Friday, September 4, 2009

சரியாக இசை கேட்பது பற்றியான உயிர்மை விவாதங்களை முன் வைத்து ( இசை ஒழுங்குகளின் உச்சமும் பாமரர்களும்)

கடந்த உயிர்மை 3 இதழ்களிலும் இசை கேட்பதன் இலச்சணங்கள் குறித்து அதன் தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதைக் வாசித்தேன். ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகள் பலவிதமான அனுபங்களையும் இசை குறித்த மரபறிவை கடந்த அணுகுமுறைகளையும் கற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம். ஷாஜியின் முழு தொகுப்பையும் தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு மலேசியாவில் அது கிடைப்பதற்கான சாத்தியங்களை இன்னமும் கண்டறியவில்லை. முழு தொகுப்பையும் வாசிக்கும்போது ஒட்டுமொத்தமான இசையைப் பற்றிய விரிவான பார்வையும் பயிற்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

மே உயிர்மை இதழில் பிரசுரமான சாருவின் ‘யுவன் சந்திரசேகருக்கான பதில்” கட்டுரையில் மிகவும் கவர்ந்த இசையைப் பற்றியான பல்வேறு புதிய தகவல்களையும் அதன் இணையத்தள இணைப்புகளையும் கொடுத்திருந்தார். இசையைப் பற்றி ஆரம்ப அறிவுள்ள பலருக்கு மேற்கத்திய, தமிழ்நாட்டைக் கடந்த, பூளோக வரையறைகளைக் கடந்த இசைகளை அறிமுகப்படுத்தும் என்பதிலிருந்து இசையின் பாமர இரசனை குறியீடுகளை உடைத்தெறியும் என்றே கருதுகிறேன்.

கடந்த 6 வருடமாக ரஹ்மான் இசைகளைக் கேட்டு வருகிறேன். அவர் பயன்படுத்தும் இசை கருவிகள், அதன் பயன்பாடுகள், எந்த இடத்தில் எந்த இசைக் கருவியை எவ்வளவு நேரம் பாவிக்கிறார் மேலும் அவரின் இசை குழுவில் உள்ளவர்களின் ஆளுமைகளை எப்படி ரஹ்மான் முக்கியத்துவப்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார் என்று மட்டுமே கவனித்துள்ளேன். அதுவும் அரைகுறையாகத்தான். எடுத்துக்காட்டாக ரஹ்மான் இசையில் வெளிவந்த இந்திய தேசியப் பாடலான “ஜனகனமன” பாடல் ஆகும். பல பன்மொழி இசைகலைஞர்களையும் இசை கருவிகளின் ஆளுமைகளையும் ரஹ்மான் இணைத்துள்ளார். பாலைவன பிரதேசத்தின் பின்னனியில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்களையும் இசை கலைஞர்களையும் ஒன்றாக இணைத்து, ரஹ்மான் கடற்கரை பாறையின் மீது நின்றுகொண்டு பியானோ வாசிக்கும்பொது ஒரு நிமிடம் அழுது கரைந்து அந்த இசையில் சரணடைந்துவிடுகிறேன்.

பிரபல பாடகர்களான லதா மங்கேசஷ்கர், பட்டமல், பிம்ஷேன் ஜோஷி, டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, ஜக்ஜித் சிங், உஷ்தாட் ரஷ்சிட் கான், சுருதி சடோலிக்கார், உஷ்தாட் குலாம், சுதா ரகுநாதன், பாலசுப்ரமணியம், ஹரிஹரன், ஆஷா போஷ்லே, கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னிகிருஷ்ணன், நித்யா மேலும் இசை ஆளுமைகளான புல்லாங்குழல் ( ஹரி பிரசாத்) , சரோட் ( உஷ்தாட் அம்ஜாட், அமான் அலி, அயான் அலி) , கடம் ( விக்கு விநாயக்ராம், உமா சங்கர்) , வீனை (விஷ்வ மோஹன் பாட்), சித்ரவீனை ( ரவிகிரன்), சித்தார்( பண்டிட் கார்த்தி குமார், நிலாட்ரி குமார், வைலின் (குமரேஷ், கணேஷ்) என்று பல இசை கலைஞர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவாக தேசிய பாடலைக் கேட்கும்போது ஆரம்ப இசை இரசனையாளர்களின் உடல் சிலிர்த்து வைக்கும். இசையைப் பற்றி ஆழமான நுட்பமான விரிவான அனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களுக்கு இப்படி உடல் சிலிர்த்து இரசிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியபோவதில்லை.

சாரு குறிப்பிட்டது போல இசை கேட்கும் இலச்சணங்கள் குறித்து பொதுவில் எல்லோர் மேலும் வீசுவது, அல்லது பூளோக வரையறை தாண்டாத இசை பைத்தியங்கள் மீது வீசுவதோ எந்த அளவிற்கு ஏற்புடைமை என்று பார்க்க வேண்டியிருக்கிறது. துறை சார்ந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தி சாரு அவர்கள் பல இசை மேதைகளைப் பற்றியும், அந்த இசை நுட்பங்களைப் பற்றியும் எந்த மாதிரியான இசைகளைக் கேட்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். அது அவரின் இசை குறித்தான தேடலையும், அக்கறையையும் காட்டுகிறது. இருக்கட்டும். வாசிக்க தெரிந்த இசை ரசிகர்கள் அவரின் அக்கறைகேற்றவாறு மொராக்கோவையோ, அசிங்கத்தின் தொட்டிலையோ, ராய் இசையையோ கேட்டறிந்து உணரலாம், இதுவரை கேட்டு வந்த அடித்தட்டு “சுரண்டலின் மன்னன்” தேவாவின் இசையை ஒப்பிட்டு காரி உமிழலாம். ஆனால் பாமரர்கள் என்று பல மேதாவிகளால் வகைப்படுத்தப்படும் படிப்பறிவு இல்லாத மக்களிடம் எப்படி இசை குறித்த உங்களின் ஆளுமைத்தனங்களைப் புகுத்த போகிறீர்கள்? எனக்கு தெரிந்த இங்குள்ள(மலேசியாவில்) ஒரு ஊரில் முன்பொரு காலகட்டத்தில் இளையராஜாவைத் தாண்டாத ஒரு மக்கள் கூட்டம் இருந்தது. அதைப் பற்றி ஒரு சிறுகதையே எழுதலாம்.

அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பத்து டுவா என்று சொல்வார்கள். 9 வயதுவரை நானும் அங்குத்தான் இருந்தேன். மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. தமிழர்கள் ஒரு 30 குடும்பங்கள் அங்கு வசித்தனர். எல்லோர் வீட்டிலும் காலையில் இளையராஜாவின் ஏதாவது ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் அப்பொழுது வானொலி இல்லாததால் ஓசியிலேயே இளையராஜாவின் பாடலை (எந்தவித இசை குறித்தான அறிவும் இல்லாதவனாக) கேட்பேன். நாங்கள் காலையில் பள்ளிக்குக் கிளம்ப துவங்கும் அதிகாலை பொழுதிலே ஏதோ ஒரு வீட்டில், “சென்பகமே சென்பகமே” பாடல் சத்தமாக ஒலிக்கத் துவங்கும். மிகவும் குறுகிய பூளோக வரையறையைக் கடக்காத மக்களின் இரசனை இலையராஜாவின் இசையாகவே இருந்தது.

8 மணிநேர தொழுற்சாலை வேலை முடிந்து, ஒரு இயந்திரத்திற்கு நிகராக நேர்த்தியான இயக்கங்களுடன், சலிப்பூட்டும் கருவிகளுடன் இருந்துவிட்டு வீடு திரும்பும் அவர்களின் உலகை (எந்தவித இசை நுட்பமும், பயிற்சியும் அற்றவர்களான) மகிழ்ச்சிப்படுத்தியது, நிம்மதியை ஏற்படுத்தியது, களைப்பை மறக்கடித்தது தமிழ்நாட்டு கலாச்சார இசைவெளியைக் கடக்காத இளையராஜாவின் இசைத்தான். இது வரலாற்றுக் குற்றம் என்றும், முட்டாள் மக்களின் அறிவின்மை என்றும் பாமரத்தன இசை அனுபவம் என்றும் சில கிறுகெடுத்த ஆளுமைகள் வகைப்படுத்தலாம். தவறில்லை. தொழிலாளர்களால் ஆன (பெரும்பான்மை மலாய்க்காரர்களோடு அடிமைத்தனமான சமரசங்களுக்கும் ஆளாகி) இந்த நிலப்பரப்பில் வாழ்ந்திருந்தால், அவர்களின் வாழ்வை அந்த வாழ்வில் அவர்கள் கேட்டுப் பழகிய ஒரு இசையை அந்த இசை கேட்கும் இலச்சணங்களை என்னனென்று சொல்ல வேண்டும் என்று புரிந்திருக்கும்.

இன்று அந்தக் குடியிருப்பு மக்கள் புலம்பெயர்ந்து நகரத்தில் சிதைந்துவிட்டார்கள். ஆளுக்கொரு திசைகளில் வாழ்வு மாற்றம் ஏற்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தற்செயலாக அவர்களின் யாரேனும் ஒருவர் வீட்டிற்குப் போனாலும், இன்னமும் இளையராஜா பாடலை அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் மடத்தனமா? அல்லது பெரிய பெரிய இசைக்கருவிகளில் பாடல் கேட்காத அவர்களின் இழப்புகளா?குற்றமா? நீங்கள் சொல்லும் இசை பயிற்சிகள் ஒரு பொது புத்தியென நிறுவுவது இன்னமும் தனது இசைக் கலாச்சாரத்தில் ஊறிப் போன, அதிலிருந்து அவர்களை மீட்க முடியாத சாத்தியங்களுடன் அதுனூடே வாழ்ந்து ஒன்றாகிவிட்ட ஒரு சமூகத்த்தினரையோ அல்லது ஒரு வகையினரையோ புறகணிப்பதாகக் கருதப்பட வாய்ப்புண்டு.

சாரு சொல்வதைப் போல பன்மொழி, கலாச்சார இசைகளைக் கேட்டு இரசிக்கும் அல்லது பழகும் ஆற்றலும் வாய்ப்பும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குச் சாத்தியப்படும். ஆனால் அதே வேளையில் இந்த வாய்ப்பு கிட்டாமலே இசைக் கேட்பதை வாழ்வின் ஒரு அனுபனமாகவே கருதி இன்றும் அதிலிருந்து வெளிவராத சிலரை “இசை பயிற்சியில்லாத முட்டாள்கள்” என்று சொன்னால், அவர்களை(அப்படிச் சொல்பவர்களை) எதைக் - - - - - - - - - - - - - - - - - - - - - - - சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் ஒரு சிலர் இசை கேட்பதை ஒரு பொழுது போக்காக பாவிக்கிறார்கள். வாழ்வின் ஒரு தருணமாக, அதிசயமாக இசை கேட்பதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த இசைக் கேட்கும் வாழ்வனுபத்தில்கூட, “பயிற்சி” , வழிமுறை” என்று சொல்லி அவர்களை பயமுறுத்துவது போலவே தோன்றுகிறது. மனிதன் இன்னமும் சுதந்திரமாகச் செய்யக்கூடியவையாக அவனவனின் பொழுது போக்குகளைத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் பயிற்சி, ஒழுங்கு, என்று சொல்லி வைத்தால் எல்லாவற்றிலும் தேர்ச்சிப் பெற்ற தேர்ச்சிப் பெறாத என்கிற அளவுகோல்கள் வந்து சிலரை முட்டாளாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இசையைப் பற்றி தெரிந்து கொள்வதும் இசையைப் பற்றி உரையாடுவதும் என்றுமே தவறென சொல்ல முடியாது. இசையை வெறும் நுகர்வு பொருளாகப் பார்க்கும் மனிதர்களும் நியாயமானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இசை பல்வேறு மனிதர்களால் பலவகையில் புரிந்து கொண்டும் அனுபவிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அந்த நிதர்சனத்தில் தற்போதையை “இசை ஒழுங்குகளை” கொண்டு அவர்களை இசைபாமரர்கள் இசை ஆளுமைகள் என்று வகைப்படுத்துவதுதான் அறியாமை என்று நினைக்கிறேன்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com