Wednesday, November 18, 2009

காந்தி: வேறொரு அடையாளம் (நவீன களம்)

இந்த மாதத்தின் நவீன களத்தின் இரு சந்திப்பிலும் காந்தியவாதத்தைப் பற்றிய உரையாடல்களே அதிகமாக இருந்தது. ஏற்கனவே காந்தியைப் பற்றிய வரண்ட வரலாற்றுப் பார்வையே இருந்ததால், பிறர் காந்தியைப் பற்றிய எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைகள் புத்தகங்கள் என வாசித்தேன்.

விவாதிப்பதற்கு காந்தி குறித்த தத்துவ அரசியல் பார்வை அவசியம் என்பதால் மேலும் மேலும் அவரைப் பற்றிய கட்டுரைகள் பலராலும் பல நிலைகளில் எழுதப்பட்ட படிமங்களே அதிகமாகக் கிடைத்தும், ஒருவருக்கொருவர் காந்திய சித்தாந்தத்தில் மிகத் தீவிரமாக முரண்படுவது முதலில் வாசிப்பு சிக்கலை ஏற்படுத்தியது. நவீன களத்தில் மிக எளிமையான சொல்லாடல்களில் அவரைப் பற்றிய புரிந்துகொள்ள முற்பட்ட கடினமான மதிப்பீடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு சுதந்திரமாக உரையாடினோம்.

காந்தியின் அரசியல், அவர் உருவாக்கிய தேசியம், பெரும்பான்மைய சக்திகளின் மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றை உள்ளடக்கியதல்ல, சிறுபான்மையையும் உள்ளடக்கியது. பார்ப்பனர்கள் பார்ப்பனல்லாதவர்கள் என இரு பிரிவினருக்கும் மத்தியில் நிலவிய அரசியல் நேர்மையின்மை, சர்ச்சை, இனவாத தீண்டாமைகளை, தனது அரசியல் நேர்மையுடன் களைய முற்பட்டவர். இந்தச் சிக்கல், முரண்பாடு மட்டுமே அவரது தேசிய கட்டமைப்பின் நடைமுறைக்கு மாபெரும் சவாலாக இருந்தது.

காந்தியின் , “மகாத்மா” என்கிற அடையாளம்தான் அவர் குறித்த மதிப்பீடுகளைப் பலவீனமாக்குகிறது என்றும், காந்தி ஒழுக்கம் சார்ந்த ஆளுமையாக மட்டுமே அணுகப்படுவதால், வாழ்நாள் முழுவதும் தனது பின்பற்றுதல்களை, வாழ்வைப் பரிசோதனை செய்து கொண்டே இருந்த காந்தி, ஒழுக்கம் என்கிற கோட்பாட்டிலிருந்து நழுவிய ஓர் இந்துத்துவவாதி என்றும் அடையாளப்படுத்தப்படுகிறார். இது தன்னை ஒரு சாதாரண மனிதன் என்று தன் வாழ்வை பரிசோதனை களமாக ஆக்கிக் கொண்ட காந்தியின் கோளாறு கிடையாது, மகாத்மா என்ற சொல்லாடல்களுடன் அவர் மீது நாம் வைக்கும் மதிப்பீடுகளின் கோளாறு என் அ.மார்க்ஸ் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்து மதத்தால், வருணா சாதி முறையால் பாதிப்புக்குளளான ஒடுக்கப்பட்டவர்களின் மத்தியிலிருந்து பேசியவர்கள் அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள். ஆனால் காந்தியோ இந்த ஒடுக்குமுறைக்கு யார் காரணமோ அந்த மக்களின் மத்தியில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் பேசியவர். எந்த வருணாசிரம கொள்கையின் பிடிமானத்தில் தீண்டாமையின் மூலம் பிறரை ஒடுக்கினார்களோ, அந்த நம்பிக்கையின் மூலமே அதன் அடிபடையிலேயே அதை மறுக்க முனைந்தவர். காந்தியின் மொழியும் பெரியாரின் மொழியும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று அதன் நுண் அரசியலுடன் புரிந்துகொள்ளப்படவேண்டும்.

காந்தியின் சத்தியாகிரகம் குறித்து, அது அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வருத்திக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியம் என்று சர்ர்ச்சை இருந்தது. அ.மார்க்ஸ் போன்ற கட்டுரையாளர்கள், அது பெருந்திரளான மக்களை சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் என்ற புரிதலை ஏற்படுத்தினார்கள்.

தனது தேசியவாதக் கொள்கையின் மூலம், மதச்சார்பின்மை என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஒரு அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கு மிக முக்கியமானது. மேலும் நடப்பில் இருந்த இந்து மத்திற்கு எதிரான கருத்துகளையே கடைசிவரை முன் வைத்துள்ளார் காந்தி. இந்து மதத்தை முற்றிலும் மறுக்காமல், அதைச் சீர்த்திருத்த வேண்டும் சீரமைக்க வேண்டும் என்றே பரிந்துரைத்தார். காந்தி ஒரு இந்துத்துவவாதி என்று சொல்வதைச் சிலர் மறுக்க இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், காந்தியைக் கொன்றது ஓர் இந்துவாக இருக்கும்பட்சத்தில் காந்தியை வெறும் இந்து கொள்கைவாதி என்று அடையாளப்படுத்துவதில் அர்த்தம் இல்லை எனவே நினைக்கிறேன்.

காந்தியின் அரசியல் நேர்மை அவரது அடையாளத்தைத் தூக்கிப் பிடித்தது. வன்முறைக்கு எதிரான ஒரு போராட்ட வடிவத்தை முன்மொழிந்து அதனைக் கொண்டு போராடியவர். பார்ப்பானியவர்களை நோக்கி, உங்கள் அதிகாரங்களையும் பதவிகளையும் விட்டுக் கொடுங்கள், திராவிடர்களுக்கான வாய்ப்புகளை அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றும், பார்ப்பனியில்லாதவர்களை நோக்கி, பிராமனர்களை ஒழிப்பதுதான் என்கிற கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள், அதிகாரங்களையும் பதவிகளையும் பகிர்ந்து கொள்வதிலும் பறிப்பதிலும் இருக்கும் வெறியையும் துறந்துவிட வேண்டும் என்று தனது அரசியல் பார்வையை இந்த இரு தரப்பினரால் பிளவுப்படும் தேசியவாதத்தை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தினார். காந்தியின் வேறொரு அடையாளம் இது. காந்தியை ஒரு ஒழுக்கம் சார்ந்த ஆளுமையாகப் பார்க்கும் விதத்திலிருந்து விலகி, அவரை நோக்கிய வேறொரு அடையாளத்தையும் கொண்டிருப்பதும், மறுவாசிப்பும் மிக அவசியமானது.

( ஒரு தந்தையாக காந்தி மிகப் பெரிய தோல்வியடைந்தார் என்ற சர்ச்சையும் அவர் மீது உள்ளது- இதை அவர் குடும்ப வாழ்வுடன் மட்டும் ஒப்பிடாமல், அவரது அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருப்பதால் இங்குக் குறிப்பிடபடவில்லை- தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்தால்)

சொல்வதற்கு நிறைய இருந்த போதிலும். . . முற்றும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

நன்றி: அ.மார்க்ஸ் கட்டுரைகள்
மணிஜெகதீசன், பிரம்மானந்தா, கோ.புண்ணியவான், வாசகர் பாண்டியன்,
பாலாஜி(சிங்கப்பூர்)