Friday, December 11, 2009

தமிழாசிரியர் சங்கமும் தலைமை ஆசிரியர் மன்றமும் எங்கே தங்களின் குரல்?

இந்திய இளைஞர் மேம்பாட்டுப் பேரவையின் தலைவரும் வாசகருமான தமிழ்வாணன் அவர்கள் எசு.பி.எம் தமிழ் மொழி பாட விவகாரத்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரம் பெறும் போராட்டக் களத்தில் இன்னமும் வெளியே எட்டிப் பார்க்காத தமிழாசிரியர் சங்கங்களையும் தலைமை ஆசிரியர்கள் மன்றங்களையும் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்வி எனக்கும் எழுந்தது. தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தையும் உரிமையையும் பெறும் வகையில் இந்திய சமூகமே தமது தாய்மொழியைப் பாதுகாக்கும் பொருட்டு பலவகையான தற்காப்பு கருத்துகளையும் எதிர்க்குரலையும் பதித்தவாறே இருக்கையில், தமிழ் மொழியுடன் நெருக்கமான தொடர்புடைய தமிழாசிரியர் சங்கமும் தலைமை ஆசிரியர் மன்றமும் இன்னமும் கூட மௌனமாக இருப்பது பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறது.

என்ன நடந்தால் என்ன? சம்பளம் பெறப்போவது உறுதி என்கிற அலட்சியமா? அல்லது போராட நேர்ந்தால் பதவியும் வாய்ப்புகளும் பறிப்போய்விடும் என்கிற அச்சமா?

சிறுபான்மையின் உரிமைகள் ஒவ்வொருமுறையும் புறக்கணிக்கப்படும்போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுக்காதவர்கள் சமூகத்தின் து. . .கள் எனத்தான் அழைக்க வேண்டும். கொடியைத் தூக்கிக் கொண்டு சட்ட விரோத பேரணியின் ஈடுப்படச் சொல்லவில்லை. சாலை மறியலில் ஈடுப்பட சொல்லவில்லை. குறைந்த அளவில் தமிழ்வாணன் குறிப்பிட்டிருப்பது போல தங்களின் தற்காப்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான தரமான கருத்துகளையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. இதுதான் சமூகத்தின் ஆதங்கம்.

ஒரு மொழிக்கு அரசியல் பின்னடைவுகள் வருகிறதென்றால் அதை உடனே களைய தொடர்புடையவர்கள் பெரும் அரசியல் சக்திகளாக கூட்டமைந்து தமது கருத்துகளை நாகரிகமான முறையில் எடுத்து முன்வைத்தால், அதைத் தடுப்பதில் முன்னேற்றம் காணலாம். செய்வார்களா? அல்லது இதுவும் வழக்கம் போலான அடித்தட்டு மொழி உணர்வாளர்களின் போராட்டமாக முடிவடைந்துவிடுமா?

செய்திப்படம்: மக்கள் ஓசை (11.12.2009)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா