Wednesday, September 30, 2009

விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல - இனப்படுகொலைகளின் உச்சம்

தமிழீழ அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு காரணமான ராஜ பக்சேவின் அரசின் கொடூரம், சகிக்க முடியாத உண்மை. மீனகம் செய்தி வலைத்தலத்தில் அவ்வப்போது உண்மை செய்திகள் விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஒரு சில செய்திகள் இங்கே தரப்பட்டுள்ளன.

இவ்வளவு அநியாயங்களும் உலக நாடுகளின் ஆதரவில் அவர்களின் கண்கானிப்பில்தான் நடந்து கொண்டிருக்க, மடிந்து சாவது நம் தமிழர்கள்தான். உலக வரலாற்றின் இப்படியொரு கடுமையான உயிர் பலிக்கு ஆளான ஒரே இனமாக தமிழிழம் மட்டுமே இருக்க முடியும். தமிழர்களுக்கு ஏற்பட்ட இந்தத் துரோகங்களுக்கு உலகம் என்ன செய்யப் போகிறது? பார்த்துக் கொண்டிருக்கிறது. . .


இவ்வளவு கொடூரங்களை நடத்திய அரசிடம் பாதுகாப்பு தஞ்சம் அடைந்து கொண்டு அரசியல் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டு பிரபாகரனைக் காட்டிக் கொடுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அப்பாவி மக்களின் இனப்படுகொலைகளுக்குத் துணைப்போன கருணா பேசுவதற்கோ அல்லது பேட்டி அளிக்கவோ என்ன தகுதி கொண்டிருக்கிறார்? பேசட்டும் பேசட்டும். .

-கே.பாலமுருகன்


இடம்பெயர் முகாம்களில் ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதில்லை: இந்திய மருத்துவர்

வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பொருத்தமான ஊட்டச் சத்து உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் ஊட்டச் சத்து குறைந்த குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமடைந்து வருகிறது என்று இந்திய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதமாக வன்னி தடுப்பு முகாம்களில் பணியாற்றிய இந்திய மருத்துவர்கள் நாடு திரும்புவதற்கு முன்பு, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் விருந்து கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் போஸ் கூறுகையில்,

முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக நான் சிகிச்சை அளித்து வருகின்றேன். குழந்தை மருத்துவர் என்ற முறையில் ஊட்டச் சத்துக் குறைபாட்டை மருத்துகளால் மட்டும் குணப்படுத்திவிட முடியாது என்றுதான் கூறுவேன்.

குறைந்தது மூன்று மாதங்களுக்காவது அவர்களுக்கு நல்ல சத்துணவு வழங்கப்பட வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு நல்ல சத்துணவு கிடைக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். முகாம்களில் தயாரிக்கப்படும் உணவு, ஊட்டச் சத்துக் குறைந்த குழந்தைகளுக்கு சரியானது என நான் நினைக்கவில்லை.

ஒவ்வொரு குழந்தைக்கும் வீட்டில் தயாரிக்கப்பட்ட சத்துணவுகள் கொடுக்கப்பட வேண்டும். முட்டையின் விலை மிக அதிகமாக இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் முட்டை கொடுக்கப்பட வேண்டும். புரதச் சத்துள்ள முட்டை உணவு கொடுத்தாலேயே இந்தக் குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.


உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்

தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!


இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமி;ழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.


போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, சட்டதிட்டங்களுக்கு முரணாக, திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெணணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!


இந்த வதைமுகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இந்து ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென்தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 தொன் உணவு. உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.

தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது “நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்” என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!

நன்றி: மீனகம் செய்தி இணையத்தளம்

அநங்கம் சிற்றிதழ் விமர்சனம் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (2008)

நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில் நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ்.

இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன் முதல் இதழ் வெளியாகி உள்ளது.

பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு அதற்கான எதிர்வினைகளும் மிக குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி தொடர்ந்து சிறுபத்திரிக்கைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நமது அக்கறைகளே. அதற்காக நாம் கொள்ளும் கவனமும் மாற்று முயற்சிகளுமே சிற்றிதழ்களாக வெளியாகின்றன. நானும் அட்சரம் என்ற சிற்றிதழை நடத்தியிருக்கிறேன்.

கே.பாலமுருகன் இந்த சிற்றிதழின் ஆசிரியராக உள்ளார். இவரது நாவல் இந்த ஆண்டு ஆஸ்ட்ரோ நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. சிறந்த சிறுகதையாசிரியர். உற்சாகமான இளைஞர். வாசிப்பதிலும்  விவாதிப்பதிலும்  மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

முதல் இதழில் உள்ள முறிவின் நெடிக்குள் ஆண் கால்கள் என்ற கே.பாலமுருகனின் சிறுகதை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக கதையை அவர் கொண்டு செல்லும் விதமும் கதையின் குரலும் தனித்துவமானதாகயிருந்தது.

நவீன கவிதை குறித்த நவீனின் கட்டுரை முழுமையடையாத போதும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது. பாண்டித்துரை, கவிதா மணிஜெகதீசன், ரமேஸ்டே தோழி ஆகியோரின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக சிற்றிதழ் கவிதைகள் என்றே தனித்த வகையிருக்கிறது. அந்த வகைக்குள் சரியாக பொருந்தக்கூடியவை இவை. எனக்கு இதில் எதுவும் அதிகம் வசீகரிக்கவில்லை.



அச்சு அமைப்பும் வடிவாக்கமும் நிறைய மேம்படவேண்டியுள்ளது. முதல் இதழ் என்ற அளவில் இவை பெரிதாக கவனிக்கபடாமல் போயிருக்க கூடும். ஆனால் இன்று வாசிப்பை நெருக்குமாக்குவதற்கு வடிவமைப்பு முக்கிய துணை போகிறது. அதை சரி செய்ய வேண்டியது மிக முக்கியம்.
தொடர்ந்து புதிய படைப்பிலக்கிய முயற்சிகளுடன் அநங்கம் சிறப்பாக வளரக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.





முதல் அநங்கம் இதழின் போது எஸ்.ராமகிருஷ்ணன் அளித்த விமர்சன பத்தி.

நன்றி : அநங்கம் இதழ் 1
கே.பாலமுருகன்