Thursday, May 14, 2009

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி நிருபர்கள் மூவர் கைது: நாடு கடத்தப்படுவார்கள்?

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் திருமலையில் கைது: உடன் நாடு கடத்தப்படுவார்கள்?

சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர சனிக்கிழமை(கடந்த வாரம்) இரவு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்படுவதாகவும், இவர்களுடைய விசா இரத்துச் செய்யப்பட்டு மூவரும் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை 'சனல் - 4' தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது.

இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்ததுடன், சிறிலங்கா அரசுக்கும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

வவுனியா முகாம்களில் உள்ளவர்களின் அவலமான நிலைமைகள் தொடர்பாகவும், அங்குள்ள இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் இதில் வெளியான தகவல்கள் அனைத்துலக ரீதியாகவும் சிறிலங்காவுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்ப்பதாகவே இருந்தது.

தான் கைது செய்யப்படுவதற்கு இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியமைதான் காரணமாக இருக்க வேண்டும் என கைது செய்யப்பட்ட சில நிமிட நேரத்தில் ஏ.பி. செய்தி நிறுவனத்துடன் தனது செல்லிடப்பேசி மூலமாகத் தொடர்புகொண்ட நிக் பட்ரன் வோல்ஸ் தெரிவித்தார்.

முகாம்களில் போதிய உணவு, குடிநீர் போன்றவை இல்லாததது தொடர்பாகவும், இறந்தவர்களின் உடலங்கள் ஆங்காங்கே காணப்படுவது பற்றியும் பெண்கள் அவர்களுடைய குடும்பங்களில் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்குள்ளாவது தொடர்பாகவும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விபரிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினரால் கொழும்புக்குக் கொண்டுவரப்படும் இவர்களுடைய விசா அனுமதி இரத்துச் செய்யப்பட்டு அவர்கள் விரைவாக நாடு கடத்தப்படலாம் என தகவலறிந்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளையில் நிக் பட்ரன் வோல்சின் விசா அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயக்கோன் அறிவித்திருக்கின்றார்.

இலங்கை செய்திகள்

பாரதிராஜா பேச்சு: மகாத்மாகாந்தி நாடு ஈழம்தான்

மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டென்றால் அது ஈழம்தான்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு
இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மை கருதிதான் கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம் என சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்ற திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பாரதிராஜா மேலும் பேசியதாவது:-

இதுவரை நான் அரசியல் மேடையில் பேசியது கிடையாது. வாழ்க்கையில் நான் பொய்பேசி பழகாதவன். அதனால்தான் நான் இந்த மேடையில் நின்றுகொண்டு இருக்கிறேன். அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.

பிரபாகரன் சாதாரண மனிதன் அல்ல. அவன் உண்மையான தமிழன். மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டு என்றால் அது ஈழம்தான். இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன் சிங் வாய் அசைப்பார். இலங்கை இராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது. அதனால் தான் அவரை சார்ந்தவர்களை இலட்சக்கணக்கில் இலங்கை இராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.

போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை இரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.

1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் பேசியதாவது:-

நாங்கள் பல போராட்டங்கள் மூலம் எங்கள் ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 16 தொகுதிகளிலும் டெபாசிட் கிடைக்காது. காங்கிரஸ் சின்னமான கையில் ஆயுள் ரேகை இல்லாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-

தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். நமது இராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி தான். 21/2 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

இலங்கை செய்திகள்