Saturday, December 5, 2009

எஸ்.பி.எம் தேர்வு குறித்த அமைச்சரவை தீர்மானமும் மீண்டும் அதிருப்தியும்

நேற்று கூடிய அமைச்சரவையில் இந்திய மக்களின் ஒட்டு மொத்த எதிர்வினையாலும் எதிர்ப்புக் குரலாலும், அரசாங்கம் எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் என்கிற அறிவிப்பைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் தயக்கமின்றி தமிழ் பாடத்தையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தேர்வில் எடுக்கலாம். இது சிறுபான்மை இனத்தின் மிகப் பெறிய வெற்றி என்றே சொல்லலாம். வன்முறையைக் கையாளாமல் கருத்தியல் ரீதியிலான அணுகுமுறையினால் பெறப்பட்டிருக்கும் வெற்றி இது.
வெளி அமைப்புகள், பத்திரிக்கைகள் மேலும் தனிநபர்கள் என தமிழுக்கு ஆதரவாக எதிர்வினைகளை கருத்துகளை தைரியமாக பதிவுச் செய்திருப்பது தமிழ் சமூதாயம் இன்னமும் விழிப்புநிலையில் இருப்பதையே அடையாளப்படுத்துகிறது.

இருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் மீண்டும் ஒரு அதிருப்தியை எழுப்பியிருக்கிறது. அமைச்சரவையில் மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்திய மக்களின் சார்பாக முன்வைத்த கோரிக்கையைக் கலந்துரையாடிய அமைச்சரவை எடுத்திருக்கும் புதிய தீர்மானங்கள் இன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது:

1.இனி வரும் எஸ்.பி.எம் மாணவர்கள் தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே தேர்வின் முடிவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.மேலும் கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.(அதாவது தமிழ் / தமிழ் இலக்கிய பாடங்கள் அரசு ரீதியிலான எந்த மதிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படாது)

அப்படியென்றால் தமிழும் தமிழ் இலக்கியமும் பொழுது போக்கு பாடங்களாக மாற்று அடையாளத்துடன் திரும்பவும் கொண்டு வரப்படுகிறது என்று மட்டுமே அர்த்தப்படும். ஓர் அரசு ஏன் சிறுபான்மை இனத்தின் தாய்மொழியை அங்கீகரிக்க இத்துனை தயக்கங்களைக் காட்டுகிறது என்ற கேள்வி சராசரி குடுமகனுக்கும் எழக்கூடும். இதன் மூலம் மூன்று முக்கிய இனத்தவர்களின் வேறுபாடுகளைப் பயன்படுத்தி, பெரும்பான்மை சிறுபான்மை என்கிற இடைவெளியின் மொத்த அரசியல் சௌகரிகங்களையும் முன்வைத்து எடுக்கப்படும் மேல்மட்ட தீர்மானங்களா இவை?

எல்லாம் எஸ்.பி.எம் மாணவர்களுக்கும் தேசிய மொழி கட்டாயப் பாடமாக இருக்கும் பட்சத்தில், ஏன் இந்திய மாணவர்களுக்கு மட்டும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க மலேசியாவில் வழியில்லை? எங்களின் மொழியை அங்கீகரிக்கவும் அதை எஸ்.பி.எம் தேர்வு அறிக்கையில் மரியாதைக்குரிய மொழியாக அங்கீகரித்து வெளியீடவும் ஏன் அரசாங்கம் இத்துனை மௌனங்களையும் தடைகளையும் உற்பத்தி செய்து வாளாயிருக்கிறது? என்று ஒட்டு மொத்த இந்திய சமூகமும் கேள்வியாலும் சந்தேகத்தாலும் எதிர்ப்பார்த்து நிற்கின்றது.

அமைச்சரவைக்கு மீண்டும் ஓர் எதிர்க்கருத்தாக,நியாயமான வேண்டுகோளாக அவர்களின் தீர்மானங்களை மாற்றியமைக்கக் கோறி, தோட்ட மாளிகையில் வருகின்ற 12.122009 நடப்பதாக இருந்த கவன ஈர்ப்புக் கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அதன் தலைவர் திருவேங்கடம் அறிவித்துள்ளார். கெடா பினாங்கு மாநைலங்களிலிருந்து 10 பேருந்திற்கும் மேலாக வரவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது, மேலும் ஆங்காங்கே சிறு சிறு சந்திப்புக் கூட்டங்களும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அடுத்த மாற்றம் குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா