Sunday, August 9, 2009

படைப்பாளன் எப்படி உருவாகின்றான்? அசிங்கத்தின் கொண்டாட்டக்காரன் – தோல்விகளை ஒப்புக் கொள்பவன்

படைப்பு / எழுத்து என்பது பிறர் வகுத்து வரையறை அளித்து புள்ளிகள் வழங்குவது போல அவ்வளவு நேர்த்தியானது கிடையாது என்றே நினைக்கிறேன். எழுத்தாளனை உருவாக்கும் பாத்திரம் இருக்கிறதா என்ன? அல்லது “எழுத்தாளர்/படைப்பாளர் ஆவது எப்படி” என்கிற புத்தகத்தை யாரேனும் வெளியீட்டுள்ளார்களா? எழுத்து என்பது தொழில் அல்ல, அல்லது சம்பளமும் கிடையாது. எழுத்து என்பதைச் சிலர் தவம் என்பார்கள் சிலர் தியானம் என்பார்கள் சிலர் ஆன்மீக உணர்வு என்பார்கள், சிலர் கடைமை என்பார்கள், சிலர் தரிசனம் என்பார்கள்.

மேலேயுள்ளபடி எந்தவகையிலும் என்னால் எழுத்தையோ படைப்பையோ பார்க்கவோ உணரவோ முடிவதில்லை. ஒருவேளை சராசரியாக இருந்துவிடலாம், பிறர் போல வாழ்ந்து வளர்ந்து சம்பாரித்து மடிந்து போய்விடலாம்தான். ஏன் இவ்வளவு அழகான, வலி நிறைந்த, என்னால் நிரப்பபட்ட என் பொழுதுகளின் கதைகளை நான் எழுத்தில் பதிக்க வேண்டும்? எங்கிருந்து எனக்கு இத்தகையதொரு படைப்பிற்கான தருணமும் மனமும் தோன்றியிருக்கக்கூடும்? என்று எழுத்தாளன் நினைக்கக்கூடும்.

ஒவ்வொரு எழுத்தாளனும் தான் எப்பொழுது எழுதத் தொடங்கினேன், எந்தச் சம்பவத்திற்குப் பிறகு எழுதத் துவங்கினேன், எந்தப் புறக்கணிப்பின் வலி தாங்க முடியாமல் எழுதத் துவங்கினேன், எந்த அவமானத்தின் இறுகிய பிடியில் தளர்ந்திருந்தபோது எழுதத் துவங்கினேன், எந்தத் தோல்வியின் விரக்தியில் இருந்தபோது எழுதத் துவங்கினேன், எந்தப் படைப்பு என்னை எழுதுவதற்கு உற்சாகப்படுத்தியது, எந்த மனிதன் எனக்குள் எழுத்துலகைக் கொண்டு வந்தான், எந்த வாழ்வு எழுதுவதற்கான தருனங்களைச் சேமித்துக் கொடுத்தது. இப்படியாகக் கேள்விகள் விரியும்போது ஒரு படைப்பாளன் தன்னை அடையாளங்காண்கிறான்.

வெறும் பொழுதுபோக்கிற்கவோ, புகழ் சம்பாரிப்பதற்காகவோ, தன் எழுத்து பலத்தைச் சோதித்துப் பார்க்கவோ எழுதுவது அல்ல எழுத்து. அதையெல்லாம் கடந்து உன்னைப் பற்றி உன் வாழ்வைப் பற்றி உரையாடுவதற்கான பகிர்ந்துகொள்வதற்கான மிகச் சிறந்த இடமே எழுத்தும் படைப்பும்தான்.

உலகிலுள்ள சிறந்த எழுத்தாளர்கள் முதல் கவனமே பெறாமல் மறைந்துபோன எழுத்தாளர்கள்வரை எல்லோரிடமும் எழுத வந்ததற்கான காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை எந்தக் காரணமும் தெரியவில்லை என்றும் சொல்லலாம். ஒரு வெறுமையிலிருந்து அந்த வெறுமையை நிராகரிக்க சிலர் எழுதத் துவங்கியிருக்கலாம். அல்லது தன்னிடம் உள்ள பல மனிதர்களின் விசித்திரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதத் துவங்கியிருக்கலாம்.

புரட்சிக்கரமான எழுத்து வகைகளைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் விளிம்பிலிருந்து தன் சமூகத்தையும் மனிதர்களையும் முன்னெடுக்க வேண்டும் தங்களின் குரல்களை ஓங்கி ஒலித்தல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுத வந்தவர்களாகவும், தன் சமூகம் கடந்து வந்த வன்முறை வாழ்வையும் போராட்டங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று எழுத வந்திருக்கலாம். மொழி புரட்சி, இனப்புரட்சி என்று ஒவ்வொரு துறைகளையும் அதன் விளிம்பி அழிவுகளையும் தன் எழுத்தின் மூலம் ஒலிக்கச் செய்வதற்காகப் பேனாவைக் கையிலெடுத்திருப்பார்கள்.

அரசியல் சார்ந்து எழுத வந்தவர்கள், தன் சார்ந்த கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்கும் அல்லது பிரச்சாரம் செய்வதற்கும் எழுத வந்திருப்பார்கள். அல்லது அந்த அரசியல் கட்சியின் இதழில் கட்சிகளின் செயல்பாடுகளையும் மேல்மட்ட தலைவர்களின் போலி குரலாக இயங்குவதற்கு எழுதத் துவங்கியிருப்பார்கள்.

பொழுதுபோக்கு எழுத்து என்பது நறுக்கு எழுதுவதிலிருந்து துவங்கியிருக்கலாம். எனக்குத் தெரிந்த சில தலைமை ஆசிரியர்கள் எப்பொழுதோ அவர்கள் எழுதிய நறுக்கு ஏதாவது ஒரு நாளிதழில் பிரசுரமாகி, அதை இன்றும் நினைவுக்கூர்ந்து, “நானும் முன்ன எழுதியிருக்கேன், துண்டு சைஸ்ல நறுக்குலாம் எழுதி போடுவேன்” நானும் ஒரு எழுத்தாளன் என்று பெருமைப்பட்டுக்கொள்வார்கள். அல்லது வாசகர் கடிதம் எழுதி பொழுதுகளைக் கழிப்பவர்களும் உண்டு. இவர்களும் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.

ஒரு சிலரிடம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்க நேர்ந்தால் அவர்கள் அடுக்கிக்கொண்டே போகும் பதில்களைக் கேட்டு ஒருவேளை இருதய பலவீனம் உள்ள எழுத்தாளர் என்றால் அப்பொழுதே இறந்துவிடக்கூடும்.

1. சமூகத்தைத் திருத்த வேண்டும்
2. சமூகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும்
3. சமூகத்திற்கு நன்னெறிப்பண்புகளைப் புகட்ட வேண்டும்
4. சமூகத்திற்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்
5. சமூகத்தை மேம்படுத்த வேண்டும்
6. . . . . . சமூகம் சமூகம் சமூகம்

படைப்பாளனை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு வெறும் சமூக முன்னேற்றத்தை முன்னிறுத்தி தனது எழுத்தை, “கா. . இ. . ம்” போன்ற தன்முனைப்பு பயிற்சிகள் வழங்கி வியாபாரம் செய்யும் அளவிற்கு தள்ளிவிடும் அபாயக் கருத்துகளைக் கொண்டவர்களைக் கண்டால் பெரும்பாலும் நான் படைப்பு குறித்து அல்லது படைப்பாளன் குறித்து பேசுவதில்லை. பிறர் நினைப்பது போல பிறரின் தேவைக்காகவோ திருப்திக்காகவோ எழுதி வாசகர் கூட்டத்தையும் புகழையும் சம்பாரிக்க நினைக்கும் எழுத்தாளன் அந்த வாசகர்கள் இல்லாமல் போய்விட்டால் அவன் எழுத்தும் இறந்துவிடக்கூடும்.

சமூகத்திற்குப் பிரச்சாரம் செய்வதற்கு நிறைய களங்களும் வாய்ப்புகளும் இருக்க, தனது வாழ்வை எழுத வருபவனிடம் ஒரு பேனா அன்பளிப்பாகக் கொடுத்து என் பிறந்தநாளுக்கு ஒரு கவிதை எழுது என்று கொடுத்தால், ஒரு படைப்பாளனின் வாழ்வில் அவனது ஆளுமையில் நிர்ப்பந்திக்கக்கூடும் வன்முறையென்றே சொல்லலாம். தலைவரின் பிறந்தநாளுக்குக் கவிதை எழுதுதல், கழக நிகழ்வுகளுக்கு தட்டியெழுப்பும் வசனங்களை எழுதுதல், துதிப்பாடும் கேவலமான வேலைக்காக தன் எழுத்தை உபயோகிப்பது என்று எழுத்தைக் கொண்டு பிழைப்பது எழுத்திற்குரிய மரியாதை கிடையாது.

இலக்கியப் போட்டிகளில் பங்கெடுப்பதற்காகவே எழுத வருபவர்களும் பணத்தை முன்னிறுத்தி தன்னைச் சுரண்டி அர்ப்பணிப்பதற்குச் சமம். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அல்லது அங்கீகரித்துக் கொள்ளவும் சிலர் போட்டிகளில் பங்கெடுத்து தன் படைப்பின் பலத்தைப் பரிசோதித்துக் கொள்ளக்கூடும். பிறருடன் ஒப்பிட்டு பரிசோதித்துக் கொள்வதுதான் படைப்பா? இதையும் வியாபாரம் என்று சொல்லத்தான் வேண்டும். மேலும் இந்த வியாபாரத்தைப் பல எழுத்தாளர்கள் செய்து கடந்துவந்துவிட்டார்கள். சிலர் இன்றும் தைரியமாக இலக்கிய போட்டிகளைப் புறக்கணித்து வருகிறார்கள். தன் எழுத்திற்கான ஒரு களம் உருவான பிறகு பிறர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று போட்டிகளுக்குக் கதைகளை அனுப்பி பரிசுக்காகத் தவம் கிடப்பவன் எழுத்தாளனா என்று கேட்கத் தோன்றுகிறது. 2007 தொடங்கி 2008வரையிலும் நான் பல இலக்கிய போட்டிகளில் பங்கெடுத்து பல பரிசுகளும் பெற்று வந்தேன். எழுதத் துவங்கி தீவிரமாக அங்கீகாரத்திற்கா அலைந்துகொண்டிருந்த காலக்கட்டம் அது. எழுதி வெற்றிப்பெற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் எழுத்து அரசியல் குறித்தும் எழுத்துலக தண்ணுர்வுகள் குறித்தும் எந்தவித ஆழமான புரிதலும் இல்லாமல் போட்டிப் போட்டு என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன்.

புதியதாக எழுத வரும் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இலக்கிய போட்டிகளின் மோகத்திலும் அது கொடுக்கும் புகழிலும் சிக்கிக் கொள்வது யதார்த்தமானது. பல மூத்த எழுத்தாளர்கள் இன்றும் இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசுவரைப் பெற்றுக் கொண்டு ஆதரவுடன் வீடு திரும்புகிறார்கள். நீதிபதியாகப் பணியாற்றியவர்களும் மறு வருடத்தில் அதே போட்டியில் பங்கெடுத்து போட்டிப் போடுவது எதற்காக என்று கேட்கத் தோன்றுகிறது. (இந்தக் கேள்வியைக் குற்றம் என்றால் மன்னிக்கவும்) ஒருவேளை பொழுது போக்கிக் கொள்வதற்காக அல்லது தன்னை மேலும் மேலும் நிறுவிக் காட்ட வேண்டும் என்பதற்காகவா அல்லது நான் இன்னும் தொலைந்துபோகவில்லை என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவா.

(ஆமாம். . யார் கலந்துகொள்ள வேண்டும் - கூடாது என்று நிர்ணயிக்க நீ யார்)

நான் நிர்ணயிக்கவில்லை. இதைத் தவறென்றும் கண்டிக்கவும் இல்லை. சிலருக்கு போட்டிகள் இன்னமும் ஏதோ ஒரு அங்கீகாரத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது, ஏதோ ஒருவகையில் அவர்களின் இருத்தலைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. போட்டிகளை நிராகரிக்க ஒருவனுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே போல அதைப் பின்பற்றவும் மற்றவனுக்கு உரிமை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் பொதுபுத்தி சார்ந்து மதிப்பீட முடியும் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால் நல்லது. யார் படைப்பாளன் எதற்காக அவன் படைப்பாளனாக தன்னை ஆக்கிக் கொள்கிறான் என்பதையும் நிர்ணயம் செய்து அவனது இருப்பை அடையாளப்படுத்தபோவதும் காலம்தான்.

பிறருக்குத் துதிப்பாடவோ பிறரை மகிழ்ச்சிப்படுத்தவோ, பிறரின் எதிர்ப்பார்ப்புகளுக்கு உடன்பட்டு எழுதுவதோ, பிறருக்காக தன் எழுத்தை வடிவமைத்துக் கொள்வதோ, சுயத்தை இழந்து, ஒரு சந்தை வியாபாரி போல ஆகிவிட்டதற்கான அடையாளம்.



அன்மையில் மறைந்த எழுத்தாளரும் கவிஞருமான “கமலாதாஸ்” அவரின் எழுத்து வாழ்வை இப்படிச் சொல்கிறார்,

“எனக்கு அன்பு கிடைத்திருக்குமானால் ஒருபோதும் நான் எழுத்தாளராக ஆகியிருக்கவே முடியாது. நான் வெறும் மகிழ்ச்சியான மனுஷியாக மட்டுமே இருந்திருப்பேன். எனக்குள் இருந்த ஏதோ ஒரு பலவீனமே நான் எழுதத் தொடங்க் காரணமாயிருந்தது”

தனது வாழ்நாள் பலவீனங்களின் இரைச்சல்களைக் கட்டுப்படுத்த எழுதத் துவங்கும் எழுத்து ஆளுமைகளும் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் எழுத்து சமூகத்திலிருந்து தொடங்கவில்லை, அவர்களின் தோல்விகளிலிருந்து அவர்களின் பலவீனங்களிலிருந்து துவங்குகிறது.

அதேபோல கமலாதாஸ் பெண்ணடிமைத்தனங்களைக் கண்டித்தும் தன் எழுத்தின் மூலம் புரட்சியை ஏற்படுத்தியவர். அவர் எழுத்தின் புரட்சியைக் கண்டு மத ஆதிக்கத்தால் நிறுவப்பட்டிருந்த சமூகம் கடுமையான எதிர்வினைகளைத் தூக்கி வீசியது.

“என் தம்பியின் சட்டையை அணிந்துகொண்டு தலைமுடியை மிகக்குட்டையாக வெட்டிக் கொண்டு என் பெண்மையைத் தவிர்த்தேன், புடவை அணி, பெண்னாயிரு, மனைவியாயிரு என்றார்கள் அவர்கள். பின்னல் வேலை செய், சமையற்காரியாய் இரு, வேலைக்காரர்களுடன் சண்டையிடுபவளாய் இரு, கத்தினார்கள், வகைப்படுத்துவோர்” – கமலாதாஸ்.

புரட்சிகளுக்கு எதிராக வீசப்படும் கூச்சல் குரல்கள் எப்பொழுதும் வரலாற்றில் மங்கிப் போய், காணாமல் போய்விடும். புரட்சியை ஏற்படுத்திய ஆளுமைகளின் நினைவுகள்தான் நிலைத்திருக்கும். ஒரு அன்பைத் தொலைப்பதிலிருந்து, ஒரு அன்பு கிடைக்காமல் போன விரக்தியிலிருந்தும் ஒரு படைப்பு தொடங்கலாம் என்று எழுதியும் வாழ்ந்தும் சென்றவர்கள் ஏராளம்.

கடைசிவரை தன்னை தன்னாலே அடையாளம்காண முடியவில்லை, “எனக்கு யாரும் இல்லை நான்கூட” என்று இருத்தலைத் தொலைத்துவிட்டு தனிமையின் உக்கிரத்தில் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் நகுலன் தொடங்கி விரக்தியின் உச்சத்தால் மனச்சிதைவால் தற்கொலை செய்துகொண்ட கவிஞர் ஆத்மாநாம் வரையில் , எழுத்தாளன் மிகப் புனிதமானவன், எழுத்தாளன் சீர்த்திருத்தவாதி மட்டுமே, எழுத்தாளன் ஒரு தியாகி என்று கூச்சல்போடும் அனைவரின் குரல்கலையும் விழுங்கி எழுத்தாளனின் மறுபக்க பலவீனங்களையும், தோல்விகளையும் தைரியமாகக் காட்டிய பல எழுத்தாளர்கள் இருக்கவும் செய்கிறார்கள்.
அப்துல் ரகுமானின் “ஆலாபனை” கவிதை தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வரிகளைப் படித்திருக்கிறேன்:

“உன் மனத்தின் இருண்ட
அறைகளுக்கும் அங்கே உலவும்
பேய்களுக்கும் நீ பயப்படுகிறாய் அல்லவா?

உன் மனம் உன் இரகசியங்களின்
குப்பைக் கூடையாக
இருக்கிறதல்லவா?

உன் மனம் பயத்தினாலும்
கூச்சத்தினாலும் உன் இரகசியமான
ஆசைகளை யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைக்கும் அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா?

உன் மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால் அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா?

உனக்கொரு அரியாசன வேண்டி
பொய்முகமூடியை அணிந்துகொண்டு
திரிகிறாய் என்று உனக்குத் தெரியுமல்லவா?

பிறகேன் இத்துனை நாடகம் இத்துனை நடிப்பு?
உத்தம புத்திரனென துடித்து புலம்புகிறாய்?

நம்முடைய முகவரிகள் பொய்யானவை
நம்முடைய முகங்கள் பொய்யானவை.

(குறிப்பு: உத்தமன் போல ஆரவாரம் செய்பவனின் மனதின் ஆழத்தில் அவன் ஒளித்து வைத்து ஆடும் அவனது ஆசைகளும் உணர்வுகளும் பொய்களும் வெளிப்படும்வரை அவன் ஆடுவது ஆட்டமே, ஆடிவிட்டுப் போகட்டும்)

சமூகம் அசிங்கம் என்று தூக்கி எறிந்துவிட்டதையும் படைப்பாக்கும் படைப்பாளனின் மனம் எல்லாவற்றையும் கொண்டாடக்கூடியது. ஜெயமோகன் சொல்வார், “நீக்க நீக்க நீக்கமர நிலைத்திருக்கும் அழுக்கையும், நீக்குவதன் கொண்டாட்டமாக ஆக்கிக்காட்டுவான் படைப்பாளன்.”

ஆக்கம்: கே.பாலமுருகன்