெயர்ப்புகள் மட்டுமே திருட்டு எனப் புரிந்துகொள்ளலாம்)

மேலும் சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி அவர்கள் ஜெயந்தி சங்கர் அவர்களை “ ஜெயந்தி சங்கரும் ஒரே பேட்டியை, ஒரே கட்டுரையைப் பல இணையத் தளங்களிலும் வெளியிட்டு உலக அளவில் பிரபலமாவதற்காகப் பல தளங்களிலும் புகைப்படங்களைப் பிரசுரிக்கச் செய்து ‘பிரமப் பிரயத்தனம்’ செய்து கொண்டிருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே தவறை அவரும் செய்திருப்பது அவருக்குத் தெரியாமல் இருக்கும் பரிதாபத்தை எப்படிப் புரிய வைப்பது எனக் குழப்பமாக இருக்கிறது. கடந்த மௌனம் இதழில் பிரசுரமான அதே கட்டுரையைத்தான் இவர் வல்லினம் அகப்பக்கத்திற்கும் அனுப்பி வைத்திருக்கிறார். (இந்தச் சுய முரணைக் கவனிக்கவும்)

அடுத்ததாக சிங்கப்பூரில் வசிக்கும் கவிஞர் பாண்டித்துரையின் இரு வேறு கவிதைகளைக் குறிப்பிட்டு இப்படிச் சொல்லியிருக்கிறார். “இவரிடம் சிந்தனைத் தெளிவு இல்லாத காரணத்தால் கவிதைகளில் இருண்மை நிலவுகிறது. இதற்குச் சான்றாகத் தலைப்பில்லாக் கவிதைகளைக் கூறலாம்.இவரது கவிதைகளில் முரண்பாடுகள் உள்ளன. ஒரு கவிதை, “மனிதர்களை

எனக்குப் பிடிப்பதில்லை
அப்பன்னா நீ யாரு
நானா
ஆறு அறிவு மிருகம்
தேடிக் கொண்டிருக்கிறேன்” (பிரம்மா, ப-32)

என மனிதனை வெறுக்கிறது.
ஆனால், இவரின் மற்றொரு கவிதையோ,

“நான்
உறவுகளை
மனிதமாகவே பார்க்கிறேன்
அவர்களுக்குக் கிடைத்த
கௌரவமே உறவு” (பிரம்மா, ப-33)"
ஆக முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி கருத்துபடி ஒரு எழுத்தாளன் என்பவன் எந்தவகையிலும் தன் எழுத்தின் மூலம் முரண்படவே கூடாது. அவனுக்குக் கொடுக்கப்படும் ஒழுக்கத்திலிருந்து அவன் மீளாமல் பரிசுத்த ஆத்மாவாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை விநியோகம் செய்திருக்கிறார். இருவேறு சூழல் கொடுத்த மனநிலையில் பாண்டித்துரை இரு வேறான கவிதையை எழுதியிருப்பதைப் பெரும் குற்றம் போல வாதாடுகிறார் இந்தக் சமூகக் காவல்துறை அதிகாரி முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி அவர்கள். (ஆனால் இவரும் தனது எழுத்தின் மூலம் கருத்தின் மூலம் பல இடங்களில் முரண்பட்டிருப்பதைச் சற்று முன்பு விளக்கியிருந்தேன்). முரண்படுவதும் உடன்படுவதும், தன் எழுத்தின் மூலம் அவன் அடைப்படுவதும் விடுதலை பெறுவதும் அனைத்தும் அவனுக்கான உரிமை. அதைக் கண்டு இவர் ஏன் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் எனத்தான் புரியவில்லை.

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு, நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிறரின் இலக்கியச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும், அதைத் துன்புறுத்துவதிலும் அலாதிய பிரியம் உண்டு என்பதை உலகம் அறியும், நீங்கள் குறிப்பிடும் அந்த வந்தேறிகளின் கூட்டமும் அறியும். நான் எனக்காகப் பேசவும் இல்லை, என்னைத் தற்காத்துக் கொள்ளவும் பேசவில்லை.


பாகம் இரண்டில் பிரசுரமாகும் சூடான செய்திகள்:

1. அடையாள சிக்கலை உற்பத்திக்கும் மொழி
2. வேடந்தாங்கள் பறவைகள் இல்லாமல் லஷ்மியின் விமர்சனங்களும் இல்லை
3. புதுமைப்பித்தன் என்ன சிங்கப்பூர் குடிமகனா அல்லது முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி என்ன தமிழகத்து விமர்சகரா?
5. வந்தேறிகள் எனும் அடையாளத்திற்குப் பின் இருக்கும் புலம் பெயர்
அரசியலின் பார்வையைக் கொண்டிராத தட்டையான விமர்சனம்
இன்னும் பல.

-பாகம் 2 அடுத்த வாரம் மீண்டும் சூடான செய்திகளுடன் பிரசுமாகும்.-

குறிப்பு: எதிர்வினை நமது சக்தியை விரையமாக்கும், எனது படைப்புகள் உருவாதற்கான தருணங்களைப் பிடுங்கிக் கொள்ளும் என்றெல்லாம் தொலைப்பேசியில் மூலம் தயவு செய்து அறிவுரைகள் கூற வேண்டாம். அறிவுரைகளைக் கண்டாலே 10 அடி தள்ளி நிற்க வேண்டிய சூழ்நிலை.

thanks to
maunam magazine(malaysia)
vallinnam(malaysia e-magazine)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா