Tuesday, September 1, 2009

சரியாக காலை 08.05க்கு பள்ளியின் எதிர்புறத்தில் தாக்கப்பட்டேன் (உண்மை சம்பவம்)

காலையில் பள்ளிக்குச் சென்றதும், 8.00மணி போல ஓர் ஆசிரியரும், தோட்டக்காரரும் என்னை யாரோ இருவர் தேடி வந்திருப்பதாகக் கூறினர். வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன். ஒருவர் மோட்டாரில் அமர்ந்திருக்க மற்றொருவன் அருகில் பின்புறமாக திரும்பி நின்றுகொண்டிருந்தான்.

பள்ளியில் பணியில் இருக்கும் ஆசிரியரைச் சந்திக்க சில சட்டத்திட்டங்கள் உண்டு. தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும், பதிவு புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும். இதை ஏதும் செய்யாமல் ஏன் மறைவாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகத்துடன் நெருங்கிச் சென்றேன். இது என் மிகப் பெரிய தவறு. அப்படி சென்றிருக்கக்கூடாது.

திரும்பி நின்றவன் தலையில் கவசம் அணிந்திருந்தான், ஆனால் முகம் தெளிவாக தெரிந்தது. என்னைப் பார்த்ததும் தோளில் கையைப் போட்டு, “உங்களிடம் தனியாக பேசனும் அப்படி வாங்க” என்றான். “நீங்க முறைபடித்தான் சந்திக்கனும்” என்று சொல்லி முடிப்பதற்குள் “புளோக்ல பாத்து எழுது / புளோக்ல எழுதாதெ” என்றவாறு தலையின் இடதுபுறம் ஓங்கி ஒரு குத்துவிட்டான். சுதாரிப்பதற்குள், பள்ளியின் தோட்டக்காரர் சத்தம் போட்டு, பிற ஆசிரியர்கள் வெளியே ஓடி வருவதற்குள் மோட்டாரில் தப்பி ஓடிவிட்டான். எதிர்ப்பாராத விதத்தில் நடந்ததால் அந்த மோட்டாரைத் துரட்டிப் பிடிக்க வேண்டும், அல்லது அடியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற எந்த பிரக்ஞையும் ஏற்படவில்லை. (மோட்டாருக்கு எண்கள் இல்லை) என்னை அவன் அடித்தத்தைப் பள்ளியில் இருவர் நேரடியாகப் பார்த்தனர்.

அவனைப் பார்த்ததும் அவன் யாரென்று தெரிந்துவிட்டது. அவனது கண்களும், அவனது உயரமும், முகமும், ஏற்கனவே எனக்குப் பரிச்சியமானது. மூன்றுமுறை பார்த்திருக்கிறேன். ஆதலால் உடனடியாக அடையாளம்காண்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.

பள்ளியின் வளாகத்தில் பள்ளி நேரத்தில் நடந்ததால், மேலிடம்வரை தகவல் சென்று அதிகாரிகள் வந்துவிட்டனர். என் செய்வேன் என்று அடி வாங்கிய அதிர்ச்சியில் அமர்ந்திருந்தேன். பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள், காவல் நிலையத்திற்கு. . சம்பவத்தைப் பற்றியும் உன்னை அடித்தது யாரென்பதைத் தெரியுமா என்றார்கள். தெரியும், என்னை அடித்துவிட்டுப் போனவனின் பெயர் எனக்கு தெரிந்திருந்ததால், அதையும் குறிப்பிட்டேன். அவன் ஏன் உன்னை அடித்தான் என்ற கேள்விக்கு, சந்தேகத்தின் பெயரில் உருவான காரணத்தையும் மேலும் சில விஷயங்களையும் சொல்லிவிட்டேன். புளோக்கில் எழுதிய எதிர்வினையைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இதைச் சொல்லிவிட்டதால் அடுத்து யார் வருவாரோ?

தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் தெரியாமல், அமர்ந்திருந்தேன். தலையில் அடிபட்டதால் வீங்கியிருந்தது. அநேகமாக நரம்பு பாதிப்பு ஏதாவது இருக்க வேண்டுமா என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுவரை யாரும் இப்படி என்னை அடித்ததில்லை, யாரிடம் வம்புக்கும் நின்றதில்லை. மருத்துவமனையில் இரண்டு மணி நேர சோதனை நடந்தது. தலையை எக்ஸ் ரேய் எடுத்தார்கள். நாளைத்தான் தெரியும். வலி அளவுக்கு அதிகமாக இம்சிக்கிறது.
இனி புளோக்கில் என்ன எழுத போகிறேன்?


1.வடை சுடுவது எப்படி
2.ஆவிகள் உலகம்
3 காதல் கவிதைகள்
4. அன்பைப் பற்றி ஓஷோ என்ன சொல்கிறார்
5. ஏதாவது ஒரு சிறுகதை

இப்படியாக என்னை நான் சுருக்கிக் கொள்ளலாமோ? என்ற கேள்வியும் எழுந்தது. யார் வம்புக்கும் இனி போக வேண்டாம் என்பது போல. வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் சொன்னதும் அவர் பதறி அழுதபோது, இந்த எழுத்துலகை விட்டே போய்விடலாம் என்பது போல் ஆகிவிட்டது. நமது அன்பிற்க்குரியர்வளுக்காக. பிறகு கோழை என்ற வசைக்கும் ஆளாக வேண்டி வருமே. .

அடுத்து போலிஸ் விவகாரம் எங்கு போய் முடியும் என்பதும் தெரியவில்லை. பள்ளி வளாகத்தில் நடந்ததால் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய சூழல். தலைமை ஆசிரியர் கடைசிவரை உடனிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். 3 மணிவரை பசியுடன் அலைந்துகொண்டிருந்தேன். போலிஸில் புகார் கொடுக்கும்போது “இதை நீதிமன்றம் வரை கொண்டு போகிறாயா?” என்று கேட்டார்கள். “ஐயா சாமி வேண்டாம். . “ என்று சொல்லிவிட்டேன். சந்தேகத்தின் பெயரில் பதிவு செய்கிறேன். எனக்கு பாதுகாப்பு வேண்டும். . அவ்வளவே.

குறைந்தபட்சம் என்னை அடிக்க வந்தவன், ஏன் இப்படியெல்லாம் புளோக்கில் எழுதுகிறாய் என்று கேட்டிருக்கலாம், அல்லது பேசியிருக்கலாம். நான் என்ன அப்படியொரு தெர்ரர்ரா?

கே.பாலமுருகன்